எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 16, 2012

குல்ஃபி வாங்கலையோ, குல்ஃபி!

இன்னிக்குக் குல்ஃபி ஐஸ் பத்தி ஜி+இல் ஒருத்தர் எழுதி இருந்தாரா!  உடனே நான் குல்ஃபி ஒரு காலத்தில் விழுந்து விழுந்து பண்ணினதும், குல்ஃபி மோட் எல்லாம் இப்போ எங்கே இருக்குனே தெரியாம இருக்கிறதும் நினைவில் வந்து சோகமாயிடுச்சு! சரி குல்ஃபி செய்யும் முறையையாவது பகிர்ந்துப்போமேனு தோணிச்சு.  அதான் வந்தேன்.

ஹிஹிஹி, ரொம்ப காஸ்ட்லியான ஐடம். நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருக்கிறச்சே பாலையோ, மோரையோ, தயிரையோ, வெண்ணெயையோ என்ன செய்யலாம்னு மண்டையைக் குழப்பிக்கணும். ஒன்றரை லிட்டர் பாலுக்கு அவ்வளவு ரிச்னெஸ் இருக்கும்.  ஒரிஜினல் பால்.  நமக்கு நேரே கறந்த பால்.   ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விடாத பால். இந்த மிச்சம் பாலை எல்லாம் சேர்த்துச் சேர்த்து நன்றாய்க் காய்ச்சிக் குறுக்கி வைச்சுப்பேன்.  தேவைப்படும்போது காரட் அல்வாவுக்கோ, அல்லது பால் கேக்குக்கோ அல்லது குல்ஃபிக்கோ பயன்படுத்திப்பேன். ஆகவே இதற்கு நான் உத்தேசமாத் தான் திட்டம் சொல்ல முடியும்.  (எவ்வளவு பெரிய பில்ட் அப் பண்ண வேண்டி இருக்கு!)

நல்ல சுத்தமான பாலாக மூன்று லிட்டர், பாதாம் பருப்பு ஐம்பது கிராம், பிஸ்தா ஐம்பது கிராம், முந்திரிப்பருப்பு ஐம்பது கிராம். ஏலக்காய், தேவை எனில் வனிலா எசென்ஸ் அல்லதுபாதாம்/பிஸ்தா எசென்ஸ் ஏதேனும் ஒன்று.  பாலில் ரிச்னெஸ் கம்மியாக இருந்தால் கஸ்டர்ட் பவுடர் வெனிலா ஃப்ளேவரில் வாங்கவும்.

மேலே தூவ பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு சீவி இரண்டு டேபிள் ஸ்பூன் வைச்சுக்கவும். இது தனி மேலே சொன்னது தனி.

நாளைக்குக் குல்ஃபி தயாராக இருக்கணும்னா இன்னிக்கே பாதாம், பிஸ்தா, முந்திரியை நீரில் ஊற வைச்சுக்கவும்.  மறுநாள் மூன்று லிட்டர் பாலையும் நன்கு காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கவும்.  அல்லது குறைந்த பக்ஷமான முக்கால் லிட்டருக்குள் குறுக்கிக் கொள்ளவும்.  ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு அரைத்துப் பாலில் கலக்கவும்.  சர்க்கரை சேர்க்கவும்.  எசென்ஸ் ஏதேனும் ஒன்று சேர்க்கவும். எசென்ஸ் சேர்த்தால் ஏலக்காய் வேண்டாம்.  ஆனால் ஏலக்காயே நன்றாக இருக்கும்.  பின்னர் கலந்த பாலை நன்கு ஆற வைத்து குல்ஃபி மோடில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் வைக்கவும்.  அநேகமாய் இரண்டு மணி நேரத்தில் தயாராகி விடும்.  இல்லை எனில் உங்களுக்கு என்று தேவையோ அதற்கு முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் வெளியே எடுத்து இரண்டு நிமிடத்தில் குல்ஃபிக்களை அப்படியே வெளியே எடுக்கலாம்.


