எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 31, 2012

நீங்க நல்லாச் சாப்பிட ஒரு குறிப்பு!

புது வருஷத்துக்கு ஒரு புது டெசர்ட் பார்ப்போம்,  டெசர்ட்னதுமே அது பழங்களால் ஆனதுனு தெரிஞ்சிருக்குமே. முதல்லே இதுக்குத் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

கேக் சாப்பிடறவங்க கடையில் விற்கும் ப்ளம் கேக் வாங்கிக்குங்க.  பெரிசா இருக்கட்டும். கடையிலே கேக் சாப்பிடமாட்டேனு சொல்றவங்க வீட்டிலேயே மில்க் மெயிடினால் செய்யப்பட்ட கேக்கை வாங்கிக்கலாம்.  இல்லைனா ஹாட்சன் மஹாதேவன் கடையிலே எக்லெஸ் கேக் கிடைக்கும் அதை வாங்கிக்குங்க.  இது முக்கியமா வேணும் சரியா?

அடுத்து ஜெல்லி க்ரிஸ்டல் பவுடர் வாங்கி அதிலே சொல்லி இருக்கும் முறையில் ஜெல்லியைத் தயார் செய்து, ஒரு பவுலில் ஊற்றி, அதிலே பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகளைக் கலந்துக் குளிர வைக்கவும்.  ஜெல்லி கெட்டியாக ஆனதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

இப்போது பழங்கள் எல்லாவகையும் வகைக்கு

ஆப்பிள் நடுத்தரம் ஒன்று, ஒரு மாதுளை, ஆரஞ்சு இரண்டு, கொய்யாப் பழம் நடுத்தரம் ஒன்று,  வாழைப்பழம் கனிந்ததாக பெரிதாக இருந்தால் ஆறு, இல்லை எனில் பத்து, பேரிச்சம்பழம் கொட்டை நீக்கியது 50 கிராம், பச்சை திராக்ஷை 50 கிராம், பன்னீர் திராக்ஷை 50 கிராம், முந்திரிப்பருப்பும் கிஸ்மிஸும் தேவை எனில் சேர்க்கலாம்.  சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை.

பால் சுண்டக் காய்ச்சியது அரை லிட்டர், கஸ்டர்ட் பவுடர் வெனிலா வாசனையில் இரண்டு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்.

வெனிலா ஐஸ் க்ரீம்  குடும்ப பாக்கிங்கில் உள்ளது.(தேவையானால்)

பழங்களை நன்கு கழுவி நறுக்கி ஒன்றாகக் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வைக்கவும்.

சுண்டக்காய்ச்சிய பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து கொண்டு அடுப்பில் வைத்துக் கிளறவும் கெட்டிப்படும்போது வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கி ஆற வைக்கவும்.  மிக்சியில் போட்டு அடித்து வைத்துக்கொள்ளவும்.



இப்போது கலக்கும் முறை :

முதலில் ஒரு பெரிய பவுலில் கேக்கை வைக்கவும்,  அதன் மேல் ஜெல்லியைப் பரவலாகக் கொட்டவும்,  பின்னர் அதன் மேல் பழங்களைப் போடவும்.  அதன் பின்னர் அதன் மேல் அடித்து வைத்த கஸ்டர்டைச் சேர்க்கவும்.  விருப்பமுள்ளவர்கள் இதை அப்படியே ஃபோர்க்கால் எடுத்துத் தட்டில் எல்லாவற்றோடு சேர்த்துப் போட்டுக்கொண்டு வெனிலா ஐஸ்க்ரீமோடு சேர்த்துச் சாப்பிடலாம்.  சேமியா பாயசம் இருந்தாலும் அதோடு சாப்பிடலாம். ரொம்பவே ரிச்சானது!

நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருந்தப்போ இது அடிக்கடி பண்ணுவேன். எல்லாப் பழங்களும் இல்லாட்டியும் இருக்கிற பழங்களை வைத்துச் செய்வோம்.  கேக் நான் வீட்டிலேயே செய்துடுவேன்.  அதனால் அதிகம் செலவாகாது. மேலும் அங்கே பழங்கள் எல்லாவிதமானவையும் கிடைக்கும் என்பதோடு சுவை, ருசி, விலை எல்லாமும் ஏற்கும்படியாக இருக்கும்.

Saturday, December 29, 2012

வாழ்க்கையே ரசம் தான்!

