எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, March 29, 2012

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இப்போப் பச்சை மிளகாயில் தொக்குப் போடலாமா? ஹிஹிஹி, ஸ்ரீராம் புளி மிளகாய் கேட்டேனேனு நறநறப்பது தெரியுது. அதுக்கும் வரேன்.

நல்ல பிஞ்சு மிளகாய் கால் கிலோ வாங்கிக்குங்க. இதுக்குக் குறைந்தது 50 கிராம் புளி தேவை. உப்பு தேவையான அளவு, தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம். புளியைக் கரைத்துக் கெட்டியாக எடுத்துக்கொள்ளவும். கால் கிலோ பச்சை மிளகாய்க்குத் தகுந்த புளிப்பு தேவை என்பதால் 50 கிராம் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் கொஞ்சம் கரைத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயைக் கழுவிக் காம்பை நீக்கிக் கொண்டு கீறி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கல்சட்டி அல்லது வாணலியை ஏற்றிக் கொண்டு காய்ந்ததும் நல்லெண்ணெய் விடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு மஞ்சள் பொடியும் சேர்த்து வதக்கவும். இந்த நெடி ஒத்துக்காத என் போன்றோர் மூக்கு மூடி போட்டுக் கொண்டு வதக்கவும். அப்படியும் விடாமல் இருமுறை, மும்முறை தும்மினால் சரியாயிடும். அப்போத் தான் அக்கம்பக்கம் எல்லாம் நீங்க புளி மிளகாய் போடறது தெரியவரும். இதைப் புளிமிளகாய்த் தண்ணீர்னும் சொல்வாங்க.

அப்புறமாப் புளி ஜலத்தைச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். புளி ஜலம் நன்கு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசை எனப்படும் கல் தோசைக்கு நல்ல காம்பினேஷன் இந்தப் புளிப்பும் காரமும் சேர்ந்த சுவையான புளிமிளகாய்.


அடுத்து மிளகாய்த் தொக்கு:

தேவையான பொருட்கள்: கால் கிலோ பச்சை மிளகாய், தேவையான உப்பு, புளி 50 கிராம், வதக்க 200 கிராம் நல்லெண்ணெய், பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு. வெல்லத்தூள் 50 கிராம்

முதலில் மிளகாயைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு நன்கு சுருள வதக்கவும். வதக்கிய மிளகாயை ஆற வைத்துவிட்டுப் பின்னர் உப்பு, புளி சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். இப்போல்லாம் மிக்சி. முன்னெல்லாம் கல்லுரல் இல்லைனா அம்மியில் அரைக்கணும். கை போயிடும். அரைத்த விழுதை எடுத்துக்கொண்டு, ஒரு வாணலி அல்லது கல்சட்டியில் மிச்சம் உள்ள நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். பச்சையாக இருக்கும் அதன் நிறம் மாறி எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு சேர்ந்து கிளறியதும் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து நன்கு அலம்பிய கண்ணாடி பாட்டிலில் அல்லது ஏதேனும் பீங்கான் பாத்திரத்தில் போட்டுப் பயன்படுத்தவும். இதுவும் தோசை, சப்பாத்தி, மோர்சாதம் போன்றவற்றிற்குத் துணையாக நன்கு ருசியாக இருக்கும்.

Wednesday, March 28, 2012

கத்தரிக்காய்ப் பிரியர்களே, வாங்க, சாப்பிடலாம்!

கத்தரிக்காய் சாதம்: நானும் இது போணியாகறதுக்காகப் பொண்ணு, பையர் ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லிப் பார்த்தேன். கத்திரிக்காய்ப் பிரியர்களான அவங்க ரெண்டு பேரும் கத்திரிக்காய் சாதமா? போர்னு சொல்லி என் மனசை உடைச்சுட்டாங்க. வேறே வழியில்லாமல் பேசாமல் இருந்துட்டேன். இப்போ ஸ்ரீராம் கேட்டதும் கொஞ்சம் சாந்தி கிடைச்சது.

நான்கு பேருக்குத் தேவையான அளவு பொருட்கள்:

அரிசி பாஸ்மதி அல்லது நல்ல பழைய அரிசி ஒரு கிண்ணம். நன்கு உதிர் உதிராக வேக வைத்துக் கொண்டு அரை ஸ்பூன் உப்புச் சேர்த்து நெய் ஊற்றி ஆற வைக்கவும்.

கத்தரிக்காய் அரைகிலோ ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கழுவி நீள வாட்டில் வெட்டிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடிதடவி வைக்கவும்.

மிளகாய் வற்றல் 8ல் இருந்து 10 வரை

தனியா/கொத்துமல்லி விதை மூன்று டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு அரை டீஸ்பூன்

வெந்தயம் அரை டீஸ்பூன்

கொப்பரைத் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

எள்(வெள்ளை) இரண்டு டீஸ்பூன்

இலவங்கப் பட்டை ஒரு துண்டு

ஏலக்காய் பெரியது இரண்டு

சோம்பு இரண்டு டீஸ்பூன்

மராட்டி மொக்கு கொஞ்சம்

உப்பு தேவையான அளவு, புளி கரைத்த நீர் ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் ஒரு சிறு துண்டு.