கஸ்டர்ட் சேர்த்துச் செய்வது.  பாலைக் காய்ச்சிக் குறுக்கும் முன்னர் அரைக் கிண்ணம் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டுக் கலக்கவும். பின்னர் ஒரு கிண்ணம் பாலைத் தனியாக அடுப்பில் வைத்து அதில் இந்தக் கஸ்டர்ட் கலவையைப் போட்டுக் கொஞ்சம் வெண்ணெயும் (ஒரு டேபிள் ஸ்பூன் போல)போட்டுக் கிளறவும்.  கெட்டியாக ஆகும்.  இதை மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இப்போது கீழே இறக்கிக் குறுக்கி வைத்திருக்கும் பாலில், அரைத்த பருப்புக்களோடு கலக்கவும்.  பின்னர் குல்ஃபி மோடில் ஊற்றவும்.  இதற்கு வனிலா ஃப்ளேவர் இருப்பதால் ஏலக்காயோ, வேறு எசென்சோ சேர்க்க வேண்டாம்.  எனினும் ருசியில் மாறுபாடு இருக்கும்.

Thursday, November 15, 2012

அப்பாதுரைக்காக மசூர்ப் பருப்பும், து.பருப்பும்!

து. பருப்பு நிச்சயமாத் தெரிஞ்சிருக்கும்.  கீழே இருப்பது து.பருப்பு.  மேலே இருப்பது மசூர் தால் எனப்படும் மசூர்ப் பருப்பு.  துவரம் பருப்புப் போலவே ஆனால் நிறம் நல்ல ஆரஞ்சு நிறத்தில் சிறியதாக இருக்கும். இதையும் போட்டு சாம்பார் வைக்கிறார்கள்.  ஆர்மி ரேஷனில் துவரம்பருப்புக்கு மாற்றாகப் பயன்படுத்துவார்கள்.  உடம்புக்கு நல்லது என்பார்கள்.  நாங்க சப்பாத்திக்கு தாலாகச் சமைத்திருக்கிறோம். ஒண்ணும் வித்தியாசம் தெரியாது.

மைசூருக்குப் போக வேண்டாம், இங்கேயே சாப்பிடலாம்!


முதன் முதலில் மைசூர் அரண்மனைச் சமையல் அறையிலேயே செய்யப் பட்டுள்ளது. மசூர் பருப்பு என அழைக்கப் படும் சிவந்த நிறப் பருப்பை வறுத்து, ஊற வைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தே செய்யப் பட்டுள்ளது. கிட்டத் தட்ட முந்நூறு அல்லது அதற்கும் குறைந்த ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மசூர் பருப்பை இயந்திரத்தில் அரைத்துச் செய்யப் பட்டது. அதன் பின்னர் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதும் மசூர் பருப்பு மாவு மிஷினில் அரைக்கப் பட்டுச் செய்யப் பட்டது. மசூர் பருப்பிலிருந்து செய்ததாலேயே இதன் பெயர் மசூர் பாகு என்று அழைக்கப் பட்டு காலப் போக்கில் மைசூர் பாகு என மாறியதாய்த் தெரிகிறது. ஒரு விதத்தில் இதன் மூலம் மைசூர் அரண்மனை என்பதாலும் இந்தப் பெயர் பொருந்தி விட்டது. கடலைப்பருப்பில் செய்வது என்ற கால கட்டத்திற்கு எப்போது மாறியது எனப் புரியவில்லை. அந்த ஆராய்ச்சியும் செய்துடலாம்.

தற்சமயம் மைசூர் பாகு கடலைப்பருப்பை மிஷினில் மாவாக அரைத்துச் செய்யப் படுகிறது. மைசூர் பாகுக்குத் தேவையான பொருட்கள்:
  • கடலை மாவு ஒரு கிண்ணம்
  • மூன்றுகிண்ணம் சர்க்கரை
  • மூன்று கிண்ணம் நல்ல நெய்

அடி கனமான வாணலி அல்லது உருளி. பாகு வைக்க அரை கிண்ணம் நீர்.

முதலில் வாணலியில் ஒரு கிண்ணம் நெய்யை ஊற்றி கடலை மாவை அதில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். கடலை மாவை காய்ந்த நெய்யில் ஊற்றினால் மேலே பொங்கி வரும். அதுவே சரியான பதம்.