எங்க வீட்டில் தினம் தினம் ரசம் இருக்கும். பொதுவாக நான் சாம்பார் பொடி எனத் தனியாக அரைப்பதில்லை.  அரைப்பதே ரசப்பொடிதான்.  சாம்பார் செய்வதெனில் செய்யும் அன்று வறுத்து அரைத்துச் செய்வதே வழக்கம்.  பொடி போட்ட சாம்பார் இன்றும் எனக்கு அவ்வளவு சரியாக வராது. :))))
இதற்குத் தேவையான சாமான்கள்:


கால்கிலோ மிளகாய் வற்றல்
50 கிராம் விரலி மஞ்சள்
முக்கால்  கிலோ தனியா
200 கிராம் மிளகு(அவ்வளவு காரம் வேண்டாமெனில் 100 கிராம் போதும்)
துவரம்பருப்பு 200
கடலைப்பருப்பு ஒரு கைப்பிடி
வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்

ஒரு சிலர் கடுகு, கருகப்பிலை, உளுந்து, சீரகம் போன்றவற்றைச் சேர்க்கின்றனர்.  ஆனால் நான் போடுவது மேலே உள்ள அளவில் தான்.  பொதுவாகவே சாம்பார் பொடி அரைத்தாலும் சரி, ரசப்பொடி அரைத்தாலும் சரி துவரம்பருப்பு கூடுதலாகவும், கடலைப்பருப்பு கம்மியாகவும் போட்டால் ரசம் நல்ல தெளிவாக நீர்க்க வரும்.

மேலே சொன்ன சாமான்களை நன்கு வெயிலில் காய வைத்துக் கொண்டு மாவு மெஷினில் மிளகாய் அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.  இதுவே சாம்பாருக்கும், பொடிதான் எனில் துவரம்பருப்பில் பாதி அளவுக்கு கடலைப்பருப்புப் போட்டு விட்டு மிளகு நூறு கிராமுக்கும் குறைத்துச் சேர்க்கவும்.  வெந்தயம் ஐம்பது கிராம் போடலாம்.

இந்த ஒரே பொடிதான் ரசம், சாம்பார் எனில் தனியாக ஒரு கிண்ணம் தனியா, அரைக்கிண்ணம் து.பருப்பு கால் கிண்ணம் மிளகு வெறும் வாணலியில் வறுத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  மேலே இரண்டாவதாய்ச் சொன்ன சாம்பார் பொடியிலேயே ரசம் வைப்பதெனில் இந்தப் பொடியில் ஒரு அரை ஸ்பூன் பாதி கொதிக்கையிலே ரசத்தில் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை ஆர்க்கோடு இரண்டாகக் கிள்ளிச் சேர்க்கவும். மேலும் ரசத்துக்குப் பருப்பைப் போட்டு அடி வண்டல் இருக்கும்படி செய்வதை விட, பருப்பை நன்கு நீர் விட்டுக் கரைத்து அந்தப் பருப்பு நீரை விட்டாலே ரசம் தெளிவாக வரும்.

மைசூர் ரசம்(தஞ்சை மாவட்ட முறை) எங்க மாமியார் வீட்டில் தினம் தினம் சாம்பார்த்திருநாள் தான்.  ரசம் என்பது எப்போதோ தான்.  அவங்களைக் கட்டாயமாக தினம் ரசம் செய்ய வைத்த பெருமை என்னைச் சேரும்.  நமக்கு சாம்பார் என்றாலே அலர்ஜி! ரசம் ஒண்ணுதான் ஒழுங்காய்ச் சாப்பிடும் ஐடம். இவங்க சாம்பார் சாதம் சாப்பிடறதைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துடுச்சுனா பாருங்க! அலுக்கவே அலுக்காது! சரி, சரி, இப்போ மைசூர் ரசம் எங்க மாமியாரோட செய்முறைப்படி பார்க்கலாமா?  இந்த மைசூர் ரசம் மாதிரியும் இல்லாமல், சாம்பாராகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இருக்கும்.  இது வைக்கிற அன்னிக்கு சாம்பார் வைக்க மாட்டாங்க.  ஏனெனில் து பருப்பு இதுக்கு நிறைய வேண்டும்.

