எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 23, 2013

3 -----தோசையம்மா தோசை அரிசி, உளுந்து அரைத்துச் செய்யும் தோசை

ரவாதோசை என்பது முன் பதிவில் சொன்ன முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படும்.  சில சமயம் இட்லிக்கு அல்லது தோசைக்கு அரைத்த மாவு கொஞ்சம் போல் மிஞ்சும் இல்லையா?  அப்போ அதிலே ரவை, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கம்பு மாவு, சோள மாவு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து தோசை வார்க்கலாம்.  இதற்கு மைதா மாவு சேர்க்கணும்னு அவசியம் ஏதும் இல்லை.  ஆனால் என்னோட அம்மா அரிசியையும், உளுந்தையும் ஊற வைச்சு அரைச்சும் ரவா தோசை, கேழ்வரகு தோசை போன்றவை செய்வாங்க.  அதுக்கு எப்படிச் செய்யணும்னா, மாலை தோசை வார்க்கணும்னா காலையிலேயே அரிசி, உளுந்தை ஊற வைச்சு அரைக்கணும்.  காலை செய்யணும்னா முதல்நாள் மாலையில் ஊறவைச்சு அரைக்கணும்

அரிசி ஒரு கிண்ணம்

உளுந்து முக்கால்கிண்ணம்

இரண்டையும் சேர்த்துக் கழுவி ஊற வைக்கவும்.  பச்சரிசி என்றால் இரண்டு மணி நேரமும் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டும் கலந்தது எனில் மூணு மணி நேரமும் ஊறட்டும்.  ஊறியதை நன்கு நைசாக அரைத்து உப்புப் போட்டுக்கலந்து புளிக்க வைக்கவும்.

ஒரு கிண்ணம் ரவை அல்லது கேழ்வரகு மாவு/கோதுமை மாவு/சோள மாவு/கம்பு மாவுக்கு மேலே சொன்னபடி அரைத்த மாவில் பாதியைப் போட்டுக் கலக்கவும்.  நன்கு கலந்து கரைத்துக் கொள்ளவும்.  ரொம்ப நீர்க்கவும் கரைக்கக் கூடாது.  ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.  கரைத்த மாவில் கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, தேவையானால் வெங்காயம் ஆகியவை சேர்க்கவும். கடுகு தாளிக்கவும்.  தோசையாக ஊற்றவும்.

இந்த மாவு நான்கு பேர்களுக்குப் போதலைனால் மிச்சம் இருக்கும் அரைத்த மாவில் முன் சொன்னது போல் கலந்து கொண்டு தோசை வார்க்கத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொண்டு தோசை வார்க்கவும்.  சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு பரிமாறவும்.

Saturday, December 21, 2013

மிளகு குழம்பும், பருப்புத் துவையலும்!

இப்போ ஒரு அவசரப் பதிவு.  நேத்திக்கு எங்க வீட்டு மெனு மிளகு குழம்பு, பருப்புத் துவையல், ஜீரகம், மிளகு உடைத்துப் போட்ட ரசம்னு ஜி+லே பகிர்ந்திருந்தேனா!  புவனா கணேசன் என்ற சிநேகிதி மிளகு குழம்பும், பருப்புத் துவையலும் சாப்பிட்டதில்லை என்ரு சொல்லி இருந்தார்.  செய்முறை தரேன்னு சொல்லி இருந்தேன்.  இங்கே மிளகு குழம்பின் செய்முறை!

நான்கு பேர்களுக்கு!

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு

வறுக்க

மிளகாய் வற்றல்,  நான்கு அல்லது ஐந்து

மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்(மிளகு காரம் தூக்கலாக இருந்தாலே நன்றாக இருக்கும்.  வேண்டாம் என்பவர்கள் குறைத்துக் கொள்ளலாம்.)

பெருங்காயம் ஒரு துண்டு

மஞ்சள் தூள் அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு(மஞ்சள் எனில் எண்ணெயில் வறுத்துக்கலாம்)

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி

உப்பு தேவையான அளவு

தாளிக்க, வறுக்க  நல்லெண்ணெய் இருந்தால் நல்லது.  ஒரு சின்னக் கிண்ணம் எண்ணெய்.

