எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 28, 2012

மீனாக்ஷிக்காக அடை!

அடை செய்யறச்சே படம் எடுக்கிறேன்.  இப்போ செய்முறை மட்டும். நான் இரண்டு, மூன்று விதங்களில் அடை செய்வேன்.  முதல்லே  புழுங்கல் அரிசி சேர்த்துச் செய்யும் அடை.  இதுக்கும் தவலை வடை செய்முறைக்கும் அதிக வித்தியாசம் இருக்காது என்றாலும் இதுக்குப் பயத்தம் பருப்புப் போடறதில்லை.  இஞ்சி, ப.மிளகாய் நறுக்கிப் போட்டுக் கடுகு, உ.பருப்புத் தாளிதம் எல்லாம் இல்லை.

புழுங்கல் அரிசி ஒரு கிண்ணம்,  பச்சை அரிசி ஒரு கிண்ணம், துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு  அரைக்கிண்ணம். மி. வத்தல் ஆறில் இருந்து எட்டு வரை, பச்சை மிளகாய் 2 அல்லது மூன்று, பெருங்காயம் கட்டி எனில் ஊற வைக்கவும். உப்பு. கருகப்பிலை, கொத்துமல்லி.

புழுங்கல் அரிசி, பச்சை அரிசியை ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக வேறொரு பாத்திரத்தில்  ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும்.  துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை நிறமாக இருப்பதோடு மொறு மொறுப்பாகவும் இருக்கும்.  கடலைப்பருப்புக் கூடப் போட்டால் அடை மெத்தென்று இருக்கும்.  உ.பருப்புக் கூடப் போனால் பொது பொதுவென வரும்.  அடை க்ரிஸ்ப்பாக வேண்டுமெனில் மேற்சொன்ன அளவின் படி போடலாம். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.  ஒரு சிலர் அடைக்கு ஊற வைக்க வேண்டாம், எண்ணெய் குடிக்கும் என்பார்கள்.  அப்படி எல்லாம் இல்லை.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  அடை மாவைக் கல்லில் ஊற்றிவிட்டு ஒரு முறை நன்றாக எண்ணெய் ஊற்றினாலே போதும். ஆகவே நன்கு ஊற வைக்கவும்.  பின்னர் மிக்சி ஜாரில் மி.வத்தல், ப.மி, பெருங்காயம், உப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு முதலில் அரிசியைப் போட்டு அரைக்கவும்.  கிரைண்டர் எனில் மிக்சி ஜாரிலேயே மிளகாயை அரைத்துக் கொண்டு பின்னர் கிரைண்டர் பாத்திரத்தில் அரிசியைப் போடும்போது மிளகாய்க் கலவையைச் சேர்த்துப் போடவும்.  கிரைண்டரில் மிளகாய் சரியாக அரைபடாது.  ஆகவே வடை, அடைக்கெல்லாம் நான் மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டே கிரைண்டரில் போடுவேன்.

அரிசி கொர கொரவென அரைபட்டதும், கிரைண்டரில் எனில் எல்லாப் பருப்புக்களையும் சேர்த்து அதிலேயே போடலாம்.  மிக்சி என்றால் கொஞ்சம் அரிசி மாவைத் தனியாக எடுத்துவிட்டுப் பாதி பருப்புக் கலவையைப் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, பின்னர் திரும்பவும் எடுத்து வைத்த அரிசி மாவொடு, மீதம் இருக்கும் பருப்புக் கலவையையும் சேர்த்துப் போட்டு அரைத்துப் பின்னர் இரு கலவையையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கொஞ்ச நேரமாவது மாவை வைக்க வேண்டும்.  அடைக்கு மேலே தூவ வெங்காயம், வாழைப்பூ, முட்டைக்கோஸ், கீரை வகைகள், முருங்கைக்கீரை, பறங்கிக் கொட்டை போன்றவை நன்றாக இருக்கும்.  இல்லாட்டி வெறும் தேங்காயைக் கீறிப் போட்டும் வார்க்கலாம்.  அல்லது எதுவுமே போடாமல் வெறும் அடையாகவும் வார்க்கலாம்.  அவரவர் விருப்பம்.