நாலு பேருக்கு மைசூர் ரசம் வைக்க:

புளி ஒரு  பெரிய எலுமிச்சை அளவு நீரில் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்.  தக்காளி இரண்டிலிருந்து மூன்று வரை, உப்பு, மஞ்சள் தூள்

து பருப்பு குறைந்தது ஐம்பது கிராமுக்குக் கொஞ்சம் கூட  பருப்பை நன்கு வேக வைத்துக் குழைய வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

வறுத்து அரைக்க

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை
தனியா இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு மூன்று டீஸ்பூன்
வெந்தயம், இரண்டு டீஸ்பூன்,
தேங்காய்

மேலே சொன்ன பொருட்களை எண்ணெயில் நன்கு வறுத்துக் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  புளி ஜலத்தில் தக்காளியைப் போட்டு உப்புச் சேர்த்து மஞ்சள் தூளும் சேர்த்துக் கொண்டு கொதிக்க விடவும்.  புளி வாசனை போகக் கொதித்த பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்துக் குழைய வேக வைத்த பருப்பையும் அப்படியே சேர்க்கவும்.  தேவையான அளவு நீரை விட்டு விளாவவும்.  கவனிக்கவும்.  அதிக நீரை விட்டு நீர்க்க விளாவக் கூடாது.  பின்னர் ரசம் கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்துக் கீழே இறக்கிக் கடுகு, கருகப்பிலை, தேவையானால் ஒரு மி.,வத்தல் நெய்யில் தாளிக்கவும்.  பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும். பொரித்த அப்பளத்தோடு சாப்பிடவும்.



Friday, December 14, 2012

உங்கள் மிக்சர் தயார்!

மீனாக்ஷி கேட்ட ரசப்பொடியை எழுதறதுக்கு முன்னாடி தீபாவளி பக்ஷணங்களை முடிச்சுப்போமா!   இப்போ மிக்சர் பண்ணலாம்.  பலருக்குப் பிடிக்கும்;  சிலருக்குப் பிடிக்காது.  எனக்கு சாதத்தோடு தொட்டுக்கப்பிடிக்கும்.  தனியாச் சாப்பிட்ட வயித்துக்கு ஒத்துக்காது எப்போவுமே.  :)))) எல்லாம் பண்ணுவேனே தவிர ஸ்வீட் மட்டும் தான் அளவோடு எடுத்துப்பேன்.  மத்தது எல்லாம் கொஞ்சம் பயம் தான்.  சின்ன வயசிலே இருந்து சாப்பிட்டுப் பழக்கமே இல்லை என்பதால் ஆசையும் வராதோ, பிழைச்சேன்.

மிக்சரில் போடும் பொருட்கள் ஓமப்பொடி, காராபூந்தி, சின்னச் சின்ன சேவ், அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உ.கி. சிப்ஸ், மைதா மாவில் செய்த சின்னச் சின்ன பிஸ்கட்டுகள்.  இப்போல்லாம் பிரிட்டானியாவின் குட்டி பிஸ்கட்டுகளைப்போட்டுடறாங்க.  இன்னும் சிலர் கார்ன் ப்ளேக்ஸ் போடறாங்க.  இதெல்லாம் அவங்க அவங்க விருப்பம்.  ஜீரக மிட்டாய்களைச் சேர்ப்பதும் உண்டு. இனி செய்முறையைப் பார்ப்போமா!

முதலில் ஓமப்பொடி:  கடலை மாவு இரண்டு கிண்ணம். அரைக்கிண்ணம் அரிசி மாவு.  உப்பு, பெருங்காயம்.  நெய் விழுது.  பிசைய நீர்.

அரிசிமாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.  நெய் விழுதைச் சூடு பண்ணி மாவில் விட்டுக் கலக்கவும்.  நன்கு கலக்க வேண்டும்.  மாவு கைக்குக் கரகரப்பாக வரும்படி கலக்கவும். நீர் விட்டுப் பிசையவும். பின்னர்   மெலிதாக உள்ள ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழியவும்.

அடுத்துக் காராபூந்தி.  மாவு அளவு மேற்சொன்னதே எடுத்துக்கொள்ள வேண்டும்.  மற்ற எல்லாமும் மேலே சொன்னாப்போல் தான்.  ஆனால் மாவைப் பிசைய வேண்டாம்.  நீர் விட்டுத் தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும்.  கரண்டியால் எடுத்து விடும் பதம் இருக்க வேண்டும்.  பின்னர் பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு மாவை அதில் விட்டுத் தேய்க்கவும்.  உருண்டையாக விழ வேண்டும்.  சில சமயம் வேகமாய் விட்டாலோ, தேய்த்தாலோ பத்தையாகப்போயிடும்.  ஆகவே கவனமாய்த் தேய்க்க வேண்டும்.  இப்படி எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.

அடுத்து சேவு:  மாவு அளவு மேலே சொன்ன மாதிரி எடுத்துக் கொண்டு ஓமப் பொடிக்குப் பிசைகிறாப்போல் பிசைந்து கொண்டு சேவுத்தட்டில் எண்ணெய்க்கு நேரே பிடித்துக்கொண்டு கையால் தேய்க்க வேண்டும்.  காய்ந்த எண்ணெய் என்றால் தட்டின் அடிப்பாகம் வழியாகச் சூடு தாக்கும்.  ஆகவே கவனமாய்த் தேய்க்க வேண்டும்.


