எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, March 4, 2013

வடாம் போட வரீங்களா? வடாம் போட வரீங்களா?

இப்போக் கறிவடாம் போடும் நேரம்.  ஆகவே கறிவடாம் எப்படிப் போடுவதுனு பார்க்கலாம். நல்ல பச்சரிசியாக அரைக்கிலோ எடுத்துக்குங்க.  ஜவ்வரிசி போடும் வழக்கம் உள்ளவங்க அரைக்கிலோ பச்சரிசிக்கு ஐம்பது கிராம் ஜவ்வரிசி போடலாம்.  இல்லைனா அரிசி மட்டும் எடுத்துக்குங்க.  இதை எல்லாரும் செய்யறாப்போல் மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துச் செய்யச் சொல்லப் போவதில்லை.  நாளைக்கு வடாம் போடறதுன்னா இன்னிக்கு ராத்திரியே அதை நல்லாக் கழுவி அரிசியும் ஜவ்வரிசியுமா நீர் ஊற்றி ஊற வைச்சிடுங்க.

மறுநாள் காலையிலே  ஊற வைத்த அரிசியையும், ஜவ்வரிசியையும் நன்றாக நைசாக (சில்க் மாதிரி வழவழனு இருக்கணும்.) அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  தோசை மாவு பதத்துக்கு இருக்கலாம்.  பின்னர் அரிசி அரைக்கிலோவுக்குத் தேவையான பச்சைமிளகாய் ஐம்பது கிராம், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். நல்ல நைசாக விதைகள் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.  ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை அதோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடி கனமான உருளி அல்லது வேறு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றிக் கொண்டு மூன்று கிண்ணம் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.  நன்றாகக் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவைக் கொதிக்கும் நீரில் ஒரு கையால் ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கிளறவும்.  நன்கு மாவு முழுதும் ஒன்றாய்க் கலந்து வேகும்வரை கிளறவும். கீழே இறக்கும் முன்னர் ஒரு கரண்டி பாலை ஊற்றிக் கலக்கவும்.  இதனால் வடாம் வெண்மையாக இருக்கும்.  பின்னர் வெந்த மாவை ஒரு அகலமான தாம்பாளத்தில் கொட்டிக் கொண்டு அரைத்து வைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு கலந்த பச்சை மிளகாய் விழுதைப் போட்டுக் கலக்கவும்.   மாவு சூடாக இருந்தால் ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த ஜலம் வைத்துக் கொண்டு அதைத் தொட்டுக் கொண்டு மாவும், மிளகாய் விழுதும் நன்கு கலக்கும்படிப் பிசையவும்.  பின்னர் மொட்டை மாடியில் ஒரு துணி அல்லது வெண்ணிற ப்ளாஸ்டிக் ஷீட் போட்டுக் கொண்டு ஓமப்பொடி அச்சு, தேன்குழல் அச்சு, முள்ளுத் தேன்குழல் அச்சு, ஓட்டு பக்கோடா அச்சு என உங்களுக்கு விருப்பமானதில் மாவைப் போட்டுப் பிழியவும்.  வெயில் கடுமையாக இருந்தால் ஒரே நாளில் காய்ந்துவிடும்.





8 comments:

  1. "இதைத்தான் உங்களிடம் எதிர்ப்பார்த்தேன்..." - சொன்னது துணைவி...

    நன்றி..

    ReplyDelete
  2. 'கொலவெறி' பாட்டுக்கு இப்ப அர்த்தம் புரிஞ்சாப்ல இருக்கு.

    ReplyDelete
  3. கேள்வி ஏன் ரெண்டு தரம் கேட்டுருக்கீங்க?

    உருளி இல்லை. எனவே வேறு பாத்திரத்தில்தான் செய்வோம். பால் இதுவரை விட்டதில்லை. இரண்டு மூன்று நாட்களாக பாஸ் வடாம் பற்றிப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  4. நாங்களும் இன்னும் போட ஆரம்பிக்கலை. புயல் சின்னம் உருவாகியிருக்காமே...:)காலையிலேர்ந்து தூறல் வேற...:)

    பால் விட்டது இல்லை. இந்த டிப்ஸை மாமியாரிடம் சொல்கிறேன்.

    ReplyDelete
  5. வாங்க டிடி, நன்றிக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஹிஹிஹி, அப்பாதுரை, அதே, அதே! :))))))

    ReplyDelete
  7. உருளி இல்லைனா பெரும்பாலும் இப்போல்லாம் பழைய குக்கரிலேயே கிளறுகிறாங்க. அப்படியும் செய்யலாம், ஸ்ரீராம். நான் அதிகமாப் போட்டுக் கிளறுவதில்லை. ஒரு நாளைக்கு 2 ஆழாக்குத் தான். அதுக்கு மேலே போட்டால் கிளற முடியாது. இறக்கும்போது பால் ஊற்றினால் வடாம் வெள்ளையாக இருக்கும். எண்ணெய் அப்போ அப்போ புதுசாக வைத்தால் சிவக்காமலும் பொரித்து எடுக்கலாம்.

    ReplyDelete
  8. வாங்க கோவை2தில்லி, புயல் சின்னமா? மோர் மிளகாய் காய வைக்க முடியலை. :) ஹிஹி, நாம வடாம், வத்தல்னு போடாட்டியும் மோர் மிளகாய் போட்டால் கூட மழை வரும்னு தெரியாத போயிடுச்சே! இனிமேல் மழை வரதுக்கு ஊர் ஊராப் போய் வடாம், வத்தல், மோர் மிளகாய்னு போட்டுட்டு, வசூல் பண்ண வேண்டியது தான்! :)))))))))

    ReplyDelete