பின்னர் அந்த மாவை வேறு தட்டில் அல்லது பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே வாணலியில் மூன்று கிண்ணம் சர்க்கரையோடு அரை கிண்ணம் நீர் சேர்த்து பாகு வைக்கவும். பாகு நன்றாகக் காய்ந்துக் கையால் உருட்டினால் மிளகு பதம் வரும்போது வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாய் நெய் சேர்க்கவேண்டும். நெய்யை திரும்பவும் நன்கு புகை வரும் அளவுக் காய வைத்து ஊற்றினால் மைசூர்பாகு மேலே வெண்மையாகவும், நடுவில் சிவந்தும், அடியில் வெண்மையாகவும், கூடு விட்டுக் கொண்டும் வரும். சுமாராக 200கிராம் கடலை மாவில் மைசூர்ப்பாகு பண்ண 3/4 கிலோ நெய்யாவது வேண்டும்.  எவ்வளவு நெய்யைக் கொட்டினாலும் அத்தனையையும் உள் வாங்கிக்கும். கோதுமை அல்வா போல் நெய்யைக் கக்காது. மைசூர் பாகு கெட்டிப் பட்டு உருளி அல்லது வாணலியில் ஒட்டாமல் சுருண்டு  மேலே பொங்கி வரும்போது நல்ல சதுரமான தாம்பாளத்தில் கொட்டிவிட்டுச் சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவேண்டும். வில்லைகள் போடும் முன்னர் மேலே கொஞ்சம் சர்க்கரையைத் தூவலாம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மை.பா என்றால் ஒரு கிண்ணம் கண்டென்ஸ்ட் பால் அல்லது இரண்டுலிட்டர் பாலைக் குறுக்கி அந்தக் குறுக்கப் பட்ட பால் ஒரு கிண்ணம். கடலைமாவு சேர்க்கும் முன்னர் சேர்க்கவேண்டும். பின்னர் மைசூர்பாகு நன்கு கெட்டிப் பட்டு சுருண்டு வரப் போகும் சமயம் தீயைக் குறைத்துவிட்டு/ அல்லது தீயிலிருந்து கீழே இறக்கிக் கைவிடாமல் கிளறவேண்டும். பின்னர் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையில் மிகவும் மிருதுவான மைசூர்பாகுகள் கிடைக்கும். பால் சேர்த்தால் பிடிக்காதவர்கள் கடலைமாவு மட்டுமே போட்டுச் சுருண்டு வரும் சமயம் கீழே இறக்கித் தீயில் வைக்காமலேயே கீழேயே கிளறவேண்டும். அந்தச் சூட்டிலேயே சுருண்டு வரும் பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையிலும் மைசூர் பாகு மிருதுவாய்க் கிடைக்கும்.

Tuesday, November 13, 2012

முள்ளாய்க் குத்தாத தேன்குழல்! :))

இப்போ முள்ளுத் தேன்குழலை எப்படிச் செய்யறதுனு பார்ப்போம்.  இது அரிசியை ஊற வைச்சு அரைச்ச மாவிலே ஒரு மாதிரியாகவும், வறட்டு அரிசியிலே ஒரு மாதிரியாகவும் செய்யணும்.  முதல்லே வறட்டு அரிசியிலே பார்ப்போம்.

அரிசி ஒரு கிலோ என்றால் ஒரு ஆழாக்கு கடலைப் பருப்பு, ஒரு ஆழாக்கு பாசிப் பருப்பு.  பருப்பு வகைகளை வெறும் வாணலியில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசியோடு கலந்து நன்கு நைசாகவே அரைக்கவும்.

இந்த அரைத்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய் தேவையான அளவு, உப்பு, பெருங்காயம், பிசைய நீர்.  சிலர் வீடுகளில் எள் சேர்ப்பார்கள்.  அவங்க எள்ளையும் சேர்த்துக்கலாம். நான் எள் போட மாட்டேன்.  அரிசி மாவோடு உப்புச் சேர்த்துப் பெருங்காயம் , வெண்ணெயும் சேர்த்து முன்னர் தேன் குழலுக்குச் சொன்னாப் போலவே நன்கு கலக்கவும்.  கைகளால் கலந்து கொண்டு அது கரகரப்பாகக் கைக்கு வந்ததும் நீர் விட்டுப் பிசையவும்.  பின்னர் அடுப்பில் வாணலியில் சமையல் எண்ணெயை வைத்துத் தேன்குழலைப் பிழிந்து எடுக்கவும்.


