எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, October 31, 2013

லாடு வகைகள் தொடர்ச்சி--விடமாட்டோமுல்ல! :)

இப்போவே சொல்லிக்கிறேன்.  இந்த முறையில் நான் செய்தது இல்லை; இல்லை;  இல்லவே இல்லை.  ஆனால் யு.எஸ்ஸில் இருக்கும் என் மகளார் செய்கிறார்.  அவர் சொல்லித் தான் நான் இதைப் போடறேன்.  ஒரு புது மாதிரி ரவா லாடுவைப் பார்க்கப் போறோம்.  ஆனால் இதை ரொம்ப நாள் வைச்சுக்க முடியாது.  வைச்சுக்கும் நாளிலேயும் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைக்கவும்.

ரவை ஒரு கப்  பேணி ரவைனு கேளுங்க, ரொம்பவே நைசாக் கிடைக்கும்.

சர்க்கரை ஒரு கப்

தேங்காய்த் துருவல் ஒரு கப்

முந்திரிப்பருப்பு,

திராக்ஷை வகைக்குப் பதினைந்திலிருந்து இருபது வரை

ஏலக்காய்ப் பவுடர் ஒரு டீஸ்பூன்

நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு சின்னக் கிண்ணம்

பால் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது தேவைப்படும் வரை.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி ரவையை நல்லா வாசனை வரும்வரை வறுக்கவும்.  தனியா வைங்க.  ஏலக்காய்ப் பவுடரைக் கலந்துடுங்க.

சர்க்கரையை மிக்சி ஜாரில் பொடித்துக் கொண்டு தனியா வைங்க.

இப்போ மிச்சம் நெய்யிலே முந்திரிப்பருப்பு, திராக்ஷையை வறுத்து ரவையோட சேர்த்துட்டு, அடுப்பில் கடாயில் மீதம் இருக்கும் சொச்சம் நெய்யில் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுக்கவும்.  தேங்காய் வறுபட்டதும், ரவை+மு.பருப்பு, திராக்ஷை+ஏலம் சேர்த்த கலவையைப் போட்டுச் சிறிது வறுக்கவும்.  இரண்டும் நன்கு கலந்ததும் சர்க்கரைப் பவுடரைச் சேர்த்து ஒரு நிமிஷம் வறுக்கவும்.  சர்க்கரை நன்கு கலந்துவிட்டது தெரிந்தால் அடுப்பை அணைத்துவிட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலவையில் ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கிளறவும்.  உருண்டைகள் பிடிக்க வரும் என்பது உங்களுக்குப் புரியும் சமயம் பால் ஊற்றுவதை நிறுத்தவும்.  கொஞ்ச நேரம் ஆற வைத்துவிட்டுச் சூடு பொறுக்கும் வண்ணம் இருக்கையிலேயே உருண்டைகள் பிடித்துக் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.  உடனடியாகத் தின்று தீர்த்துவிடவும்.


Tuesday, October 29, 2013

லாடு வகைகள், தொடர்ச்சி!

குஜராத்தில் உளுத்தம்பருப்பில் லாடு செய்வது மிகவும் அதிகம்.  நல்ல தோல் நீக்கிய

வெள்ளை உளுத்தம்பருப்பு  கால் கிலோ

வெல்லம் தூளாக (பாகு) கால் கிலோ

ஏலத்தூள்

முந்திரிப்பருப்பு, பாதம், பிஸ்தா(தேவையானால்)

கசகசா  50 கிராம்

நெய் நூறு கிராம்.

உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக்கவும்.  இதோடு தூள் வெல்லத்தைச் சேர்த்துக் கொண்டு நெய்யில் வறுத்த மு.பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளவும்.  நெய்யைச் சூடாக்கிக் கலவையில் ஊற்றி லாடு பிடித்துக் கொள்ளவும்.  முன்னதாக ஒரு தாம்பாளத்தில் கசகசாவைப் பரத்திக் கொட்டி வைக்கவும்.  இந்தப் பரத்தலில் லாடை ஒரு புரட்டுப் புரட்டித் தனியாக எடுத்து வைக்கவும்.  இது பெண்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதோடு அல்லாமல், இடுப்புக்கும் வலுவைத் தரும்.