ஓமப்பொடி, காராபூந்தி, சேவ் கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.  ஏற்கெனவே காய்ந்திருக்கும் எண்ணெயில் இப்போது மற்றச் சாமான்களைப் போட்டுப் பொரிக்க வேண்டும்.  அதற்கு முன்னால் மைதா மாவில் பிஸ்கட் செய்து கொள்வோம்.

மைதா மாவு ஒரு கிண்ணம்.  உப்பு சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, நெய் விழுது அல்லது வெண்ணெய்.  எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு கரகரப்பாக இருக்கும் வரை கலக்கவும்.  பின்னர் நீர் விட்டுச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  பிசைந்த மாவு அரை மணி நேரம் ஊறட்டும்.  பின்னர் அதை மெலிதான சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு கத்தி அல்லது நுனியில் டிசைன் உள்ள ஸ்பூனால் டைமண்ட் வடிவத்துக்குக் கத்திரிக்கவும்.  கத்திரித்தவைகளை காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  நன்கு சிவப்பாக வரும்போது எடுத்து வடிகட்டித் தட்டில் போட்டு ஓமப்பொடிக் கலவையோடு சேர்க்கவும்.


உருளைக்கிழங்கு சிப்ஸ்:   மேற்சொன்ன அளவுக்கு அரை கிலோ உ.கி. இருக்கலாம்.  கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை.  உருளைக்கிழங்கை நன்கு கழுவி விரல் நீளத்துக்கு மெலிதாக சிப்ஸ் கட்டரால் நறுக்கவும்.  மீண்டும் நீரில் போட்டு நன்கு கழுவி விட்டுப் பின்னர் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.   ஓமப்பொடிக்கலவையோடு சேர்க்கவும்.

அவல் கால் கிலோ, பொட்டுக்கடலை கால் கிலோ, வேர்க்கடலை கால் கிலோ எடுத்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  வேர்க்கடலை வெடிக்க ஆரம்பிக்கும்போது எடுக்க வேண்டும்.  பொட்டுக்கடலை சிவப்பாக வரும்பொது எடுக்க வேண்டும்.  அவல் பொரிய ஆரம்பிக்கையில் எடுக்கவும்.  எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலக்கவும்.


காலி வாணலி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை விட்டுக் கொண்டு, கருகப்பிலை, பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், மிச்சம் உப்பைப் போட்டுக் கலக்கவும். இந்தக் கலவையோடு மிக்சர் கலவையை நன்கு கலக்கவும்.  இப்போது உங்கள் மிக்சர் தயார்.



Saturday, December 8, 2012

ஓடு, ஓடாய் ஒரு பக்கோடா!

சரி, இப்போ நாம ஓட்டு பக்கோடா செய்யலாமா?"

" என்னது?  ஓட்டிலே பக்கோடாவா?  யார் திங்கறது?"

"ஹிஹிஹி, நீங்க தான் திங்கணும்."

"அதெல்லாம் முடியாது."

"பயப்படாதீங்க.  ஓட்டு பக்கோடான்னா ரிப்பன் பக்கோடா."

 "என்ன ரிப்பனில் பக்கோடாவா?"

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., கொஞ்சம் பொறுமை தேவை. தஞ்சை ஜில்லாவில் நாடாத் தேன்குழல்னு சொல்வாங்க.  அதையே தென் மாவட்டங்களில் ரிப்பன் பக்கோடானும், மதுரையிலே ஓட்டு பக்கோடானும் சொல்வாங்க. "

"அப்பாடி, பிழைச்சேன். சரி, சரி, சீக்கிரமாப் பண்ணித்தாங்க."

இது காரம் போட்ட தேன்குழல்.  அதனால் மிளகாய்த்தூள் வேண்டும் அல்லது சிவப்பு மிளகாய் வற்றலை ஊற வைச்சு அரைச்சுக்கணும்.  இப்போ முதல்லே மாவு தயாரிப்புப் பார்க்கலாம்.  இதுக்குக் கொஞ்சம் வித்தியாசமா மாவு தயாரிக்கணும்.