மஞ்சள் பொடி ஒரு சின்ன ஸ்பூன்

2 வெங்காயம் நீளமாக நறுக்கியது

தாளிக்க எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை

மசாலா சாமான்கள் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிதம் பிடிக்குமெனில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இது தேவையில்லை எனில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கத்தரிக்காய்களைச் சேர்த்துக் கொண்டு, சற்று வதக்கிப் பின்னர் புளிக்கரைசலைச் சேர்க்கவும். தேவையான உப்பைப் போடவும். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மசாலாப் பொடி, வெல்லத் தூள் சேர்க்கவும். சாதத்தில் கொட்டிக் கிளறவும். சற்று நேரம் சாதத்தோடு ஊறவிட்டுப் பின்னர் காரட் தயிர்ப்பச்சடி, அல்லது வெள்ளரிக்காய்ப் பச்சடி அல்லது வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.

சாலட் வகைகள்---தொடர்ச்சி.

வெள்ளரிக்காய் சாலட்: நல்ல பிஞ்சு வெள்ளரிக்காய் 2, தக்காளி சிவப்பாகப் பழுத்தது ஒன்று, வெங்காயம் ஒன்று. வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூள், பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். எலுமிச்சைச் சாறு அரை மூடி, சர்க்கரை ஒரு டீஸ்பூன்.

வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்க்கவும். வேர்க்கடலையை வறுத்துச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கொண்டு பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

வெள்ளரிக்காய்க்குப் பதிலாக வெள்ளை முள்ளங்கி, பப்பாளிக்காய் போன்றவற்றை வைத்தும் மேற்சொன்ன முறையில் சாலட் செய்யலாம். அடுத்துப் பார்க்கப் போவது பாஸ்தா சாலட்.


இதற்குப் பாஸ்தா ஒரு பாக்கெட் வேண்டும். காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை, முட்டைக்கோஸ் பொடிப் பொடியாக நறுக்கியது. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், சாலட் ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன்.(தேவையானால், நான் சேர்ப்பதில்லை)

பாஸ்தாவை நன்கு கழுவி வெந்நீரில் மெதுவாக ஆகும் வரை வேக வைத்துப் பின் குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டி வைக்கவும். அடுப்பில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டுப் பின் அடுப்பை அணைத்துக்கொண்டு முதலில் முட்டைக்கோஸைப்போட்டுக் கிளறிப் பின்னர் காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி சேர்த்துக்கொண்டு உப்பு, சர்க்கரை சேர்க்கவும். பின்னர் ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். தேவை எனில் சாலட் ஆயில் விட்டுக் கிளறி வைக்கவும். இது குளிர்ந்தாலும் சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியலை.

Friday, March 2, 2012

வாழைத்தண்டில் சாலட் சாப்பிட வாருங்கள்

ஶ்ரீராம் வாங்கி பாத் பத்திக் கேட்டிருக்கார். அதை எழுதும் முன்னர் ஒரு சில சாலட் வகைகளைப் பார்ப்போம். நான் சொல்லப்போவது எல்லாமே மிக எளிமையாகத் தயாரிக்கக்கூடியவையே. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம். சாலட் ஆயில் அல்லது சீஸ் அல்லது மயோனைஸ், வித விதமான சாஸ் என எதுவும் தேவையில்லை. அதெல்லாம் இல்லாமலேயே வெறும் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு, பச்சைக்கொத்துமல்லி இருந்தால் போதுமானது. முதலில் வாழைத்தண்டு சாலட்.

வாழைத்தண்டைக் கறியாகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் ஒரு முறை அதைப் பொடிப் பொடியாக நறுக்கித் தயிரில் சேர்த்துக் கடுகு, ப.மி. பெருங்காயம் தாளித்து உப்புச் சேர்த்துப் பச்சடியாகச் சாப்பிட்டலாம். இம்முறையில் வாழைத்தண்டின் பயன்களை உடனடியாகப் பெறலாம்.

அடுத்து சாலட்.

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. மிளகுத் தூள் கால் டீஸ்பூன் அல்லது ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க கடுகு, பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். பாசிப்பருப்பைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.

நல்ல மொந்தன் வாழைத்தண்டாகவும் அடித்தண்டாகவும் இருந்தால் நல்லாத் தான் இருக்கும். மார்க்கெட்டில் கிடைப்பதைத் தானே வாங்க முடியும்ங்கறீங்களா? சரி, வாங்கினதை நன்றாகத் தோல் சீவிக் கொண்டு மெலிதாக வட்டமாக நறுக்கி நாரையெல்லாம் பிரித்து எடுத்து விடவும். (டிப்ஸ்: வாழைத்தண்டு நாரைச் சேர்த்து வைத்துக்கொண்டால் சுவாமி விளக்குத் திரியாகப் பயன்படுத்தலாம்.) வட்டமாக நறுக்கிய வில்லைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டு பாசிப்பருப்போடு சேர்க்கவும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

கவனிக்கவும்: இஞ்சியைத் தோல் சீவிப் பயன்படுத்துங்கள். சுக்கைத் தோலோடு பொடி செய்யுங்கள். அதன் பலன் அப்போது தான் முழுமையாகக் கிடைக்கும். அதோடு இரவில் இஞ்சி, சுக்கு வேண்டாம். கடுக்காய் தான் படுக்கப் போகையில் சாப்பிடலாம்.

நறுக்கியவற்றில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலக்கிவிட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு விருப்பமெனில் பெருங்காயத் தூள் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.