தோசைக்கல்லைக் காய வைத்துச் சூடானதும் எண்ணெயை ஊற்றித் தடவிக் கொண்டு அடை மாவை அதிகம் கரைக்காமல் தோசைக்கல்லில் நன்றாகப் பரப்ப வேண்டும்.  நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம். சுற்றியும் நான்கு புறங்களில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம்.  எண்ணெய் தாராளமாக இரண்டு முட்டை விட வேண்டும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும்.  எண்ணெய் தேவை எனில் விடலாம்.  நன்கு வெந்ததும் சூடான சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, அவியல், தேங்காய்ச் சட்னி, வெல்லம், வெண்ணெய் போன்ற எது உங்களுக்குப் பிடிக்குமோ அதோடு சாப்பிடலாம்.

அடுத்துப் பச்சரிசி போட்டுச் செய்யும் ஏகாதசி அடையைப் பார்ப்போம்.  இதற்குப் பச்சரிசி மட்டும் இரண்டு கிண்ணம் எடுத்துக் கொண்டு துவரம்பருப்பு மட்டும் ஒரு கிண்ணம் போட்டுக் கொள்ளவும்.  எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து களைந்து ஊற வைக்கவும்.  இது இரண்டு மணி நேரம் ஊறினால் போதும்.  நன்கு ஊறினாலும் தப்பில்லை.  பின்னர் ஆறு மி.வத்தல், பெருங்காயம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றோடு சேர்த்து அரைக்கவும்.  கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.  ரொம்பவே ஆசாரமானவர்கள் மி.வத்தல், ப.மி. , பெருங்காயம் போன்றவை ஏகாதசி அன்று சேர்க்க மாட்டார்கள்.  அப்போது மிளகு, உப்பு மட்டுமோ அல்லது இஞ்சி, உப்பு மட்டுமோ சேர்த்து அரைக்க வேண்டும்.  ஜீரகம் போட்டால் அடைக்கு நன்றாக இருப்பதில்லை.  கருகப்பிலை, கொத்துமல்லி போடலாம்.

வேறெதுவும் போடாமல் அடைமாவை நன்கு கலந்து கொண்டு தோசைக்கல்லில் ஊற்றிக் கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  இதுக்கு வெல்லம், வெண்ணெய் தவிரக் குழம்பு வகைகளோ, அவியலோ ஏகாதசி அன்று சேர்ப்பதில்லை.

அடுத்தது பச்சரிசி அடை தான்.  ஆனால் எல்லாப் பருப்பும் சேர்த்து.  பச்சரிசி இரண்டு கிண்ணம் என்றால் , அரைக்கிண்ணம் து.பருப்பு,  கால் கிண்ணம் கடலைப் பருப்பு, கால் கிண்ணம் உ.பருப்பு, கால் கிண்ணம் பாசிப் பருப்பு.  அரிசி, பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து களைந்து ஊற வைக்க வேண்டும்.  இதை அதிக நேரம் ஊற வைப்பதில்லை.  ஒரு மணி நேரம் ஊறினால் போதும் என்பார்கள்.  (நான் ஊற வைப்பேன் என்பது வேறு விஷயம். :))))  பின்னர் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கருகப்பிலை, கொ.மல்லி போட்டுக் கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  நான் அரைக்கையிலேயே தேங்காயையும் போடுவேன்.  இதுக்குத் தேங்காய் போடாமல் அரைத்து எடுத்துப் பரங்கிக் கொட்டை, வாழைப்பூ, கீரை வகைகள் போட்டும் வார்க்கலாம்.

எல்லாரும் நல்லா அடை பண்ணிச் சாப்பிடுங்கப்பா.  என்னோட ஃபேவரிட் அடை தான். :))))))

Sunday, August 26, 2012

ஸ்ரீராமுக்காக மீள் பதிவு, பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி! :))))

பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்: கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு அல்லது நடுத்தரமாக இரண்டு கட்டு, பச்சை மிளகாய், (காரமானது நல்லது) பத்து அல்லது பனிரண்டு. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு(பிடித்தமானால், நான் பூண்டு சேர்ப்பதில்லை) இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு. பெருங்காயம்(தேவை எனில்)


கொத்துமல்லிக்கீரை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம். கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கலாம்.

