எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 12, 2012

தேனான குழல்!

இடித்துச் சலித்த மாவு அல்லது ஊறவைத்துக் காய வைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு.  இவற்றில் ஏதேனும் ஒன்று இரண்டு கிண்ணம், இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்த மாவு, உப்பு, ஜீரகம், பெருங்காயம் தேவையானால், (நான் சேர்ப்பேன்.) வெண்ணெய், பிசைய நீர். பொரிக்க சமையல் எண்ணெய்.

மாவில் உளுத்தம் மாவு, உப்புச் சேர்த்து வெண்ணெயையும் ஜீரகத்தையும் போட்டு முதலில் நன்கு சீராகக் கலந்து கொள்ளவும்.  உடனே நீரை விட்டுப் பிசைய வேண்டாம்.  வெண்ணெயோடு மாவு எல்லாம் நன்கு கலந்து கைக்குக் கொஞ்சம் கரகரப்பாக மாவு வரும்.  அப்போது நீரை விட்டுப் பிசையவும்.  நன்கு குழைவாகப் பிசையவும்.  

கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெயில் புகை வரும்போது அடுப்பைத் தணிக்கவும்.  இப்போது தேன்குழல் படியில் தேன்குழல் அச்சைப் போட்டு மாவால் நிரப்பிக் காயும் எண்ணெயில் பிழியவும்.  பரவலாகப் பிழிய வேண்டும்.  மொத்தமாகப் பிழிந்தால் நடுவில் இருப்பவை உள்ளே வேகாது.  நன்கு வெந்ததும் ஓசை அடங்கி வரும்.  அப்போது எடுத்து வடிதட்டில் போட்டு வடிகட்டவும்.  இம்மாதிரி எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்து கொண்டு பிழிந்து எடுக்கவும்.  எல்லா மாவையும் மொத்தமாகப் பிசைய வேண்டாம்.  நேரம் ஆனால் தேன்குழல் நிறம் மாற ஆரம்பிக்கும்.  ஆகவே இரண்டு கிண்ணம் பிசைந்து கொண்டு அது முடிந்ததும் திரும்ப இரண்டு கிண்ணம் பிசையலாம்.


இன்னொரு முறை:  ஒருகிலோ பச்சரிசி, ஒரு ஆழாக்கு அல்லது கால் கிலோ உளுந்து.  இவை இரண்டையும் மெஷினில் கொடுத்து நல்ல நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.

இந்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய், உப்பு, ஜீரகம், பெருங்காயம், பிசைய நீர்.  முன் போலவே மாவில் உப்பு, ஜீரகம், பெருங்காயம், வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும்.  நன்கு கலந்து விட்டது என்பது தெரிந்ததும் நீரை விட்டுப் பிசையவும்.  இதற்கு நீர் கூடப் பிடிக்கும்.  வறட்டு அரிசி மாவு என்பதால் நீர் வாங்கும்.  நன்கு பிசைந்ததும், முன்போல் எண்ணெயைக் காய வைத்துத் தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும்.  இதுவும் வெள்ளை வெளேர் என நன்றாகவே வரும்.  படங்கள் நாளை போடுகிறேன்.

3 comments:

  1. தேன் குழல் செய்தாச்சு. இரண்டாவது முறையில் தான் நாங்கள் செய்தோம். நினைக்குமளவு சாஃப்ட் கிடைக்கவில்லை இந்த தரம். உடனே நீரை விட்டுப் பிசையக் கூடாது என்பதுவும், கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கலந்து கொள்ளவேண்டும் என்பதுவும் டிப்ஸ்.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், ரொம்பவே சாஃப்டாக இருந்தாலும் தேன் குழல் நன்றாயிருக்காதே! :))) கரகரப்பு இருக்கணும். முக்கியமா வெண்ணெய் போட்டால் வெண்ணெய் கலக்கப் போகும் மாவு முழுவதிலும் சீராகக் கலக்கும் வரை கைகளால் கலந்து கொண்டிருக்க வேண்டும். மாவின் நைசாக இருந்த மிருதுத் தன்மை மாறிக் கைக்குக் கரகரப்புத் தெரியும். அப்போது நீர் விட்டுப் பிசைந்தால் சரியாக வரும்.

    ReplyDelete
  3. மொத்தமாக மாவைப் பிசைந்தால் நேரம் ஆக, ஆகத் தேன்குழல் நிறமும் ருசியும் மாற ஆரம்பிக்கும்.

    ReplyDelete