எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 2, 2011

நாரத்தை உணவுகள் சில.


நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காது. ஆனால் நாரத்தங்காய் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்? உணவு செரிமானம் ஆகத் தினமும் நாரத்தையை ஏதேனும் ஒரு உருவில் சாப்பிட்டு வரலாம். முதலில் நாரத்தங்காய்ப் பச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாமா? நன்கு வளர்ந்த நாரத்தங்காய் இரண்டு. செடியிலிருந்து பறித்தாலோ அல்லது விலைக்கு வாங்கினாலோ வாங்கியதும் நன்கு கழுவி விட்டுப் பின்னர் வெந்நீரில் மூழ்கப் போட்டு வைக்கவும். பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.

தேவையான பொருட்கள்: நாரத்தை 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் பத்து, ஐம்பது கிராம் இஞ்சி தோல் சீவிக்கொண்டு பொடியாக நறுக்கவும். பெருங்காயம், கடுகு, வெந்தயம், தாளிக்க எண்ணெய்(நல்லெண்ணெய் கிடைத்தால் நல்லது, இல்லை எனில் ஏதேனும் சமையல் எண்ணெய்), மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு ஏற்ப.

புளியை நன்கு நீரில் கரைத்துக்கொள்ளவும். இரண்டு கிண்ணம் புளிச்சாறு இருக்கலாம். நாரத்தையைப் பொடிப் பொடியாக நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி, கல்சட்டி அல்லது உருளி, நான் ஸ்டிக் கடாய் ஏதேனும் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் போடவும். கடுகு வெடித்ததும், நாரத்தங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்துப் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் சேர்க்கவும். நன்கு புளி வாசனை போகக் கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்குகையில் பிடித்தமானால் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கவும். சேர்க்காவிட்டாலும் சுவை குன்றாது. இது வாயு, பித்தம் போன்றவற்றுக்கும் குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கும் சிறந்தது. உடல் வெப்பம் குறையும். வயிற்றுப் புழு நீங்கும். பசியை அதிகரித்து நாக்கிற்குச் சுவை கூட்டும்.

நாரத்தை சாதம்: இது இருமுறைகளில் செய்யலாம். முதல்முறை சாதாரணமாக எலுமிச்சை சாதம் செய்யும் முறையாகும். நல்ல ஜாதி நார்த்தங்காய் எனில் அதில் சாறு நிறைய இருக்கும். ஆகவே நாலு பேருக்கு ஒரு நார்த்தங்காய் போதுமானது.

தேவையான பொருட்கள்: நார்த்தங்காய் ஒன்று, பச்சை மிளகாய் நான்கு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு ஆகியவை ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், கருகப்பிலை, தாளிக்க நல்லெண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய். உப்பு தேவையான அளவுக்கு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை. சமைத்த சாதம் நான்கு கிண்ணம்.

சாதத்தை நன்கு உதிர்த்து உப்புச் சேர்த்துக்கொண்டு, மஞ்சள் தூள், நார்த்தைச் சாறு சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவை போட்டுத் தாளித்து வேர்க்கடலை வறுபட்டதும், ப.மிளகாய், கருகப்பிலை சேர்த்து அதைக் கலந்து வைத்த சாதத்தில் போட்டுக் கிளறவும். அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.

அடுத்த முறை: இதற்கும் நார்த்தங்காய் மற்றப் பொருட்கள் அனைத்தும் முன்னர் சொன்னபடியே எடுத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டைக் குறைத்துக்கொண்டு காய்ந்த மிளகாய் இரண்டை எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், மி.வத்தல் போன்றவற்றைச் சிறிது உப்புச் சேர்த்து நன்கு அரைக்கவும். தண்ணீர் விட வேண்டாம். பின்னர் அதை வடித்த சாதத்தில் போட்டுக் கலக்கவும். நாரத்தைச் சாறு பிழிந்து கொண்டு சாதத்தில் கலக்கவும். பின்னர் மேலே சொன்னபடி தாளிதம் செய்து கொண்டு தாளிதத்தைச் சாதத்தில் கலக்கவும். தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.

நார்த்தை இலைப்பொடி அல்லது வேப்பிலைக்கட்டி: இதற்கு நார்த்தை இலைகளை நடுவில் நரம்பு நீக்கி இரண்டு கிண்ணங்கள் எடுத்து வெயிலில் காய வைத்துக்கொள்ளவும். ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இன்னொரு முறையில் ஓமத்தைக் குறைத்துக் கொண்டு மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து, உ.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.எல்லாப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். வாயில் வரும் சுவையற்ற தன்மை நீங்கவும், உணவுச் சுவை தெரியவும் இந்தப் பொடியில் கொஞ்சம் சூடான சாதத்தைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் நல்லது. மோர் சாதத்துக்கும் ஊறுகாய் போல் பயன்படும்.