எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, September 28, 2013

இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி! :))))

திடீர்னு குழம்பை விட்டுட்டுப் பொடியைப் பத்தி எழுதறேன்னு நினைச்சீங்களா? ஹாஹா, இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி செய்தேன். அப்புறமாத் தான் படம் எடுக்கலையேனு நினைச்சேன்.  அதனால் என்ன? இன்னொரு தரம் செய்யும்போது படம் எடுத்துடலாம்.  இப்போச் செய்முறை பார்ப்போமா?

நல்ல முத்தின வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று ,
நடுத்தர அளவு எனில் இரண்டு.

மி.வத்தல் 5 அல்லது ஆறு அவரவர் காரம் சாப்பிடும் வழக்கத்துக்கு ஏற்றாற்போல் குறைந்த பக்ஷம் 8 வரை.

உப்பு,

க.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உ.பருப்பு  இரண்டு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு.


வறுக்க நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஏதானும். ஒரு கரண்டி

வாழைக்காயை முன்பெல்லாம் குமுட்டி அடுப்பில் போட்டுச் சுடுவோம்.  சுட்டால் பொடி டேஸ்ட் தனி தான்.  இப்போக் குமுட்டி இருக்கு.  கரி இல்லை. :( ஆகவே வெந்நீரில் தான் போட்டேன்.  ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து.  வாழைக்காயை இரண்டாக வெட்டிப் போடவும்.  கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அங்கே இங்கே போகாமால் நீரில் போட்ட வாழைக்காயின் ஒரு பக்கம் கறுப்பாக ஆனதும் கறுப்பாக ஆகாத மறுபக்கம் திருப்பி விடவும்.  சீக்கிரமே கறுப்பாகிவிடும்.  உடனே எடுத்துவிடவேண்டும்.  வாழைக்காய் முழுதும் வேகக் கூடாது.  தோல் உரியும் வண்ணம் நிறம் மாறினால் போதுமானது.  இப்போது வாழைக்காயைத் தோலை உரிக்கவரும்.  தோல் உரித்துக் காரட் துருவலில் நன்கு துருவித் தனியாக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், கடலைப்பருப்பு, உ.பருப்பு ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.  எடுத்து ஆற வைக்கவும்.  மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், உப்புச் சேர்த்து ஒரு தரம் சுற்றிவிட்டுப் பின்னர் கடலைப்பருப்பு, உ.பருப்புப் போட்டுச் சுற்றவும்.  இதுவும் ஒரே முறை சுற்றினால் போதும்.  இப்போது வாழைக்காய்த் துருவலைப் போட்டுச் சுற்றவும்.  ஒரே சுற்றுத் தான்.  வெளியே எடுத்து நன்கு கலக்கி வைக்கவும்.   சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடவும், அல்லது சைட் டிஷாகத் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

டிடி கவனிக்க:  இதுவும் மோர் சாதத்துக்கு ஜூப்பரோ ஜூப்பரு! :)))

என்னத்தைக் குழம்பு வைச்சீங்க?

இப்போ இந்த வெறும் குழம்பிலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமான ஒண்ணைப் பார்ப்போம். ஹிஹிஹி, இந்தக் குழம்புக்கு எங்க வீட்டிலே, அம்மா ஃபேவரிட்னு பேரு வைச்சிருக்காங்க.  என் மாமியாரெல்லாம் இப்படிப் பண்ணினதில்லை.  அவங்களுக்கு இப்படி எல்லாம் குழம்பைச் சித்திரவதை பண்ணலாம்னு தெரியாது போல. என்றாலும் இந்தக் குழம்பு அடைக்குத் தொட்டுக்க, உப்புமா(அரிசி உப்புமா), பொங்கல் ஆகியவற்றுக்கு எடுத்தது. நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

நல்ல நாட்டு முருங்கைக்காய்  ஒன்று, குழம்புத் தானுக்கு ஏற்றாற்போல் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி நடுத்தரமானது 2

சின்ன வெங்காயம் நூறு கிராம்.  சின்ன வெங்காயம் கிடைக்கலைனா பெரிய வெங்காயம் ஒண்ணை நறுக்கிக்கவும்.

கத்தரிக்காய் 2   நறுக்கிக்கவும்.  முருங்கைக்காய் நீளமாய் நறுக்கினால் கத்தரிக்காயும் நீளமாய் நறுக்கணும். தக்காளி மற்றும்  பெரிய வெங்காயமும் நீளமாக நறுக்கணும்.

பச்சை மிளகாய் 2

மி.வத்தல் 2

கருகப்பிலை ஒரு கைப்பிடி

பெருங்காயம் ஒரு துண்டு

நல்லெண்ணெய் தாளிக்க, வதக்கப்போதுமான அளவு ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவைக்கு ஏற்ப

புளி ஒரு எலுமிச்சை அளவு, ஊற வைச்சுக் கரைத்துக் கொள்ளவும்.  கரைசல் மூன்று கிண்ணம் இருக்கலாம்.

குழம்புப் பொடி, முன் பதிவில் சொன்னாப் போல் தயார் செய்தது,  மூன்று டீஸ்பூன்.