தாளிக்கக் கடுகு மட்டும்


மிளகு குழம்பில் ஜீரகம் வைக்க வேண்டாம்.  மிளகு காரத்தை அமுக்கிவிடும். ஆகவே முதலில் புளியை(கறுப்புப் புளியாக இருந்தால் நல்லது. பிடிக்காதவர்கள் கறுப்பில்லாப் புளியும் பயன்படுத்தலாம்.) வெறும் வாணலியில் அல்லது கரி அடுப்பு இருந்தால் கரி அடுப்பில் சுட்டு விட்டு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  கரைத்த ஜலம் மூன்று கிண்ணம் வரை இருக்கலாம்.  இதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி  எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விடவும்.  மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  உளுத்தம்பருப்பையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் மிளகைப் போடவும்.  மிளகு வெடிக்கும் வரை அடுப்பில் வைத்து வெடிக்க ஆரம்பித்ததும் எடுத்து வைக்கவும்.  பின்னர் மஞ்சள் துண்டாக இருந்தால் எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  மஞ்சள் பொடி எனில் அரைக்கையில் மிக்சி ஜாரில் போட்டுக்கலாம்.  கருகப்பிலையையும் மிச்சம் எண்ணெயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் அவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.  புளி ஜலத்தில் மஞ்சள் பொடியைச் சேர்த்துக் கலக்கவும்.  அடுப்பில் அதே வாணலி அல்லது கல்சட்டியைக் காய வைத்துக் கொண்டு மிச்சம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும்.  கடுகு தாளிக்கவும்.  கடுகு வெடித்ததும் கலந்த புளிக்கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  கரண்டியால் நன்கு கலக்கிவிட்டுக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்துச் சேறு போல் ஆகும்போது எண்ணெயும் பிரிந்து வர ஆரம்பிக்கும்.  அப்போது கீழே இறக்கவும்.  கல்சட்டி எனில் துணியைப் பிடித்துத் தான் இறக்க வேண்டும்.  இடுக்கியால் பிடித்தால் கல்சட்டி உடைந்து வரும். :)

இதோடு சேர்த்துச் சாப்பிடத் தான் பருப்புத் துவையல்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம்,

மிளகாய் வற்றல் நான்கு

பெருங்காயம் ஒரு துண்டு

உப்பு தேவைக்கு

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு(ஊற வைத்துக் கொள்ளவும்)

தேங்காய்த் துருவல் (தேவையானால்)  ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்கக் கடுகு ஒரு டீஸ்பூன்

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  துவரம்பருப்பையும் களைந்து போட்டுச் சிவக்க வறுக்கவும்.  அதை எடுத்ததும் அந்த வாணலியின் மிச்ச எண்ணெயிலேயே தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும்.  நன்கு ஆற விடவும்.   ஆறிய பொருட்களை உப்பும் ஊற வைத்த புளியையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்.  வெளியே எடுத்துக் கடுகு தாளிக்கவும்.  தேங்காய்த் துருவல் இல்லாமலும் பருப்புத் துவையல் பண்ணலாம். 

தோசையம்மா தோசை! 2 ரவா தோசை!

ரவை பொடி ரவையாக இருந்தால் நல்லது,  இல்லைனாலும் பரவாயில்லை. தோசை செய்ய அரை மணி முன்னே ஊற வைக்கலாம்.  நான்கு பேர்களுக்குத் தேவையான பொருட்கள்.