அடுத்து இனிப்புச் சட்னி: அவசரமாகப் பண்ண இது வசதி. பேரீச்சம்பழம் ஐம்பது கிராம், ஒரு சிறு உருண்டை புளி, உப்பு, மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும். இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கலாம்.

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை) 100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும். இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு. ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும். மேலும் இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும். இது பல நாட்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.


ஸ்ரீராம், என்னடா இதிலே கொடுத்திருக்கேனேனு நினைக்காதீங்க.  இதிலே தானே கேட்டிருந்தீங்க? அதோட இங்கே பேல்பூரி பதிவையும் படிங்க. அதையும் சொல்ல வசதியா இருக்கும்னு தான் இங்கேயே கொடுத்திருக்கேன். :))))))

Saturday, August 25, 2012

காலி ஃப்ளவர் பஜ்ஜி அல்லது பக்கோடா!

இங்கே காலிஃப்ளவர் கிடைக்கிறதில்லை.  சென்னையில் கிடைக்கும், நல்ல காலிஃப்ளவராக வாங்கிப் பூக்களாக உதிர்த்து எடுங்கள்.  குளிர்ந்த நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பூக்களை அதில் போட்டுப் பூச்சிகள் இருந்தால் எடுக்கவும்.  வெந்நீரில் போட்டால் பூக்கள் உள்ளே இருந்து வெளிவராமல் பூவினுள்ளேயே செத்துப் போகும்.  ஆகையால் எப்போதுமே குளிர்ந்த நீரில் தான் போட்டு வைக்க வேண்டும்.  இதை வடிகட்டிக் கொண்டு பூக்களில் பூச்சி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு (பார்த்தாலே தெரியும்)  கொதிக்கும் வெந்நீரில் பத்து நிமிஷம் முதல் இருபது நிமிஷம் வரை போட்டு வைத்துப் பின் வடிகட்டிக் கொள்ளவும்.

கடலை மாவு  ஒரு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மைதா மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.  அல்லது உங்க வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு அரைத்தது இருந்தால் அதை இரண்டு பெரிய கரண்டியால் எடுத்துக் கொள்ளவும்.  ஒரு கிண்ணம் கடலை மாவை அதில் போட்டுக் கொண்டு கொஞ்சம் போல் உப்பு (இட்லிமாவில் உப்பு இருக்கும்) , மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும்.  இட்லி மாவு இல்லாதவர்கள் மேற்சொன்ன மூன்று மாவோடும் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கெட்டியாக இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு சமையல் எண்ணெயைக் காய விடவும்.  எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூவாகக் கடலைமாவுக் கலவையில் தோய்த்து எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  சட்னி இல்லாமலும் சாப்பிடலாம்.  அல்லது சாஸ், புளிச் சட்னி, பச்சைச் சட்னி பிடித்தால் அதோடு சாப்பிடலாம். 

வெறும் அரிசி அடை(வித் முருங்கைக் கீரை) :))))

இது தென் மாவட்டங்களில் செய்யப் படும் ஒன்று.  அதிகம் மதுரை தாண்டிப் பார்க்க முடியாது.  இதற்குத் தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது கால் கிலோ, ஒரு மூடித் தேங்காய்த் துருவல், உப்பு.  ஒரு கட்டு முருங்கைக் கீரை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கிக் கொள்ளவும்.  பெருங்காயம் தேவையானால், கருகப்பிலை, கொ.மல்லி தேவையானால்.  எண்ணெய் அடை வார்க்க.  தேங்காய் போட்டு அரைப்பதால் அதிக எண்ணெய் தேவைப்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் நன்றாய் இருக்கும்.  பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் ஏதேனும் அவரவர் வழக்கம் போல்

புழுங்கலரிசியை நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும்.  தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்து, நறுக்கி வைத்த முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளவும்.  நன்கு கலக்கி அரைமணி நேரம் வைக்கவும்.  பின்னர் தோசைக்கல்லில் மாவை லேசாக நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு அடை போல் கனமாக வார்க்கவும். தொட்டுக்கொள்ள ஏதேனும் சாம்பார் தான் நல்ல காம்பினேஷன் என்றாலும் தக்காளி, வெங்காயச் சட்னியும் நன்றாக இருக்கும்.


