எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, October 31, 2009

பட்டூரா சாப்பிட வாங்க!

சாப்பிட வாங்கனு பேரை மாத்தியதும் இதைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிடுச்சே, இன்னும் எதுவுமே போடமுடியலையேனு இருக்கு. சீக்கிரம் போடறேன். முதல்லே பட்டூரா பார்த்துட்டு, ரொம்ப நாளா பட்டூராவுக்கு மாவே பிசையலை. அதனால் அதை முடிச்சுப்போம். அதுக்குள்ளே நவராத்திரி வந்து, தீபாவளி வந்துனு எல்லாம் ஆயிடுச்சு. இப்போ தீபாவளி பட்சணமும் தீர்ந்திருக்குமே. அதனாலே டிபன் ஏதானும் பண்ணித் தானே ஆகணும்?? முதல்லே பட்டூராவுக்குத் தேவையானது மைதா மாவு . அரை கிலோ எடுத்துக்குங்க. வெண்ணெய் நூறு கிராமாவது வேணும். டால்டா வேண்டாம். வேறே வழியில்லைனா டால்டா. உப்புக் கொஞ்சம் போல. தயிர் அரை கப்.

முதலில் அரை ஸ்பூன் உப்பை ஒரு வாயகன்ற பேசினில் போட்டு, வெண்ணெயையும் போட்டுக் கையாலோ அல்லது ஒரு மரக் கரண்டியாலோ நல்லாக் கலக்குங்க. விடாமல் ஒரே பக்கமாகவே இருபது நிமிஷமாவது கலக்கணும். வெண்ணெய் எல்லாம் உப்போடு கலந்து மேலே குமிழ்கள் வர ஆரம்பிக்கும். இப்போக் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டுக் கலக்குங்க. மைதாவும், வெண்ணெயும் ஒருசேரக் கலக்கணும். நன்கு கலக்கவும் ஒரு பத்து நிமிஷம் இப்படிக் கலந்ததும், தயிர் சேர்த்துப் பிசையணும். அரை கப் தயிர் அநேகமாய்ச் சரியாய் இருக்கும். இல்லாட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிசையவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியால் மாவை மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு உப்பிக் கொண்டு வந்திருக்கும். அப்படி வரலைனால் இன்னும் சிறிது நேரம் வைங்க. அநேகமாய் உப்புக் கொண்டு வந்துடும். அதை எடுத்து மறுபடிப்பிசைந்து மூடி வைங்க. இப்படி இரண்டு முறையாவது ஆனதும், மாவு தயார் பூரி பொரிக்க.

கடாயில் எண்ணெயை வைத்து, தேவையான அளவு சைசில் மாவை உருட்டிக் கொண்டு பூரியாக வட்டமாக இடவும். எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக உப்பிக் கொண்டு வெள்ளை வெளேரெனச் சூடான பட்டூரா தயார். ஊசியால் குத்தினாலோ,கையால் உடைத்தாலோ ஒழிய உப்பிக் கொண்டது அமுங்காது எத்தனை நேரமானாலும். இதற்குத் தொட்டுக்கத் தான் முதல்லேயே பண்ணி வச்சுட்டோமே சனா. அதை எடுத்துச் சூடு பண்ணிக்குங்க. சனா, பட்டூரா தயார். இதைத் தான் ஓட்டலில் ஒரே ஒரு பூரியும் அரைக் கரண்டி சனாவும் கொடுத்துட்டு நூறு ரூபாய் பில் போடுவாங்க. வீட்டிலேயே செய்தால் எவ்வளவு லாபம்???


குறைந்த பட்சமாத் தொடர்பவர்களாவது சாப்பிடுங்கப்பா! நன்றி. அடுத்ததுக்குக் கொஞ்சம் மெதுவா வரேன்.

Thursday, October 1, 2009

நவராத்திரிக்குருமாவா, நவரத்தினக் குருமாவா?


நவராத்திரிக் குருமா!

நவராத்திரியிலே எல்லாருமே சுண்டல் வசூலுக்குப்போயிருப்பீங்க. இல்லையா?? உங்க வீட்டிலே கொலு வைக்காட்டியும், எப்படியாவது சுண்டல் பொட்டலங்கள் சேர்ந்துவிடும். அதைச் சாப்பிடவும் மனசு வராது, பயமா இருக்கும். வாயுத் தொந்திரவு அல்லது காரம் ஒத்துக்காதேனு. அதோட நவராத்திரிச் சுண்டல் வசூல் செய்துட்டு வீட்டுக்கு வரவும் நேரம் ஆயிடும். வந்து ராத்திரிக்கு என்ன பண்ணறதுனு சிலர் யோசிப்பாங்க.