மோகன் லாடு:  இதிலே கொஞ்சம் வேலை அதிகம்.  என்றாலும் முடிஞ்சவங்க முயன்று பார்க்கலாம்.

கோதுமை மாவு கால் கிலோ

சர்க்கரை கால்கிலோ

மு.பருப்பு ஐம்பது கிராம்,

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்க நெய் அல்லது டால்டா அல்லது ஏதேனும் வனஸ்பதி அரை கிலோ


கோதுமை மாவை சிறிதளவு உப்புச் சேர்த்து நன்கு பிசையவும்.  பிசைந்த மாவை அரை மணி ஊற வைத்து மெலிதான பூரிகளாக இட்டு நெய்யில் பொரிக்கவும். நெய்யில் பொரித்தால் தான் நன்றாக இருக்கும்.  அவரவர் வசதிப்படி செய்யவும்.  நெய் இல்லை எனில் டால்டா அல்லது ஏதேனும் வனஸ்பதியில் செய்யலாம். பொரித்த பூரிகள் மொறுமொறுப்போடு இருக்க வேண்டும்.  ஆகவே நன்கு சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

இந்தப் பூரிகளை  முன்னெல்லாம் கல்லுரலில் போட்டு இடிப்பார்கள்.  இப்போது அகலமான மிக்சி ஜாரில் போட்டுப் பொடியாக்கவும்.  சர்க்கரையையும் பொடித்துக் கொண்டு பூரிக் கலவையோடு சேர்க்கவும்.  வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலத்தூள் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.  முன் சொன்னது போல் கசகசாவிலும் புரட்டி எடுக்கலாம்.

இதையே வெல்லம் சேர்த்தும் செய்வது உண்டு.  அது சூர்மா லாடு எனப்படும்.  ராஜஸ்தானில் தால் பாட்டியுடன், (காரமான தால், கெட்டியான பாட்டி) இந்த இனிப்பான சூர்மாவும் சில்லென்ற லஸ்ஸியும் மதிய உணவாக உண்பார்கள். 

தீபாவளி பக்ஷணங்கள், லாடு வகைகள்!

இந்த வருஷம் தீபாவளி கிடையாது என்றாலும் நமக்குக் கொடுக்கிறவங்களுக்குத் திருப்பிக் கொடுக்க, வீட்டுக்கு வரவங்களுக்குக் கொடுக்க என ஏதேனும் கொஞ்சம் செய்து வைச்சுக்கணும்.  இம்முறை கோதுமை+கடலைப்பருப்பு லாடு செய்ய எண்ணம்.  கோதுமையும் கடலைப்பருப்பும் வாங்கி வைச்சிருக்கேன்.  நாளைக்குத் தான் திரிக்கணும்/அரைக்கணும். :)

இது சுமார் முப்பது லாடுகள்  எலுமிச்சை அளவு வரும்படி செய்யத் தேவையான  பொருட்கள்:

கோதுமை கால் கிலோ

கடலைப்பருப்பு கால் கிலோ

சர்க்கரை  முக்கால் கிலோ

போதுமானது.  தித்திப்பு அதிகம் வேண்டும்னா ஒரு கிலோ போட்டுக்கலாம். ஆனால் அது ரொம்பவே ஜாஸ்தியாயிடும்.  நான் அரைகிலோ தான் போடப் போறேன்.  நம்ம ரங்க்ஸ் உடம்பிலேயே சர்க்கரைத் தொழிற்சாலை வைச்சிருக்கறதாலே அரைச் சர்க்கரை தான் எல்லாத்துக்கும்.

முந்திரிப்பருப்பு, ஐம்பது கிராம்,

திராட்சைப் பழம் (கிஸ்மிஸ்) ஐம்பது கிராம்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