ரவை இரண்டு கிண்ணம்

அரிசி மாவு ஒன்றரைக் கிண்ணம்

மைதா மாவு ஒரு கிண்ணம்

உப்பு தேவைக்கு

கொஞ்சம் புளித்த மோர் அரைக்கிண்ணம்

கரைக்கத் தேவையான நீர்

மிளகு அரை டீஸ்பூன்

சீரகம் இரண்டு டீ ஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் இரண்டு

தாளிக்கக் கடுகு ஒரு டீஸ்பூன்


முதலில் ரவையைப் புளித்த மோர் விட்டு நன்கு ஊற வைக்கவும். பின்னர் தோசை வார்க்க அரை மணி முன்னால் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்துக் கலந்து நீர் விட்டுக் கரைக்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். மிளகு, சீரகம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.   தோசை மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.  அதே சமயம் அளவாக நீர் சேர்த்துக் கரண்டியால் ஊற்றும் அளவுக்குக் கரைக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகைப் போடவும், கடுகு வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு வதக்கு வதக்கிவிட்டுப் பின் மாவில் சேர்க்கவும்.  அதே தோசைக்கல்லில் தொடர்ந்து தோசையை ஊற்ற ஆரம்பிக்கலாம்.

முதலில் ஒரு கரண்டி மாவை எடுத்துக் கொண்டு சுற்றி ஊற்ற ஆரம்பித்துப் பின்னர் நடுவில் வந்து முடிக்க வேண்டும்.  சாதாரண அரிசி, உளுந்து தோசைக்கு நடுவில் மாவை ஊற்றித் தேய்த்துப் பெரிதாக்குவோம்.  இதுக்கு அப்படி இல்லை. தோசையில் துவாரங்களோடு வரும்.  எண்ணெய் ஊற்றவும்.  ஏற்கெனவே கடுகு தாளித்த கல்லிலேயே தோசையை ஊற்றினால் கல்லில் ஒட்டாமலும் எடுக்க வரும். எந்த தோசையானாலும் முதலில் கடுகு போட்டு எண்ணெயில் வெடிக்க விட்ட பின்னர் மாவை ஊற்றினால் கல்லில் முதல் தோசையே ஒட்டாமல் வரும்.

தோசை மெலிதாக முறுகலாக வரும். சட்னி, சாம்பாரோடு வெளுத்துக் கட்டலாம்.

அடுத்து உளுந்து அரைத்துப் போட்ட ரவா தோசை.

Friday, December 20, 2013

தோசையம்மா தோசை!

தோசையம்மா தோசை,
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஐந்து
அம்மாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
அக்காவுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
திங்கத் திங்க ஆசை
திரும்பக் கேட்டால் பூசை!

தோசைக்கு மயங்காதவர்கள் உண்டோ? எங்க வீட்டிலே வாரம் ஏழு நாட்கள் தோசை இருந்தாலும் அலுக்காது.  இந்த தோசையை வெறும் அரிசி மாவு, உளுந்து மாவு தோசைனு செய்யாமல் கேழ்வரகு தோசை, தக்காளி தோசை, ரவா தோசை, கோதுமை தோசைனு விதம் விதமாய்ச் செய்யலாம்.  முதல்லே தக்காளி தோசையைப் பார்ப்போமா?

தக்காளி தோசை:

தேவையான பொருட்கள்:

அரிசி இரண்டு கிண்ணம்

உளுந்து அரைக்கிண்ணம்

து.பருப்பு அரைக்கிண்ணம்

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்,

தக்காளி பெரிதாக இருந்தால் மூன்று, நிதானமான நடுத்தர அளவுக்கு 4

பச்சை மிளகாய்  நான்கு அல்லது ஐந்து(அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல் கூடவோ, குறைவாகவோ போடலாம்.)

இஞ்சி ஒரு சின்னத் துண்டு.

மிளகு, சீரகம் (ஊற வைத்து அரைக்கையில் சேர்க்கவும்) வகைக்கு ஒரு டீஸ்பூன்.

கொத்துமல்லி, கருகப்பிலை

சமையல் எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்

அரிசி, பருப்பு வகைகளை நன்கு களைந்து கொண்டு சுமார் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் அரிசி, பருப்பு வகைகளைப் போட்டுப் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம், தேங்காய்த் துருவல் போட்டுக் கொஞ்சம் அரைக்கவும்.  ஒன்றிரண்டாக அரைபட்டதும் தக்காளியைத் தோல் நீக்கிச் சேர்க்கவும்.  தோல் நீக்க வெந்நீரில் ஊற வைக்கவும். தக்காளியைப் போட்டு நீர் விடாமல் நன்கு அரைக்கவும்.  நல்ல நைசாகவே அரைக்கலாம்.  அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.