இன்னொரு முறை:

ஊற வைத்த அரிசியில் அரைத்த மாவு இரண்டு கிண்ணம், கடலை மாவு அரைக் கிண்ணம், பொட்டுக்கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடலை மாவை பச்சை வாசனை போக வறுக்கவும்.  பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும்.  உப்புப் பெருங்காயத்தோடு இவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.  இதற்கு வெண்ணெய் கொஞ்சமாகப் போட்டால் போதும்.  அல்லது வாணலியில் சமையல் எண்ணெய் அரைக்கரண்டியை நன்கு காய வைத்து மாவில் ஊற்றவும்.  மாவு முழுதும் வெண்ணெய் அல்லது எண்ணெய் கலந்த பின்னர் நீர் ஊற்றிப் பிசையவும்.  பின்னர் தேன்குழல்களாகக் காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

வெளிநாடுகளில் அரிசி மாவு ரெடிமேடாகக் கிடைப்பதில் மேலே சொன்னாப் போல செய்யலாம். தைரியமாகச் செய்யலாம்.  அங்கே இருந்த இரண்டு தீபாவளிகளில் நான் அப்படித் தான் செய்தேன்.  நன்றாகவே வருகிறது.  அல்லது லாங் கிரெயின் அரிசி வாங்கி அதை ஊற வைத்து அரைத்து மாவாக்கியும் செய்து கொள்ளலாம்.  கடலைப்பருப்பை எல்லாம் வறுத்து அரைக்க முடியாது என்பதால் கடலைமாவு, பொட்டுக்கடலை மாவு போட்டுக் கொள்ளலாம்.  இந்த மாவிலேயே கொஞ்சம் காரப்பொடி, தேங்காய் பல் பல்லாகக் கீறிப் போட்டு, கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலையை ஊற வைத்துச் சேர்த்துத் தட்டையாகவும் தட்டலாம். நல்ல கரகர தட்டைக்கு நான் காரன்டி. 

Monday, November 12, 2012

தேனான குழல்!

இடித்துச் சலித்த மாவு அல்லது ஊறவைத்துக் காய வைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு.  இவற்றில் ஏதேனும் ஒன்று இரண்டு கிண்ணம், இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்த மாவு, உப்பு, ஜீரகம், பெருங்காயம் தேவையானால், (நான் சேர்ப்பேன்.) வெண்ணெய், பிசைய நீர். பொரிக்க சமையல் எண்ணெய்.

மாவில் உளுத்தம் மாவு, உப்புச் சேர்த்து வெண்ணெயையும் ஜீரகத்தையும் போட்டு முதலில் நன்கு சீராகக் கலந்து கொள்ளவும்.  உடனே நீரை விட்டுப் பிசைய வேண்டாம்.  வெண்ணெயோடு மாவு எல்லாம் நன்கு கலந்து கைக்குக் கொஞ்சம் கரகரப்பாக மாவு வரும்.  அப்போது நீரை விட்டுப் பிசையவும்.  நன்கு குழைவாகப் பிசையவும்.  

கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெயில் புகை வரும்போது அடுப்பைத் தணிக்கவும்.  இப்போது தேன்குழல் படியில் தேன்குழல் அச்சைப் போட்டு மாவால் நிரப்பிக் காயும் எண்ணெயில் பிழியவும்.  பரவலாகப் பிழிய வேண்டும்.  மொத்தமாகப் பிழிந்தால் நடுவில் இருப்பவை உள்ளே வேகாது.  நன்கு வெந்ததும் ஓசை அடங்கி வரும்.  அப்போது எடுத்து வடிதட்டில் போட்டு வடிகட்டவும்.  இம்மாதிரி எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்து கொண்டு பிழிந்து எடுக்கவும்.  எல்லா மாவையும் மொத்தமாகப் பிசைய வேண்டாம்.  நேரம் ஆனால் தேன்குழல் நிறம் மாற ஆரம்பிக்கும்.  ஆகவே இரண்டு கிண்ணம் பிசைந்து கொண்டு அது முடிந்ததும் திரும்ப இரண்டு கிண்ணம் பிசையலாம்.


இன்னொரு முறை:  ஒருகிலோ பச்சரிசி, ஒரு ஆழாக்கு அல்லது கால் கிலோ உளுந்து.  இவை இரண்டையும் மெஷினில் கொடுத்து நல்ல நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.

இந்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய், உப்பு, ஜீரகம், பெருங்காயம், பிசைய நீர்.  முன் போலவே மாவில் உப்பு, ஜீரகம், பெருங்காயம், வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும்.  நன்கு கலந்து விட்டது என்பது தெரிந்ததும் நீரை விட்டுப் பிசையவும்.  இதற்கு நீர் கூடப் பிடிக்கும்.  வறட்டு அரிசி மாவு என்பதால் நீர் வாங்கும்.  நன்கு பிசைந்ததும், முன்போல் எண்ணெயைக் காய வைத்துத் தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும்.  இதுவும் வெள்ளை வெளேர் என நன்றாகவே வரும்.  படங்கள் நாளை போடுகிறேன்.

