எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, August 29, 2013

பாதாம், முந்திரிப் பாயசம்

ஹிஹிஹி, பாதாம்பருப்பு என்றாலே ஶ்ரீராம் நினைவில் வரார். :)) முன்னொரு தரம் பாதாம் அல்வா பண்ணினதை எழுதி இருந்தப்போ அவர் டிஃபனுக்கு பாதாம் அல்வா கேட்டது குறித்துச் சொல்லி இருந்தார்.  முந்தாநாள் கிருஷ்ணனுக்கும் பாதாம், முந்திரி போட்டுப் பாயசம் பண்ணினேன்.  மத்தவங்க எப்படிப் பண்ணுவாங்களோ தெரியலை.  நாம தான் எல்லாத்திலேயும் தனி ஆச்சே! இங்கே நம் செய்முறை கொடுக்கிறேன். ரொம்பவே சுலபம் தான்.

நான்கு பேருக்குப் பாயசம் செய்ய:

பால் 250 கிராம்

பச்சரிசி  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஐம்பது கிராம்

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஒரு நடுத்தர அளவு  காரட் ஒன்று

பாதாம் ஐம்பது கிராம்

முந்திரி பத்து

ஏலக்காய்,

குங்குமப் பூ(தேவையானால்) ஒரு டீஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்.

நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கிஸ்மிஸ் பழம்  ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை  150 கிராம் அல்லது இரண்டு கிண்ணம்


பாதாம், முந்திரியைக் கழுவி  ஏலக்காய், அரிசி சேர்த்து ஊற வைக்கவும்.  குறைந்தது 2 அல்லது மூன்று மணி நேரம் ஊற வேண்டும்.  ஏலக்காயை அதில் போடவில்லை எனில் தனியாகப் பொடி செய்து ஓரமாக வைக்கவும்.   காரட்டைப் பொடியாகத் துருவவும், அல்லது நறுக்கவும்.  ஊறிய அரிசி, பாதாம், முந்திரி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். ரவை மாதிரி இருத்தல் வேண்டும்.  நன்கு ஜலம் விட்டுக் கரைத்து வைக்கவும்.

அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கரைத்து வைத்த மாவுக்கரைசலை ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கரண்டியால் கிளறவும்.  சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டும்.  அடிப்பிடித்துவிட்டால் ருசியே போயிடும்.  நீர் தேவை எனில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.  பாயசம் கெட்டியாக வேண்டுமா, நீர்க்க இருக்க வேண்டுமா என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வேக விட்டேன்.  கரைசலில் அரிசி, பருப்பு தெரியக் கூடாது.  அவை நன்கு கரைந்ததும், சர்க்கரை சேர்க்கவும்.  பக்கத்தில் பாலைக் காய்ச்சிக் குறுக்கி வைக்கவும்.  சர்க்கரை கரந்து பாயசம் சேர்ந்து வரும்போது குறுக்கிய பாலைச் சேர்க்கவும்.  பாலைச் சேர்த்ததும் பாயசம் நீராக வரக்கூடாது.  சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி ஏலப்பொடி, குங்குமப் பூவைப் பாலில் நனைத்துக் கரைத்து விடவும்.  மிச்சம் உள்ள நெய்யைச் சூடாக்கித் திராக்ஷைப் பழங்களைப் போட்டு மிதக்க விட்டுப் பரிமாறவும்.  இதைச் சூடாகவும் சாப்பிடலாம்.  ஆற வைத்தும் சாப்பிடலாம்.  பாதாம் கீர், பாதாம் அல்வா போன்றவை பின்னர்.

Sunday, August 25, 2013

பறங்கிக் காய் சமையல்கள்!

பொதுவாகப் பறங்கிக் காயை சாம்பாரில் போட்டுத் தான் பார்ப்போம்!  இல்லையா?  ஆனால் அதைப் பொடிப் பொடியாக நறுக்கி அடையிலும் போடலாம்.  தேங்காய்க் கீற்றுப் போல் இருக்கும்.  என்ன ஒரு முக்கியமான குறிப்புன்னா, பச்சைப் பறங்கியாக இருக்கணும்.  சின்ன இளங்கொட்டையாக இருந்தால் இன்னும் நல்லது.  இங்கே இளங்கொட்டை கிடைக்குது.  வாங்கி அடைக்கும் போடுவோம்.  கூட்டுச் செய்வேன். சப்பாத்திக்கும், சாப்பாடுக்குத் தொட்டுக்கொள்ளவும் கூட்டுச் செய்வதுண்டு. சாப்பாட்டுக்குச் செய்வது கொஞ்சம் கேரள பாணி! ஹிஹிஹி, முன்னோர் ஜீன்ஸில் கொஞ்சம் இருக்கு போல!  அதான் சில சமயம் இப்படி திடீர் திடீர்னு கேரள பாணியெல்லாம் வரும். :))))))  இப்போ சாப்பாட்டுக்குச் செய்வது எப்படினு பார்ப்போம்.