நெய் கால் கிலோ


முதலில் கோதுமையையும், கடலைப்பருப்பையும் சுத்தம் செய்து கொண்டு, வெறும் வாணலியில் கோதுமை பொரியும் வரையும், கடலைப்பருப்பு சிவக்கும் வரையும் வறுக்கவும்.  மெஷினில் கொடுத்து மாவாக்கவும்.  சர்க்கரை அதிகம் போடுபவர்கள் மெஷினிலேயே சர்க்கரையையும் அரைக்கலாம். நான் கொஞ்சமாய்ப் போடுவதால் சர்க்கரையை மிக்சியில் அரைச்சுடுவேன்.  வறுத்து அரைத்த மாவில் சர்க்கரைத் தூளைக் கலக்கவும்.  முன்னெல்லாம் குழைவு ஜீனி எனப் பெயர் கொண்ட மாவு ஜீனி கிடைக்கும்.  லாடு வகைகளுக்கு அது தான் போடுவோம்.  இப்போ குழைவு ஜீனினு கேட்டாலே புரியறதில்லை. :(  நெய்யில் மு.பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடியையும் கலக்கவும்.

வாணலியில் நெய்யை ஊற்றி நன்கு புகை வரும்வரை காய்ச்சவும். சர்க்கரையும், மாவும் கலந்த கலவையில் அந்த நெய்யை அப்படியே ஊற்றி நன்கு கரண்டியால் கலந்து விடவும்.  மொத்த மாவுக்கலவைக்கும் நெய் போய்ச் சேரும் வண்ணம் நன்றாகக் கலக்கவும். சற்று நேரம் வைத்து விட்டுப்பின்னர் உருண்டைகள் பிடிக்கலாம்.  ஒவ்வொருத்தர் நெய்யைக் காய்ச்சிக் கொண்டே மாவில் ஊற்றிச் சுடச் சுடப் பிடிப்பார்கள். அப்படியெல்லாம் கையை வேக வைத்துக்கொள்ள வேண்டாம்.  நான் மற்ற பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் இப்படி லாடுக்கு நெய்யை ஊற்றி எடுத்து வைத்து விட்டுப் பின்னர் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மெதுவாக வந்து பிடித்து வைப்பேன்.  உருண்டை இறுகி உடையாமல் வரும்.  தைரியமாய்ச் செய்யலாம்.


ரவா உருண்டை:

ரவை அரை கிலோ, சர்க்கரை அரை கிலோ, மு.பருப்பு, திராக்ஷைப்பழம், ஏலப்பவுடர், நெய்.

முன் சொன்னாற்போலவே ரவையை நன்கு வறுத்து அரைத்து மாவாக்கவும். சர்க்கரைப்பவுடர், மு.பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும்.  நெய்யை முன் சொன்னது போலக் காய வைத்துக் கொண்டு மாவுக் கலவையில் ஊற்றிக் கொஞ்சம் ஆற வைத்து உருண்டைகள் பிடிக்கலாம்.

நாளைக்கு கோதுமை உருண்டை செய்துவிட்டால் படம் எடுத்துப் போடறேன்.


பொட்டுக்கடலை லாடு அல்லது மாலாடு:

திருநெல்வேலி, மதுரைப்பக்கம் இந்த லாடு இல்லாத தீபாவளியோ, கல்யாணங்களோ கிடையாது.  முன்னெல்லாம் கொண்டைக்கடலை வாங்கி ஊற வைத்துப் பொரித்துத் தோல் நீக்கி அரைத்துனு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்களாம்.  இப்போதெல்லாம் பொட்டுக்கடலையையே வறுத்துத் தோல் நீக்கி மாவாக்கி சுலபமாச் செய்துடறாங்க.

அரை கிலோ பொட்டுக்கடலை

முக்கால் கிலோ சர்க்கரை

மு.பருப்பு, திராக்ஷை வகைக்கு ஐம்பது கிராம்.

ஏலப் பொடி.

இதுக்குக் கொஞ்சம் நெய் இழுக்கும்.  அரைகிலோவுக்குக் குறையாமல் நெய் வேண்டும்.  அரைகிலோ முழுதும் செலவாகாது. என்றாலும் தட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொட்டுக்கடலையைத் தோல் நீக்கிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மாவாக்கவும்.  சர்க்கரைப் பவுடரோடு வறுத்த மு.பருப்பு, திராக்ஷைப்பழம், ஏலத்தூள் சேர்க்கவும்.  நெய்யை நன்கு காய வைத்து மாவுக்கலவையில் கொட்டவும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் இருந்தாலும் பயப்பட வேண்டாம்.  ஆறியதும் உருண்டைகள் பிடிக்கவும்.  உருண்டை நன்கு கெட்டியாக உடையாமல் வரும்.