பின்னர் அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு மாவு ரொம்பக் கெட்டியாக இருந்தால் தேவையான நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.  தோசையாக ஊற்றவும்.  எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.  இருபக்கமும் நன்கு வெந்ததும். சூடாக இருக்கையிலேயே சாம்பார் அல்லது தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியுடன் பரிமாறவும்

Friday, December 6, 2013

தவலை அடை சாப்பிட வாங்க!

தவலை அடைக்குத் தேவையான சாமான்கள்:

(பச்சரிசியாகவே இருக்கட்டும்.)அரிசி  இரண்டு கிண்ணம்

து.பருப்பு  ஒரு கிண்ணம்

க.பருப்பு  அரைக்கிண்ணம்

உ.பருப்பு அரைக்கிண்ணம்

மிளகு, சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்(தேவையானால்)

இவற்றைக் களைந்து காய வைத்து மெஷினில் கொடுத்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகம் போட்டாலும் போடலாம். போடலைனாலும் பரவாயில்லை.  ஊறவைத்துக் களைந்து நீரை வடிகட்டி மிக்சியில் கூட உடைத்துக் கொள்ளலாம்.  மொத்தம் மூன்று கிண்ணம் வரும். கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். அவரவர் அளக்கும் முறை மாறுபடும்.

தாளிக்க

எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன்

கடுகு,  ஒரு டீஸ்பூன்,

உ.பருப்பு ஒரு டீஸ்பூன்

க.பருப்பு ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

பச்சை மிளகாய்  மிளகு போட்டிருப்பதால் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கட்டும் என்றால் மூன்று அல்லது நான்குக்குள் போதுமானது.

இஞ்சி ஒரு துண்டு(தேவையானால்)

கருகப்பிலை, கொத்துமல்லி

தேங்காய் ஒரு மூடி. கீறிப் பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

வேகவிடத் தேவையான நீர்

உப்பு தேவைக்கு


இப்போது இதைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும்.  அதற்கு எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.

வாணலி அல்லது உருளி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடேற்றி  ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். தாளிக்கும் பொருட்களைக் கொடுத்திருக்கும் வரிசைப்படி போட்டுத் தாளிக்கவும்.  கருகப்பிலையைத் தாளிதத்தில் போட்டுவிட்டு, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.  பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

தாளித்ததும் தேவையான நீரை விட்டு உப்பைப் போட்டுக் கொதிக்கவிடவும்.  ரவை போல் உடைத்த மாவைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும்.  தேங்காய்க் கீற்றுகளையும் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரவேண்டும்.  அதே சமயம் குழையவும் கூடாது.  வெந்ததும் கீழே இறக்கிக் கொத்துமல்லியைச் சேர்த்துக் கிளறவும்.  உப்புமா பதத்துக்கு இருத்தல் நலம்.

அடுப்பில் வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியைப் போட்டு சின்னக் கிண்ணம் எண்ணெயில் பாதி அளவுக்கு அதில் விட்டுக் காய வைக்கவும். கிளறிய மாவை ஒரு ஆரஞ்சு அளவுக்கு எடுத்து உருட்டி.  வாழை இலையில் வைக்கவும்.  வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.  அதை அப்படியே காயும் எண்ணெயில் நிதானமாகப் போடவும்.  வாழை இலையை அப்படியே உருளியில் மாவோடு வைத்தும் தட்டலாம். சூடு பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.   ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு ஒரு தட்டால் மூடவும்.  ஒரு ஈடுக்கு நான்கு அல்லது ஐந்து தவலை அடைகளைப் போடலாம். தட்டால் மூடி இருபக்கமும் பொன் முறுவலாக வந்ததும் வெளியே எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

நல்லா இருக்கும்.  கொஞ்சம் செலவும் ஜாஸ்தி; வேலையும் ஜாஸ்தி இதிலே!