மெட்ராஸ்காரங்களுக்குப் பச்சைப் பறங்கி கிடைப்பது கஷ்டம். கிடைச்சால் சரி.  இல்லைனா, சிவப்புப் பூஷணி எனப்படும் பறங்கியிலேயே செய்யலாம். வேறே வழி? :)))

நான்கு பேருக்குத் தேவையானவை:

பறங்கிக்காய் சின்னதான இளம்கொட்டை 1 அல்லது அரை கிலோ பறங்கிக் கீற்று.

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

உப்பு தேவைக்கு

பச்சை மிளகாய் 3

தேங்காய்  ஒரு மூடி

அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்

தே. எண்ணெய், கடுகு, கருகப்பிலை.


பறங்கிக்காய் கீற்றாக வாங்கினால் தோலை நீக்கி விட்டு(பச்சை என்றால் தோலோடு) நறுக்கிக் கொள்ளவும்.  கூட்டுக்கு நறுக்குவது போல் துண்டம் துண்டமாக நறுக்கணும்.  தேங்காயைத் துருவி அரைத்துப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  இரண்டு முறை எடுத்தாலே போதும். இப்போது அடுப்பில் கடாயை அல்லது உருளியை வைத்துப் பறங்கித் துண்டங்களை வேகப் போடவும்.  மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும்.  பாதி வேகும்போது பச்சைமிளகாயை இரண்டாகக் கிள்ளி அதில் போடவும்.  நன்குசேர்ந்து தளதளவென்று வேகும்போது ஒரு கரண்டியால் மசிக்கவும். இரண்டாவது தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும்.  கொஞ்சம் கொதித்ததும், முதல் பாலில் அரிசிமாவைச் சேர்த்துக் கூட்டில் விட்டு ஒரே கொதி விட்டுக் கீழே இறக்கவும்.  தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, கருகப்பிலை சேர்த்து, பிடித்தால் தேங்காய்ச் சக்கையையும் போட்டு வறுத்துக் கூட்டில் சேர்க்கவும்.  சாம்பார், வற்றல் குழம்பு சாதத்தோடு சாப்பிட அருமையான துணை இது.

அடுத்துப் பறங்கிக் காய்த் துவையல்:

பறங்கிக் காய் கால் கிலோ

மி.வத்தல் 6 அல்லது எட்டு(அவரவருக்குத் தேவையான காரத்துக்கு ஏற்றாற்போல்)

உப்பு, 

பெருங்காயம்

கடுகு, உளுத்தம்பருப்பு

வதக்க சமையல் எண்ணெய்.

புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும்.


பறங்கிக்காயை நன்கு துருவிக் கொண்டு தனியாக வைக்கவும்.  அடுப்பில் வாணலியைப் போட்டு சமையல் எண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு தனியாக வைக்கவும்.  கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். மிளகாய் வற்றல் நன்கு பொரியும்படி வறுக்கவும்.  தும்மல் வந்தால் தனி இடத்துக்கு வந்து தும்மிக் கொள்ளவும்.  இப்போது கடாயில் எண்ணெய் மிகுந்திருந்தால் அதிலே பறங்கிக்காய்த் துருவலையும் போட்டு வதக்கவும்.  எண்ணெய் போதவில்லை எனில் விட்டுக் கொள்ளவும்.  நன்கு சுருள வதக்கி ஆற வைக்கவும்.

மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், ஊற வைத்த புளி, உப்புச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றவும்.  பின்னர் வதக்கிய பறங்கித் துருவலைப் போட்டு அரைக்கவும்.  நன்கு அரைபட்டதும் எடுக்கும் முன்னர் கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு ஒரே சுற்று சுற்றவும்.  கடுகு, உ.பருப்பு நன்கு அரைபடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைக்கவும்.  சாதத்தில் பிசைந்து சாப்பிடத் தயார்.  தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.  இனிப்பாக இருக்கும் என்பவர்களுக்கு!  தேங்காயில் இல்லாத இனிப்பா? தேங்காய்த் துவையல் போலத் தான் இதுவும்.  சாப்பிட்டுப் பாருங்கள்.  துவையல் சாதத்துக்குத் தொட்டுக்க மோர்ச்சாறு, எங்க வீட்டு முறையில்.