Friday, October 25, 2013

வெந்தயக் குழம்புன்னா என்னனு தெரியுமா?

சரி, இப்போ கொஞ்சம் வேகமா வெந்தயக் குழம்பை ஒரு பார்வை பார்த்துட்டு சில, பல தீபாவளி பக்ஷணங்களையும் ஒரு பார்வை பார்த்துடுவோம்.  ஏற்கெனவே சிலது எழுதி இருக்கேன்.  அதிலே இல்லாதது ஏதேனும் இருக்கானு பார்த்துட்டுக் கொடுக்கணும். :)

வெந்தயக் குழம்புக்குத் தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவு,

தேவையான அளவு உப்பு,

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,

இவற்றில் ஏதேனும் ஒரு காய் , முருங்கை, கத்திரி, அவரை, கொத்தவரை, பறங்கிக்காய் போன்றவை துண்டங்களாக நறுக்கியவை ஒரு கைப்பிடி அளவுக்கு, உதாரணமாக முருங்கை என்றால் ஒன்று, கத்திரிக்காய் இரண்டு, அவரை நாலைந்து, கொத்தவரை ஒரு கைப்பிடி, பறங்கிக்காய் ஒரு சின்ன துண்டு என ஏதேனும் ஒரு காயை நறுக்கி வைக்கவும்.

கருகப்பிலை,

பெருங்காயம்,

மி.வத்தல்,

கடுகு,

க.பருப்பு,

உ.பருப்பு,

து,பருப்பு,

வகைக்கு அரை டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை.  காரம் வேண்டுமெனில் இன்னும் இரண்டு போடலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு,

ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சமையல் எண்ணெய் தேவையான அளவு, ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு குழிக் கரண்டி அளவு தேவைப்படும்.

இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளலாம். அல்லது வெந்தயத்தை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மி.வத்தலும், து.பருப்பும் எண்ணெயில் வறுத்துக்கலாம்.  பொடி செய்கையில் மஞ்சள் பொடியைச் சேர்த்துக் கொண்டுவிடவும்.  புளியைக் கரைத்து இரண்டு கிண்ணம் வருகிறாப்போல் வைத்துக் கொள்ளவும்.

கல்சட்டி, வாணலி, அல்லது அடி கனமான உருளி, நான் ஸ்டிக் பாத்திரம் ஏதேனும் ஒன்றில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ,பருப்பு, து,பருப்பு வகைகளைப் போட்டுக் காய்ந்த மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு தானையும் போட்டு நன்கு வதக்கவும்.  பின்னர்  புளிக் கரைசலைச் சேர்த்து, உப்பையும் சேர்க்கவும்.  புளி வாசனை போகக் கொதித்ததும், தான் வெந்துவிட்டதா என்றும் பார்த்துக் கொண்டு வறுத்துப் பொடித்த பொடியைத் தேவையான அளவு சேர்க்கவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கலாம்.  இது அவரவர் இஷ்டம். பொடியைப் போட்ட பின்னர் குழம்பை அதிகம் கொதிக்க விடாமல் கீழே இறக்கவும்.  எண்ணெய் பிரிந்து மேலே வந்திருக்கும்.  வெந்தய வாசனையோடு குழம்பு நன்றாக இருக்கும்.  அரிசி அப்பளம் சுட்டு இந்தக் குழம்போடு சாதத்தில் ஊற்றிச் சாப்பிட சுவையோ சுவை.  மோர் சாதத்துக்கும் அருமையான துணை.  ஒரு சிலர் இதில் தேங்காய்த் துருவல் சேர்க்கின்றனர். இன்னும் சிலர் காய்களுக்குப் பதிலாக ஏதேனும் வற்றல்களும் போடுகின்றனர்.  அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.

இந்தப் பொடி நீண்ட நாட்கள் வரவேண்டுமெனில் வெறும் வாணலியில் சாமான்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துக் கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொண்டு ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டு அவ்வப்போது தேவையான சமயம் எடுத்துப் பயன்படுத்தலாம்.  பொடி கைவசம் இல்லாமல் திடீரெனச் செய்கையில் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து போட்டுப் பயன்படுத்தலாம்.