இதையே நீர் விட்டு அரைத்தும் செய்யலாம். அது பின்னர்!





Thursday, December 5, 2013

தவலை (ஹிஹிஹி, தவளை இல்லை) தவலை! அடைனா என்னனு தெரியுமா??



அடை குறித்த இந்தக் கவிதையைத் திரு சிவசிவா என்னும் நண்பர் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்.  அதைப் பார்த்ததும் நமது பார்வதி வெண்கலப்பானை அடையை விட்டுட்டீங்களேனு கேட்டிருந்தாங்க.  உண்மையில் அதைத் தவலை அடைனு சொல்லுவாங்க.  வெண்கலப்பானையில் இல்லாமல், உருளியிலும் செய்யலாம். கொஞ்சம் சிரமப்படணுமோனு நினைச்சால் ஆமாம் :))) சிரமப்பட்டே ஆகணும் தான்.   என்றாலும் அந்தக் கால கட்டங்களில் பாரம்பரியமாக இருந்த இந்த உணவு நாளாவட்டத்தில் மறைந்து வருகிறது.  ஆகவே ஒரு நினைவூட்டலாகவும் இந்தப் பதிவு அமையட்டும்.   இனி பதிவுக்குப் போவோமா?


Sunday, December 1, 2013

சேம்பு இலைக்கறி வேணுமா?

மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.



தேவையான பொருட்கள்:

சேம்பு இலை( வீட்டிலேயே தொட்டிகளில் வளர்க்கலாம்.  இல்லைனாலும் காய்கறி மார்க்கெட்டில் சொல்லி வைத்து வாங்கலாம். கீரை விற்பவர்களிடம் சொன்னால் எளிதில் கிடைக்கும்.)  நல்ல பெரிதாக நான்கு அல்லது ஐந்து.

இதற்கு உள்ளே அடைக்க சிலர் கடலைமாவைப் புளி ஜலத்தில் விழுது போல் கரைத்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அதைத் தடவி விட்டு அப்படியே வேக வைக்கின்றனர். ஆனால் எங்க வீட்டில் அப்படிச் செய்தது இல்லை.

து.பருப்பு, சின்னக் கிண்ணம் ஒன்று

க.பருப்பு அதே அளவு,

பாசிப்பருப்பு அந்த அளவில் பாதி

மிளகாய் வற்றல் (கொஞ்சம் கூடவே வைச்சுக்கணும்.) 15

உப்பு தேவைக்கு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி  நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க சமையல் எண்ணெய்

கடுகு, உ.பருப்பு.

சேம்பு இலைகளை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு மஞ்சள் தூள் & உப்புக் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பருப்பு வகைகளை நன்கு கழுவி ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊறியதும் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  அரைத்த விழுதில் கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

இப்போது சேம்பு இலைகளை  வெளியே எடுத்துக் கொண்டு அவற்றில் அரைத்த விழுதை ஒரு பக்கமாகத் தடவவும்.  அரை அங்குலம் கனத்துக்குத் தடவலாம்.  தடவாத மறு பாதியை அப்படியே தடவி இருக்கும் பக்கம் பாதியாக மடிக்கவும்.  இப்படியே எல்லா இலைகளிலும் அரைத்த விழுதைத் தடவி இலையை மடித்துக் கொள்ளவும்.  இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.

வேக வைத்ததை வெளியே எடுத்து ஒரு கத்தியால் சின்னத் துண்டங்களாகப் போடவும்.  இரும்பு வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உ.பருப்புப் போட்டு நறுக்கிய துண்டங்களை மொறுமொறுப்பாக வறுத்து/ பொரித்து எடுக்கவும். 

இதை மாலை தேநீரோடும் சாப்பிடலாம்.  சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ளும்படியும் வைத்துக் கொள்ளலாம்.  இங்கே சேம்பு இலையே கிடைக்க மாட்டேன் என்கிறது.  திருச்சி போகணுமோ என்னமோ! :)