கடுகு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன்.

கல்சட்டி/உருளி/கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், மி.வத்தல், பச்சைமிளகாய், பெருங்காயம், கருகப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.  பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், முருங்கைக்காய், கத்தரிக்காய் போட்டு ஒரு நிமிடம் வதக்கிப் பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றி குழம்புப் பொடி, உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.  சேர்ந்து கொதிக்கையில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கவும் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தோடு சாப்பிட, முன் சொன்னாப் போல் உப்புமா, பொங்கல், அடைக்கு ஏற்ற குழம்பு இது.  மோர் சாதத்துக்கும் ஜூப்பரோ ஜூப்பரு!


Sunday, September 22, 2013

வற்றல் குழம்பு!

என்னடானு அதிசயமாப் பார்க்கிறவங்களுக்கு!  வற்றல்கள் போட்டுச் செய்வது தான் வற்றல் குழம்பு.  மத்தவங்க எப்படியோ நம்ம ரங்க்ஸ் என்னடானா பருப்புப் போடலைனா அதை வற்றல் குழம்புனு சொல்லிடுவார்.  நறநறநறநற! :)))

வற்றல்கள் அவரை, கொத்தவரை, கத்திரி, வெண்டை,(இதிலே வற்றல்குழம்பு எனக்குப் பிடிக்கிறதில்லை.  வெண்டை வற்றலில் மோர்க்குழம்பு மட்டும் பிடிக்கும்.) தாமரைக்கிழங்கு வற்றல், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மிதுக்கவத்தல்(மதுரை ஸ்பெஷல் இந்த வற்றல்)  ஆகிய வற்றல்கள் போட்டுச் செய்வதே வற்றல் குழம்பு. நான்கு பேருக்குச் செய்யத்

தேவையான பொருட்கள்:

புளி பழசு என்றால் நல்லது.  நிறம் கருப்பாக இருக்கும் என நினைப்பவர்கள், பழைய புளி கொஞ்சமும், புதுப்புளி கொஞ்சமுமாக ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீரில் ஊற வைக்கவும்.

தாளிக்க:

கடுகு,  ஒரு டீ ஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்,
து.பருப்பு,
க.பருப்பு,
உ.பருப்பு 
ஆகியன தலா அரை டீஸ்பூன்.

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு
மி.வற்றல் இரண்டு,

மேலே சொன்ன வற்றல்களில் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு

கருகப்பிலை

நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு கரண்டி. (நல்லெண்ணெய் தான் ருசியாக இருக்கும்.  பிடிக்கலைனாலோ, கிடைக்கலைனாலோ வேறு சமையல் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தவிர்க்கவும்.)

சாம்பார்ப் பொடி 3 டீ ஸ்பூன் , 
உப்பு தேவைக்கு

(எங்க வீட்டிலே சாம்பார்ப் பொடினு அரைக்க/திரிக்க மாட்டோம்.  குழம்புப் பொடினு 1/4 கிலோ மி.வத்தலுக்கு 3/4 கிலோ தனியா, 50 கிமிளகு, 200துவரம்பருப்பு,  ஒரு கரண்டி க.பருப்பு, 50 வெந்தயம், 100 கிராம் விரலி மஞ்சள்  போட்டுக் காய வைத்துவிட்டு, பருப்பு சாமான்களை மட்டும் சிவக்க வெறும் வாணலியில் வறுத்துச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து/திரித்து வைச்சுப்போம்.  ரசம் இதிலே செய்தால் நீர்க்கத் தெளிவாக வரும்.  இந்த மாதிரிக் குழம்புகளுக்கு இந்தப் பொடியைப் போட்டால் நன்றாக இருக்கும்.  சாம்பார் என்றால் முழுக்க வறுத்து அரைத்துத் தான் செய்வோம். 

வாணலி அல்லது கல்சட்டியைக் காய வைத்துக் கொண்டு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் வற்றல்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அதே எண்ணெயிலேயே கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை என வரிசையாகத் தாளித்துக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.  குழம்புப் பொடியையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். நன்கு கொதித்துக் குழம்பில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வறுத்து வைத்த வற்றலைச் சேர்த்து உடனே கீழே இறக்கவும். ஒரு சிலர் சாப்பிடும்போதும் வற்றலைச் சேர்ப்பது உண்டு.  அம்முறையில் குழம்பின் உப்புக் காரம் வற்றலில் சேராது.  ஆகையால் கொதிக்கையில் கடைசியில் சேர்க்கலாம். 


இந்தக் குழம்புக்கு இன்னும் மணம் கூட்ட வெறும் சட்டியில் மி.வத்தல் நான்கு, துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் இரண்டு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.  வற்றலைப் போட்டதும் இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் போட்டுக் கீழே இறக்கவும்.  ஒரு சிலர் குழம்புப் பொடியே போடாமல் முழுக்க இந்தப் பொடியே போட்டுக் குழம்பு செய்வதுண்டு.  அதற்கு வெந்தயக் குழம்பு என்று பெயர்.  பின்னர் பார்க்கலாம்.