எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, March 25, 2011

கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு!


ஜெயஸ்ரீ சொன்ன மங்களூர் கொஜ்ஜுவைப் பத்தி இப்போப் பார்க்கலாமா?? பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க. ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார். அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர். பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம். இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப். தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும். எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய். புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும். வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும். இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.

ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.

Thursday, March 24, 2011

நீங்க எனக்கு பிரண்டையா இல்லையா?

ஹிஹிஹி, சிநேகிதர்களைப் பிரண்டை எனக் கேலியாகச் சொல்லுவாங்க. அதுவும் எதனால் என்றால், அந்தக் காலங்களில் ஆங்கிலம் அதிகம் படிக்காத பாட்டிங்க இருந்தாங்க இல்லையா? அவங்க கிட்டே ஃபிரண்ட் என்று சொன்னால், அவங்க பிரண்டை என்றே சொல்லுவாங்க. என் அப்பாவோட சித்தியும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க. ஆனால் இங்கே சொல்லப் போறது பிரண்டை என்னும் வச்சிரவல்லி. ஹிஹி, என்ன ஒரு பெண்ணோட பேர் மாதிரி இருக்கா?? வச்சிரவல்லி என்றும் ஒரு பெயர் பிரண்டைக்கு உண்டு. இதோ இதான் காய். இங்கே மார்க்கெட்டில் கிடைக்குது. வீட்டிலேயே நட்டிருந்தோம். கொடி வகை. வேலை செய்யற ஆளுங்க எப்போ எப்படி வெட்டினாங்கனு புரியலை. சித்தரத்தையையும் காணோம், இதையும் காணோம். இரண்டையும் திரும்ப வச்சிருக்கோம், வரணும்! சரி, சரி, இதோ விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

பிரண்டை வாங்கிக்குங்க. குறைஞ்சது நாலு பேர் உள்ள குடும்பத்துக்குக் கால் கிலோ வேண்டும். வாங்கி நல்லாக் கழுவி, கணுவினருகே வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைத் துண்டாக நறுக்கி வைச்சுக்கவும்.

மி.வத்தல் உங்கள் காரத்தின் தன்மைக்கேற்ப பத்து அல்லது பனிரண்டு வைச்சுக்கலாம். பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உ.பருப்பு முறையே இரண்டு டீஸ்பூன், புளி ஒரு நெல்லிக்காய் அளவு. உப்பு தேவையான அளவ. நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன்.


வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில்போட்டுப் பொரித்துக்கொண்டு மிளகாய் வற்றலையும் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டைகளைப் போட்டு நன்கு வதக்கவும். புளியையும் இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு உப்புச் சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கையிலேயே தனியாக எடுத்து வைத்த கடுகு,உ.பருப்பைச் சேர்க்கவும். ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் பின்னர் வெளியே எடுக்கவும். சூடான சாதத்தில், நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு பிரண்டைத் துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக் கோளாறுகள், ருசியின்மை, பசியின்மை ஆகியனவற்றுக்கு அரு மருந்து. வயிறு உப்புசமாக இருந்தாலும் சரியாகும்.

இதன் கூடவே தொட்டுக்க சைட் டிஷாக மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு பயன்படுத்தலாம். மோர்ச்சாறு சீக்கிரம் செய்ய முடியும். கெட்டியான புளித்த மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துக் கரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், மி.வத்தல், ஓமம், து,பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கரைத்த மோரை ஊற்றவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். இதை எந்தத் துவையல் அரைத்தாலும் சைட் டிஷாகப் பயன்படுத்தலாம். துவையல் என்பது முக்கியமான காய்கள், அல்லது பொருளை நன்கு வறுத்து மிளகாய் வற்றலோடு சேர்த்துச் செய்வது. சட்னி என்பது எல்லாவற்றையும் பச்சையாக வைத்துச் செய்வது. சட்னியில் தாளிதம் அரைக்க வேண்டாம். துவையலில் தாளிதத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

Thursday, March 17, 2011

சப்பாத்தி சாப்பிடலாமா?

தினம் தினம் என்ன பண்ணறது சப்பாத்திக்கு?? அதுவும் தினசரிச் சாப்பாட்டிலே சப்பாத்தியும் உண்டுங்கறச்சே/ பாலாஜி அங்கிள் சொன்னாப்போல் ஆவக்காய் ஊறுகாயும், வெண்டைக்காய்க் கறியும் நல்லாத் தான் இருக்கும். ஆனால் வெண்டைக்காயைச் சாதாரணமாய்ப் பண்ணறாப்போல் பண்ணாமல் கொஞ்சம் வித்தியாசமாப் பார்ப்போமா??

வெண்டைக்காய் உங்க தேவைக்கு ஏற்பக் கால் அல்லது அரை கிலோ. குடமிளகாய் நூறு கிராம், தக்காளி பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் இரண்டு. மி.பொடி, ஒரு டீஸ்பூன், தனியா பொடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன், ம.பொடி, உப்பு, சீரகம், கடுகு தாளிக்க. அல்லது சாம்பார் பொடி இரண்டு டீ ஸ்பூன். எண்ணெய்.