முன் கூட்டியே திட்டம் போட்டு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு சப்பாத்தியைச் செய்து வச்சுட்டுப் போயிடுங்க வசூலுக்கு. போதுமான சுண்டல் வசூல் ஆனதும் நேரே வீட்டுக்கு வந்துடுங்க. கூட வரும் தோழி கூப்பிட்டாலும் நோ, இனிமேல் நாளைக்குத் தான்னு சொல்லிடலாம். இப்போ ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு சுண்டலாய் இருக்குமே. சிலர் வீட்டிலே இனிப்புச் சுண்டலாய்க் கூட இருக்கும். எல்லாச் சுண்டலும் இப்போல்லாம் சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் தான் தந்திருப்பாங்க. எல்லாம் சேர்த்து ஒரு கப் வரும்.

நீங்க சுண்டல் வசூலுக்குப் போகும்போது ரங்கு வீட்டிலே சும்மாத் தானே ஈ ஓட்டிட்டு இருப்பார். அவரைத் தக்காளியும், வெங்காயமும் நறுக்கி வைக்கச் சொல்லிட்டுப் போங்க. நறுக்கி வச்சிருப்பார். வந்து ஏதோ புதுசாப் பண்ணித் தரப் போறீங்கனு ஆவலாவும் இருப்பார். அவர் கிட்டே ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம். ஃப்ரிஜைக் குடைஞ்சு பார்த்து முதல்நாள் இட்லிக்குத் தொட்டுக்க அரைச்ச தேங்காய்ச் சட்னி இருக்கா பாருங்க. இல்லாட்டியும் பரவாயில்லை. சுண்டலிலேயே தேங்காய் போட்டிருப்பாங்களே. வேறே என்ன சட்னி இருக்கு? தக்காளி, வெங்காயம், புதினா?? எதுவா இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லையா? காலம்பர வச்ச குழம்பு? ரசம்? அது போதும்!

இப்போ நீங்க செய்ய வேண்டியது கொஞ்சமாவது பந்தா காட்டணும். அப்பா, ஒரே அலுப்பு, எல்லா வீட்டுக்கும் போயிட்டு வரதுக்குள்ளே முடியவே இல்லைனு சொல்லிக்கணும். நிஜமாவே முடியாதுதான். என்றாலும் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாச் சொல்லிக்கணும். அப்புறம் மெதுவா ரங்குவையும், குழந்தைங்க இருந்தா அவங்களையும் பார்த்து ஏதாவது சாப்பிட்டீங்களானு அன்போட கேட்கணும். "இல்லை, உனக்காகத் தான் வெயிட்டீஸ்"னு பதில் வரும். அவங்க நினைப்பு உங்களை சந்தோஷப் படுத்தறதா. என்றாலும் அதைக் காட்டிக்காமல் அடுப்படிக்குப் போங்க. அடுப்பிலே வாணலியை வச்சு, எண்ணெயை ஊத்துங்க. ஜீரகம், சோம்பு(பிடிச்சா) தாளிங்க. சோம்பு பிடிக்கலைனா வேண்டாம். அப்புறம் மஞ்சள் பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க. தக்காளியையும் சேர்த்து நல்லா வதக்கவும்.

இரண்டும் வதங்கியதும், மொத்தமாய் வசூலான சுண்டலை அதிலே கொட்டவும். இனிப்புச் சுண்டல் இருந்தாலும் கவலை இல்லை. இந்த மாதிரி மசாலா ஐடங்களுக்குக் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் நல்லாவே இருக்கும் ருசியும், மணமும். காலம்பர வச்ச சாம்பாரோ, ரசமோ, அல்லது வத்தக் குழம்போ இருந்தால் அதையும் அதில் சேர்க்கலாம். இப்போ முக்கியமாய்க் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுக்கு மேலே உப்போ, காரமோ போட்டீங்க தொலைஞ்சீங்க நீங்க! அதனால் கவனமாய் அதைத் தவிர்க்கவும். காலைக் குழம்பு எதுவும் இல்லையா? பரவாயில்லை. மிச்சம் வச்சிருக்கும் சட்னியைத் தேவையான அளவு சேர்க்கவும். அதுவும் தேங்காய்ச் சட்னியும், தக்காளிச் சட்னியும் இருந்தால் சூப்பரா இருக்கும். அதுவும் இல்லையா? எதுவுமே வேண்டாம். அப்படியே நல்லாக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, கரம் மசாலாப் பொடியைத் தூவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி, நறுக்கிய வெங்காயம் போன்றவைகளைப் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.

புதுசா விருந்தினர் வந்தால் அவங்களுக்குச் செய்து போட்டு இது தான் நவரத்தினக் குருமா, சீச்சீ,நவராத்திரிக்குருமானு சொல்லிடலாம். கணவர் கிட்டே இன்னிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனுனு சொல்லிடலாம். நவரத்தினக் குருமா ஒரு ப்ளேட் சுமாராக 75ரூக்கு மேல் என்று விசாரித்ததில் தெரிய வந்தது. அதனால் அதுக்கான பைசாவை முக்கியமாய் உங்க ரங்குவிடமிருந்து வசூலிக்கவும். சுண்டல் வசூலைவிட இந்த வசூல் முக்கியம். நினைவிருக்கட்டும்.