ரொம்பப் புளிப்பில்லாமல் அதே சமயம் கொஞ்சமானும் புளிச்சிருக்கும் கெட்டி மோர் ஒரு கிண்ணம். (தலையைப் பிச்சுக்கறீங்களா?  ஹிஹிஹி!) 

அரிசி மாவு இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி, 1/4 டீஸ்பூன்

உப்பு தேவைக்கு.

பெருங்காயப் பொடி

தாளிக்க

கடுகு, து.பருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை

எண்ணெய்.

மோரில் அரிசிமாவு, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, துபருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  இப்போது கலந்த மோரை அதில் ஊற்றிவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். உங்கள் மோர்ச்சாறு தயார்.  துவையல் எந்தத் துவையலாக இருந்தாலும் அதோடு துணைக்கு வரும். 

Wednesday, August 14, 2013

புளி உப்புமா என்னும், பச்சைமாப் பொடி உப்புமா என்னும் குழம்புமாவு உப்புமா படம் பாருங்க.







செய்முறை முன்ன்ன்ன்ன்ன்னாடியே போட்டுட்டேன். போய்ப் பார்த்துக்குங்க.  இங்கே லிங்க் கொடுக்க முடியுதானு பார்க்கிறேன். குழம்புக்கெலாம் நான் மாவு கரைத்து ஊற்றுவதில்லை என்பதால் குழம்பு மாவு உப்புமானு சொல்ல வரதில்லை! :)))))


http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html இங்கே போய்ப் பாருங்க.  இதை அரைச்சுச் செய்தால் இன்னும் தனி ருசி.  ஆனால் எண்ணெய்க் குடமே வேண்டும். கவனம் தேவை.  சூடாகச் சாப்பிடணும்.  ஆறினால் அவ்வளவு ருசி இல்லை. 


Tuesday, August 13, 2013

சாபுதானா கிச்சடி என்ற ஜவ்வரிசி உப்புமா!

தேவையான பொருட்கள்;  நான்கு பேருக்காக.


அரை கிலோ ஜவ்வரிசி (கொஞ்சம் அதிகம் தான், படியால் அளந்தால் ஒன்றரை ஆழாக்கு அல்லது 300 கிராம் போதும்.  ஏனெனில் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும்.  சீக்கிரம் பசிக்காது. அதான் வ்ரத நாட்களில் வைச்சிருக்காங்கனு நினைக்கிறேன். :))))

ஜவ்வரிசி மாவு ஜவ்வரிசி தான் நல்லா இருக்கும்னு என்னோட கருத்து. நைலான் ஜவ்வரிசி நல்லா இருக்கிறதில்லை. வத்தல் போடும் ஜவ்வரிசினு கேட்டு வாங்குங்க மக்களே!


ஜவ்வரிசி கப்பால் அளந்தால் மூன்று கிண்ணம்
உருளைக்கிழங்கு  பெரிதாக 2 (நன்கு கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் ஆறு
வேர்க்கடலை வறுத்துப் பொடித்தது ஒன்றரைக் கிண்ணம்
கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் (தேவையானால்) ஒன்று
உப்பு தேவைக்கு ஏற்ப


தாளிக்க

சமையல் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்,

கடுகு ஒரு டீஸ்பூன்
ஜீரகம் ஒரு டீஸ்பூன்


சாபுதானா எனப்படும் ஜவ்வரிசியை நாளைக்காலை உப்புமா பண்ணவேண்டுமெனில் முதல் நாள் இரவே நன்கு களைந்து கழுவி நீரை வடித்து அதில் இருக்கும் கொஞ்சம் நீரோடு அப்படியே வைக்கவும்.  மறுநாள் காலையில் பார்த்தால் ஜவ்வரிசி நன்கு ஊறிப் பெரிதாக ஆகி இருக்கும்.  மாலை பண்ணவேண்டுமெனில் காலை ஊறப்போடவும்.  கடாயில் எண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்.  நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்கவும்.  உருளைக்கிழங்கு வேகும் வரை வதக்கிய பின்னர் ஜவ்வரிசியைச் சேர்க்கவும். அதோடு சேர்த்தே வேர்க்கடலைப் பொடியைச் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  வேர்க்கடலை சேர்ப்பதால் ஜவ்வரிசி தனியாக உதிர்ந்து வந்துவிடும்.  நன்கு கிளறி உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.  சூடாகப் பரிமாறவும்.