வெண்டைக்காயை ரொம்பப் பொடியாக நறுக்காமல் ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். அதே அளவுக்குக் குடை மிளகாய், தக்காளியையும் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் வைச்சு, கடுகு, சீரகம் தாளிக்கவும். பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டுச் சற்று வதக்கவும். குடைமிளகாய்த் துண்டங்களையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கலக்கும் வரை வதக்கிக் கொண்டு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் அல்லது சாம்பார் பொடியும் சேர்த்து, நறுக்கிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். மூடி வைக்க வேண்டாம். அப்படியே சற்று நேரம் நன்கு கலந்து கொண்டு வதக்கிக் கொள்ளவும். கறி நன்கு வதங்கியதும், சூடாகச் சப்பாத்தியுடன் பரிமாறவும். இதுக்கு வெங்காயமோ, பூண்டோ தேவை இல்லை.

பீட்ரூட்டைச் சப்பாத்திக்கு வேண்டாமே!

பஸ்ஸிலே சப்பாத்திக்குத் தொட்டுக்க பீட்ரூட் தான் அருமையான இணை உணவுனு நம்ம அநன்யா அக்கா சொல்லி இருக்கிறதை எல்லாரும்/சிலர்?? ஆமோதிக்கிறாங்க. என்னப் பொறுத்தவரையில் பீட்ரூட் என்பது பச்சையாய்ச் சாப்பிடும் ஓர் காய். அதைக் காரட், தக்காளி போன்றவற்றுடன் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ சாலடாகச் சாப்பிடலாம். ஆனால் சில சமயம் வேறே வழி இல்லைனா பண்ணித் தான் ஆகணும். போரடிக்கும், வேறே வழியே இல்லை. எல்லா ஹோட்டலிலும் தினம் போடும் ஒரு கறியில் பீட்ரூட் தமிழ்நாடு பூராவும் அநேகமாய் எல்லா ஹோட்டல்களில் தினமும் பீட்ரூட் கறி இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர். நாம போரடிச்சா பீட்ரூட்டைக் கறி பண்ணிச் சாப்பிட்டுக்கலாம், என்னிக்கோ. அது கூட அன்னிக்குனு பார்த்து சாப்பாடே வேண்டாம்னு உங்க வீட்டிலே எல்லாரும் உண்ணாவிரதம் இருக்க நேரிடும். இருந்தாலும் முதல்லே பீட்ரூட் கறியை வெங்காயம் சேர்த்தும், சேர்க்காமலும் எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாம். இது சப்பாத்திக்கெல்லாம் இல்லை. சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் அடுத்துத் தரேன் பாருங்க. என்ன வெங்காயம்?? பூண்டு?? அதெல்லாம் எதுக்கு வேண்டாம். அது இல்லாமலேயே.

பீட்ரூட் கால் கிலோ: போதுமானு கேட்காதீங்க. இதைச் சாப்பிடவே நீங்க வாசல்லே போர்டு வைக்கணும். வெங்காயம் சேர்த்தால் பெரிய வெங்காயம் இரண்டு. பொடிப் பொடியா நறுக்கி வைங்க. நினைவா ரங்க்ஸை வெங்காயம் உரிச்சு நறுக்கி வைக்கச் சொல்லுங்க. எதுக்குனு சொல்லவேண்டாம். சமையல்லே பீட்ரூட்னு தெரிஞ்சா எங்கேயானும் வெளியே சாப்பாடுனு ஓடிட சான்ஸ் இருக்கு. பச்சை மிளகாய், இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு ஏற்ப. கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்க எண்ணெய். இந்தப் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை மிக்சியிலோ அம்மியிலோ கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதைத் தனியா வச்சுக்கோங்க.

இப்போ பீட்ரூட்டை நல்லா அலம்பி முழுசா, கவனிக்கவும், முழுசா குக்கரில் வேக வைக்கவும். வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு. அதனாலே குக்கரில் வேக வைச்சுடுவேன். அப்புறம் தோலை உரிச்சா உ.கி. தோல் மாதிரி வந்துடும். இப்போ நறுக்கிக்குங்க. வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் தாளிக்கத் தேவையான அளவுக்கு ஊற்றினால் போதும். கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை போடவும். வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் போடலை என்றால் நறுக்கி வைச்ச பீட்ரூட்டைப் போட்டு உப்புப் பொடியைச் சேர்க்கவும். மூடி வைச்சுக் கொஞ்ச நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் கரகரப்பாய் அரைச்ச ப.மி. இஞ்சி, தே,து, சேர்க்கவும். நன்கு கிளறவும். ஒரு ஐந்து நிமிஷம் விடாமல் கிளறியதும் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

இதை விட்டால் பீட்ரூட்டைத் துருவிப் பால் சேர்த்தோ, சேர்க்காமலோ அல்வா பண்ணலாம். ஜாம் மாதிரிக் கிளறி வைச்சுக்கலாம். முகத்துக்கு அழகு சாதனமாய்ப் பயன்படுத்தலாம்.