ஊறவைத்துக் களைந்து காய வைத்த அரிசி நான்கு கிண்ணம், துபருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம்.  எல்லாவற்றையும் சேர்த்தும் அரைக்கலாம்.  ஊறவைச்ச அரிசியைப் போடாமல் ஊற வைக்காத வறட்டு அரிசியிலும் மேற்சொன்ன சாமான்களைப் போட்டுச் செய்யலாம்.  மாவு தயார் ஆனதும் தேவையான மாவை எடுத்துக்கவும்.

இரண்டு கிண்ணம் மாவு, நெய் விழுது  இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் அல்லது கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அந்த நீரை விட்டுக்கலாம்.  மிளகாய்த்தூள் அல்லது அரைத்த மிளகாய் விழுது இரண்டு டீஸ்பூன்.  பிசையத் தேவையான நீர்.   பொரித்து எடுக்க சமையல் எண்ணெய்.

எப்போவும் சொல்றாப்போல் முதலில் மாவில் நெய்விழுதைப் போட்டுக் கொண்டு  உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் விழுதைப் போட்டு நன்கு கலக்கவும்.  எடுத்த எடுப்பில் நீர் விட்டுப் பிசைய வேண்டாம்.  மாவோடு உப்பு, காரம் நன்கு கலக்கவேண்டும்.  பின்னர் நீர் விட்டுப் பிசையவும்.  சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு வந்ததும்,  அடுப்பில்  கடாயை வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  நாடாத் தேன்குழலின் அச்சு இருவிதமாக இருக்கும். ஒன்று ப்ளெயினாக இருக்கும்.  இன்னொன்று முள் முள்ளாக இருக்கும்.  இரண்டில் எது வேண்டுமோ அதைப் போட்டுக் கொண்டு மாவைக் குழலில் அடைத்து எண்ணெயில் பிழியவும்.  பரவலாகப் பிழியவும்.  சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.

Saturday, December 1, 2012

ஓமத்தைப் பொடி செய்துவிட்டால் ஓமப்பொடியா?

அடுத்து ஓமப்பொடி தயாரிப்பு முறையைப் பார்க்கலாமா?  இதுக்குத் தேவையான பொருட்கள்

கடலை மாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு ஒரு கிண்ணம், நெய் விழுது ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, தேவையான அளவு, ஓமம் சுத்தம் செய்து ஊற வைத்து அரைத்த விழுது அல்லது மிக்சியில் செய்த பொடி ஒரு டேபிள் ஸ்பூன் வரை அவரவர் ருசிக்கு ஏற்ப. பெருங்காயம் தேவையில்லை.  மிளகாய்த்தூள் கொஞ்சம் சேர்த்து, ஓமத்தை முழுதாகப் போட்டுச் செய்கையில் பெருங்காயம் சேர்க்கலாம்.(கொஞ்சமாக), பிசையத் தேவையான நீர்.

அரிசிமாவு & கடலைமாவில் நெய்யை விழுதாகப் போட்டு உப்புச் சேர்த்து முன் சொன்னது போல் நன்கு கலக்கவும். கைக்குக் கரகரவென வருகையில் ஓம விழுது அல்லது பொடி செய்த ஓமத்தைச் சேர்க்கவும்.  நீர் விட்டு நன்கு பிசையவும்.  தேன் குழல் அச்சில் பொடிப் பொடியாக ஓமப்  பொடி பிழியும் அச்சில் பிசைந்த மாவைப் போட்டு பரவலாகப் பிழியவும்.  இது சீக்கிரம் வெந்துவிடும்.  ஆகவே உடனடியாக எடுக்க வேண்டும்.  இல்லை எனில் கறுத்து விடும்.  ஓமம் நிறையச் சேர்த்தால் குழந்தைகளுக்குத் தாராளமாய்க் கொடுக்கலாம்.  இதற்கும் தேவையான மாவை முன் கூட்டியே கலந்து கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாகவே கலந்து கொள்ளவும்.  அப்போது தான் எல்லாம் ஒரே நிறமாக வரும்.

மிளகாய்ப் பொடி சேர்த்துச் செய்யும் ஓமப் பொடிக்கு மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன் போட்டால், ஓம விழுது அல்லது பொடி செய்த ஓமத்தை இரண்டு டீஸ்பூன் போடலாம்.  இவை எதுவுமே போடாமல் கடலைமாவு, அரிசி மாவு ஒரு கிண்ணத்திற்குப் பதிலாக அரைக்கிண்ணம் சேர்த்து உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து செய்யும் ஓமப் பொடியைத் தயிர்வடை, பேல்பூரி, அவல் உப்புமா போன்றவற்றில் மேலே தூவிக் கொள்ளலாம்.  சாட் வகையறாக்களிலும் தூவிக் கொள்ளலாம்.