Sunday, November 11, 2012

தீபாவளிக்கு என்ன பக்ஷணம் பண்ணப் போறீங்க?

முன்பெல்லாம் ஒரு வாரமாவது தீபாவளி பக்ஷணம் பண்ணுவோம்.  அப்படியும் எங்க மாமியார் ரொம்பக் குறைச்சலாப் பண்ண வேண்டி இருக்குனு வருத்தப் படுவாங்க.  இப்போ அநேகமா எல்லாரும் ஆர்டர் கொடுக்கிறாங்க.  இல்லைனா கொஞ்சமாப் பண்ணறாங்க.  நான் தீபாவளிக்கு விநியோகம் பண்ணறதுக்குனு கொஞ்சமாக பக்ஷணங்கள் பண்ணுவது உண்டு.  தேன்குழல், ஓமப்பொடி கொஞ்சம் போலப் பண்ணிட்டு மிக்சரைக் கொஞ்சம் கூடப் பண்ணுவேன்.  தேன்குழல், ஓமப்பொடி பத்து அல்லது பனிரண்டுக்குள் தான் பண்ணுவேன்.  அதையே சாப்பிடணுமே!  ஸ்வீட் எப்படியும் இரண்டாவது இருக்கும்.  போன வருஷம் ஹூஸ்டனில் பையர் எதுவுமே பண்ணக் கூடாதுனு கண்டிப்பாய்ச் சொல்லி அப்புறம் எண்ணெய் வைக்கணும்னு சாஸ்திரம்னு சொன்னதும் உளுத்த மாவுத் தேங்குழல் மட்டும் கொஞ்சம் போலப் பண்ணச் சொன்னார். ஸ்வீட்டுக்குப் பாயசம் போதும்னு சொல்லிட்டார்.  நீ அடுப்படியிலே வெந்தது எல்லாம் போதும்னு அவரோட கட்சி.

இந்த வருஷமும் இங்கே அதிகம் பண்ணலை.  இன்னிக்குக் கொஞ்சமா உளுத்தமாவுத் தேன்குழலும், முள்ளுத் தேன்குழலும் பண்ணினேன்.  நாளைக்குக் கொஞ்சம் போல மைசூர்பாகு.  அவ்வளவு தான்.  இதையே மைசூர்பாகை நான் தான் சாப்பிட்டாகணும்.  ரங்க்ஸுக்குச் சாப்பிட முடியாது. :( ஆகையால் இப்போல்லாம் வீட்டில் ஸ்வீட்டே யாரானும் வந்தால் பண்ணறதோடு சரி.  இப்போ உளுத்த மாவுத் தேன்குழல் எப்படிப் பண்ணறதுனு பார்ப்போமா!  இதை இருவிதமாகப் பண்ணலாம்.  பாரம்பரிய முறை ஒண்ணு.  நாங்களாய்க் கண்டு பிடிச்ச முறை இன்னொண்ணு.  இந்த இன்னொரு முறையிலேயே இன்னிக்குப் பண்ணினேன்.

பாரம்பரிய முறையில் அரிசியை ஊற வைத்துக் களைந்து கொஞ்ச நேரம் நிழலில் உலர்த்திப் பின்னர் மெஷினில் மாவாக்கி/அல்லது இடித்து/(இடித்துப் பண்ணி இருக்கேன்) அல்லது மிக்சியில் அரைத்து, உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மாவாக்கி அதையும் போட்டுப் பண்ணுவாங்க.

இப்போப் பண்ணுவது ஒரு கிலோ அரிசிக்கு ஒரு ஆழாக்கு/200கிராம் உளுந்தை அதிலேயே போட்டு மிஷினில் அரைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம்.  அதிலே தேன் குழல் பண்ணினாலும் நன்றாக வருகிறது.  மாவு மீந்து போனாலும் கவலையில்லை.  இன்னொரு நாள் பண்ணிக்கலாம்.  அல்லது ரவா தோசை, கோதுமை தோசை, கேழ்வரகு தோசைகளுக்குப் போட்டுக்கலாம். இனி அடுத்த பதிவில் செய்முறை பார்க்கலாம்.  ஹிஹிஹி, இது கதையாக நீண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். :)))))))