Thursday, August 8, 2013

இன்னிக்கு விரதமா? கவலைப்படாதீங்க! கை கொடுக்கும் ஜவ்வரிசி

இப்போ ஜவ்வரிசி உப்புமா செய்முறை பார்க்கப் போறோம்.  எனக்கு முதல்முதலா அறிமுகம் ஆனது ராஜஸ்தானுக்கு முதல் முறை போனப்போ தான். கூடவே இருந்த நண்பர் மனைவி அவங்க வீட்டுக்காலை உணவாகச் செய்திருந்தாங்க.  செய்முறையும் சொன்னாங்க.  அவங்க செய்தது கொஞ்சம் சேர்ந்திருந்தாலும் பரவாயில்லாமல் ருசியாக இருந்தது.  ஆனால் நம்ம ரங்க்ஸுக்கோ, ஜவ்வரிசி உப்புமான்னாலே அப்போல்லாம் அலர்ஜி.  இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது?  இத்தனை வருஷத்தில் இப்போத்தான் இரண்டாம் முறையாப் பண்ணி இருக்கேன்னா பார்த்துக்குங்க.   யார் வீட்டில் ஜவ்வரிசி உப்புமா தரப் போறாங்கனு நானும் பொண்ணும் பார்த்துட்டு இருந்து ரெண்டு பேரும் அடிச்சுப்போம். வெட்கம் கெட்டதுங்கனு நினைச்சிருப்பாங்களோ! இருக்கும், இருக்கும்!  நினைச்சா நினைச்சுட்டுப் போகட்டும். விடுங்க. 

ஜவ்வரிசி உப்புமாவிலே அப்படி என்ன இருக்குனு கேட்கறீங்களா? ஒண்ணும் இல்லை; எல்லாமும் இருக்கு.  ஆனால் வட மாநிலங்களில் விரத தினத்திற்குனு வைச்சிருக்கும் ஆகாரம் இது.  அன்னிக்கு அவங்க அரிசியோ, கோதுமையோ சேர்க்க மாட்டாங்க. நாமெல்லாம் பலகாரம்னு அடை, தோசை, உப்புமா, இட்லி, சப்பாத்தினு சாப்பிடறதைப் பார்த்துட்டு அவங்களுக்குச் சிரிப்பு வரும்.  விரதம் என்றால் ஒரே வேளை தான் சாப்பாடு. அதுவும் இரவில். அவங்க பூஜை எல்லாம் முடிச்சு இந்த உப்புமாவைப் பண்ணி பகவானுக்கு நிவேதனம் செய்துட்டுச் சாப்பிடுவாங்க.  அடிக்கடி தேநீரும் குடிக்க மாட்டாங்க.  அவ்வளவு ஏன்!  ரொம்பக் கடுமையா விரதம் இருக்கிறவங்க எச்சில் கூட விழுங்க மாட்டாங்கனா பாருங்க.  மஹாராஷ்ட்ராவில் சோமவார விரதம் என்பது சர்வ சகஜம்.  அந்த விரததத்தைச் சின்னக் குழந்தை கூட ஏற்று விரதம் இருக்கும்.  

பலகாரம் என நாம் சொல்வது ஃபல் ஆஹார் என வட இந்தியர்கள் சொன்னதன் திரிபே என்பதே அங்கே போனப்புறமாத் தான் புரிஞ்சது.  ஃபல்=பழங்கள்.  விரத நாட்களில் சிலர் வெறும் பழங்களையே ஆஹாரமாகக் கொள்வார்கள்.  அவங்க தான் ஃபல் ஆஹார் எனச் சொல்வார்கள்.  முதல்லே போனப்போ ஒருத்தர் தனக்கு இன்னிக்கு ஃபல் ஆஹார்னு சொன்னதை நான் பலகாரம்னு புரிஞ்சுண்டு விதம் விதமாப் பலகாரம் பண்ணி வைச்சது தனிக்கதை.  இன்னொரு நாள் வைச்சுப்போம்.  அடுத்த பதிவில் ஜவ்வரிசி உப்புமா படங்களுடன் வெளிவரும்.  இது ஒரு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னோட்டம்.! இப்போல்லாம் முன்னோட்டம் போடணும்னு தோணிச்சு.  அதான்!

Tuesday, August 6, 2013

எங்க வீட்டிலே வாழைப்பூப்பருப்பு உசிலி! :))




வாழைப் பூப் பருப்பு உசிலி:

நான்கு நபர்களுக்கு:

தேவையான பொருட்கள்: சின்ன வாழைப்பூ ஒன்று. ஆய்ந்து கள்ளன் எனப்படும் நடு நரம்பை எடுத்துவிட்டு நறுக்கி மோரில் போடவும்.

மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.