இதையே காரம் வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு சேர்த்து அரைத்துக் கொண்டும் முருங்கைக் கீரை போட்டுப் பண்ணலாம்.  இரண்டுமே நன்றாக இருக்கும்.  முந்தாநாள் செய்தேன்.  படம் எடுக்கணும்னோ, பதிவு போடணும்னோ தோணலை.  :))) இன்னிக்கு வேறொருத்தர் கேட்டதில் இதையும் போடலாம்னு தோணித்து. :)))

Monday, August 20, 2012

எம் எல் ஏ, பெசரட் வேணுமா?

எம் எல் ஏ, பெசரட் தோசை பத்திப் பார்க்கலாமா இப்போ!

நேத்திக்கு ஜி+ ல வா.தி. பெசரட் சாப்பிட்டேன்னு சொன்னாலும் சொன்னார்.  அப்போலேருந்து அதே நினைப்பு.  சாப்பிட முடியலைனாலும் எழுதியானும் வைச்சுக்கலாம்னு ஒரு எண்ணம்.  அதான் எல்லாரோடயும் பகிர்ந்து கொள்ளலாம்னு வந்தேன்.


இதுக்குத் தேவையான பொருட்கள்:  பச்சைப் பயறு ஒரு ஆழாக்கு.  பச்சரிசி அரை ஆழாக்கு. பச்சை மிளகாய்  4 இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், வெங்காயம் மூன்று பொடிப் பொடியாக நறுக்கியது. கருகப்பிலை, கொத்துமல்லி(தேவையானால்) உப்பு.  தோசை வார்க்க எண்ணெய், தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் தவா.


  ஊறினால் நிறைய ஆகிடும்.  அதான் இது போதும்னு சொல்றேன்.  குறைஞ்சது ஆறு மணி நேரம் ஊறணும்.  .  இரண்டையும் சேர்த்தே கூட ஊற வைங்க.  இதுக்கு நான் இருவிதமாக சாமான்கள் போடுவேன். ஒண்ணு சோம்பு, கிராம்பு, மிளகு, சீரகம் ஊற வைத்து அரைக்கும்போது சேர்க்கிறது.  இன்னொண்ணிலே சோம்பும் கிராம்பும் போடாமல் மிளகு, சீரகம் ஊற வைத்துப் பச்சை மிளகாய், இஞ்சியோடு சேர்த்து அரைக்கிறது.  இப்போ நாம் பச்சைமிளகாய் நான்கோடு இஞ்சி ஒரு துண்டையும், அரை டீஸ்பூன், மிளகு, ஒரு டீ ஸ்பூன் சீரகத்தோடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு பாசிப்பருப்பையும் அரிசி ஊற வைத்ததையும் அரைக்க வேண்டும்.  ஒரு சிலர் நறுக்கிய வெங்காயத்தில் பாதியையும் அரைக்கையிலேயே சேர்க்கிறார்கள்.  அது நம்ம இஷ்டம்.

நறுக்கிய வெங்காயத்தைக் கொஞ்சம் வதக்கி வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு தடவி விட்டு மாவை ஊற்றவும்.  மேலே வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.  திருப்பிப் போடாமல் அப்படியே மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.  பின்னர் தொட்டுக்கொள்ளக் கொத்துமல்லிச் சட்னியோடு சாப்பிடலாம்.  இது ஒரு வகை.

இன்னொன்று தான் எம் எல்.ஏ பெசரட்.  அதுக்குக் கோதுமை ரவையில் உப்புமா செய்து கொள்ள வேண்டும்.  உப்புமா செய்யும் முறை தேவையில்லைனு நினைக்கிறேன்.  :))))) இந்த உப்புமாவை அந்தத் தோசையின் மேலே ஒரு கரண்டி வைத்து அப்படியே மூடிக் கொடுக்க வேண்டும்.  ஒரு தோசை முழுசாகச் சாப்பிட்டால் நீங்க சாப்பாட்டு ராமர் அல்லது ராமி.   நான் செய்யறச்சே படம் போடறேன்.