பருப்பு உசிலிக்கு:

து.பருப்பு ஒரு கிண்ணம்

க.பருப்பு கால் கிண்ணம்

மி.வத்தல் பத்து

உப்பு, பெருங்காயம்.

சமையல் எண்ணெய் உசிலியை உசிலிக்க: ஒரு சின்னக் கிண்ணம் அல்லது நூறு கிராம்.

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை. (தாளிக்க)

பருப்புக்களைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாக அரைக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அல்லது நான் ஸ்டிக் கடாயை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளிக்கவும்.  அரைக்கையில் பெருங்காயம் சேர்க்கவில்லை எனில் இப்போது எண்ணெயில் பெருங்காயப் பவுடராகச் சேர்க்கவும்.  அரைத்த பருப்பு விழுதைப் போடவும். நன்கு கிளறவும்.  பருப்பு விழுது நிறம் மாறி மொறு மொறுவென வரும் வரை வதக்கவும்.



 இப்போது வேக வைத்த வாழைப்பூக் கலவையை இதில் சேர்த்துச் சிறிது நேரம் நன்கு கிளறவும். பின்னர் சூடாகப் பரிமாறவும்.



இதே போல் உசிலி செய்து கொண்டு, கொத்தவரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், புடலை போன்றவற்றிலும் பருப்பு உசிலி செய்யலாம். வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றிலும் செய்யலாம்.

வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றைக் கழுவி நன்கு பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு அரைத்த பருப்பு விழுதில் சேர்த்து இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.  பின்னர் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு உதிர்க்கவும்.


வாழைப்பூப் படம் மட்டும் நன்றி கோவை2தில்லி. :)))

மற்றப்படங்கள் இன்னிக்குச் செய்யும்போது எடுத்தவை. :))))

இன்னிக்கு என்ன சமையல் உங்க வீட்டிலே?

முன்னெல்லாம் இப்படிக் கேட்பாங்க.  இன்னிக்கு என்ன சமையல், என்ன சாப்பிட்டேனு! இப்போல்லாம் கேட்கிறதில்லை.  அப்படிக் கேட்டாலும் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பராகவோ, உறவாகவோ தான் இருக்கும்.  முன்னெல்லாம் அக்கம்பக்கம் வீட்டுக்காரங்க கூட ஒருத்தருக்கொருத்தர் கேட்டுப்பாங்க.  இப்போ அக்கம்பக்கம் இருக்கிறதும் தெரியலை.  காப்பிப் பொடி கொடுங்க, சர்க்கரை கொடுங்க, பால் இருக்கா, திடீர் விருந்தாளி வந்துட்டாங்கனு கேட்டுட்டு வருவாங்க.  இப்போல்லாம் கடைகள் அருகிலேயே இருப்பதால் யாரும், யாரையும் கேட்டுக்கிறதில்லை. ஒரு சிலர் பால், மோர் போன்றவை எல்லாம் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கொடுக்க மாட்டாங்க.  கண்டிஷனா எங்க வீட்டிலே இல்லைனு அடிச்சுச் சொல்லிடுவாங்க.  என்னைக் கேட்டால் அது தப்புனு சொல்வேன்.  யாரும் வேணும்னு வந்து கேட்கப் போறதில்லை.  தேவைக்குத் தானே வராங்க.  ஆகையால் கொடுக்கலாம்; குறையாது.  நானெல்லாம் கொடுத்துடுவேன்.  எண்ணெய் கேட்டால் மட்டுமே கூட மஞ்சள் கொடுத்துடுவேன்.  எண்ணெய் கடன் ஆகாது என்பார்கள்.  ஆகவே மஞ்சளோடு கொடுத்தால் சுமங்கலிக்குக் கொடுத்தாப்போல் ஆகும் என்பார்கள்.  ஹிஹி, இதெல்லாம் எதுக்குனு கேட்கிறீங்களா? சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!  ரொம்ப நாளா நினைச்சது.  இன்னிக்கு எழுதினேன். இன்னிக்கு ஆடி அமாவாசை.  இங்கே அம்மா மண்டபத்தை மூடிட்டாங்க.

காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கு அம்மாமண்டபமும் அதை ஒட்டிய காவிரிக்கரைகளும்.  ஆகவே இன்னிக்குப் போக நினைச்சது போக முடியலை. எண்ணங்கள் பதிவிலே மாடியிலே இருந்து எடுத்த படங்களைப் பகிர்ந்துக்கறேன். இன்னிக்கு வாழைப்பூப் பருப்பு உசிலி செய்தேன்.  அதன் செய்முறை அடுத்து வரும். :)))))