எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, April 30, 2014

மாங்கொட்டைக் குழம்பு!

நான்கு பேர்களுக்கு மாங்கொட்டைக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்

மாங்கொட்டையை  எடுத்துக் கொண்டு கடினமான தோலைத் தட்டி உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.  அநேகமாய் அது நான்கு பேருக்கான குழம்புக்குப் போதும்.  சின்னதாக இருப்பதாய்த் தோன்றினால் இன்னொரு கொட்டையை உடைத்து உள்பருப்பையும் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் குழம்பிற்குச் சிலர் மாங்காய்த் தளிரையும் போடுவார்கள்.  தளிரை மாங்காய் வற்றல் என்றும் சொல்வார்கள்  மாங்காய்க் காலத்தில் தோலோடு மாங்காயை நீளமாக அரை அங்குல கனத்தில் வெட்டி எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஊற வைத்துப் பின்னர் வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே மாங்காய் வற்றல்.  இந்த மாங்காய் வற்றல் இல்லாமலும் மாங்கொட்டைக் குழம்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு    இரண்டு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் ஆறு

உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

ஜீரகம்(தேவைப்பட்டால்) அரை டீஸ்பூன்

தனியா இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

புளி ஒரு எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கரைக்கவும்)

தாளிக்க மற்றும்  குழம்பு  கொதிக்கவிடத் தேவையான எண்ணெய் நல்லெண்ணாயாக இருத்தல் நலம்.  அது இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

மாங்கொட்டைப் பருப்பு

மாங்காய் வற்றல்(தேவையானால்)  ஊற வைத்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

முதலில் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு  மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, ஜீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.  பெருங்காயம், கருகப்பிலையையும் வறுத்துக் கொள்ளவும்.  இத்துடன் மாங்கொட்டைப் பருப்பையும் உப்பு, புளி இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.  அல்லது புளி ஜலத்தைக் கரைத்து வைத்துக் கொண்டு, உப்புச் சேர்த்து மேற்சொன்ன சாமான்களை வறுத்து, மாங்கொட்டையை வறுக்காமல் சேர்த்து அரைத்துப் புளிக்கரைசலில் கரைத்துக் கொள்ளலாம்.

கல்சட்டி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கடுகு போடவும். அரைத்துக் கரைத்த விழுது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் ஊற்றிக் கொண்டு தாளிதம் செய்தவற்றில் கொட்டிக் கலக்கவும்.  மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுப்பை மெதுவாக எரிய விட்டு நிதானமாய்க் கொதிக்க விட வேண்டும்.  கொதிக்க ஆரம்பித்ததும் ஏற்கெனவே வேக வைத்த மாங்காய் வற்றலைச் சேர்க்கலாம். பின்னர் குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வருகையில் அடுப்பை அணைக்கவும்.  குழம்பை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்தது பதினைந்து நாட்கள் பயன்படுத்தலாம்.


மின் தமிழ்க் குழுமத்தில் ஷைலஜா மாங்கொட்டைக் குழம்பு செய்முறை கேட்டிருந்தார்.  அதை இங்கேயும் பர்கிறேன். 

Friday, April 4, 2014

வடாம் திருடர்கள் ஜாக்கிரதை! :(

எங்க குடியிருப்பில் அநேகமாக எல்லாருமே நான் வடாம் போடுவதைப் பார்த்துட்டு இந்தவருஷம் போட்டாங்க.  முந்தாநாள் அரிசிமாவில் வெங்காயக் கறிவடாம் போட்டேன்.  முந்தாநாள் வைச்சதில் ரங்க்ஸ் ரொம்பவே உருண்டையாக உருட்டி விட அதெல்லாம் உள்ளே காயவில்லை.  அதனால் நேத்திக்கு எல்லாத்தையும் ஒரு பெரிய தட்டில் மாற்றிக் காய வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ வடாம் இருக்கும். யாரோ வந்து அத்தனை வடாமையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க.  வெறும் காலித் தட்டு மட்டும் நாங்க வைச்ச இடத்திலேயே இருந்தது.  ரொம்பப் பெரிய தட்டு என்பதால் அதை எடுத்துட்டுப் போனாத் தெரிஞ்சுடும்னு எடுத்துட்டுப் போகலை போல!  இன்னொருத்தர் போட்டிருந்த வடாம்களில் கொஞ்சத்தை மட்டும் வைச்சுட்டு, (ருசி பிடிக்கலையோ?) மிச்சம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. என்னத்தைச் சொல்றதுனு ஒண்ணும் புரியலை! போன வருஷம் அமெரிக்காவுக்கு அனுப்ப, மாமியாருக்குனு கொடுக்கிறதுக்காகனு நிறையவே போட்டேன். அப்போல்லாம் ஒண்ணுமே நடக்கலை.  இந்த வருஷம் இப்போத் தான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே திருட்டு! :((((

Wednesday, April 2, 2014

வெங்காயக் கறிவடாம் படங்களும் சில முக்கியக்குறிப்புகளும்!


படம் அன்னிக்கே எடுத்துட்டாலும் இன்னிக்குத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது.  அதான் தனிப்பதிவாப் போட்டுட்டேன். :))))

முதல்நாளே ஊற வைச்ச சிவப்புக்காராமணி மேலே. காராமணி பிடிக்காது து.பருப்புனு சொன்னால் அதைக் காலம்பரவே ஊற வைச்சுக்கலாம்.




ஊற வைச்ச உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு




அரைத்த மாவு.




வெங்காயம் நறுக்கியது.  இத்துடன் கருகப்பிலை, கொத்துமல்லியும் சேர்த்துக் கலக்கணும்.




இப்படி உருட்டி வைக்கணும்.  ரொம்பவே மொழு மொழுனு உருட்டிட்டா உள்ளே சரியாக் காயாது.  ஆகவே கொஞ்சம் அப்படியே பக்கோடாவுக்குப் போடறாப்போல் உருட்டிப் போடணும்.  அப்போத் தான் நல்லாக் காயும்.


சில டிப்ஸ் கொடுக்கணும்.  இதோ வரேன்.  ஹிஹிஹி, அவசர வேலை ஒண்ணை முடிச்சுட்டு வந்தேன்.


குக்கர் வைக்கிறது இப்போ 99% பழக்கம் என்றாலும் இன்னமும் சிலர் அதில் சில முக்கியத் தவறுகளைச் செய்கின்றனர்.  பார்க்க எதுவுமே இல்லை என்பது போல் தெரிந்தாலும் அது தான் மிக முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் என் உறவினர் குக்கர் வைத்ததும் உடனேயே அதில் வெயிட் எனப்படும் குண்டைப் போட்டு விட்டார்.  அம்மாதிரிப் போடுவது மிகத் தவறு.  குக்கர் நாமே தேய்த்தால் கூட அதிலிருந்து ஆவி வரும்வரை வெயிட் போடாமல் இருப்பது தான் நல்லது.  ஒரு வேளை தேய்க்கையில் ஏதேனும் சாதப்பருக்கையோ, பருப்புத் துணுக்கோ, காய்கள் வைப்பவர்களானால் காய்த்துணுக்கோ மிக நுண்ணிய அளவில் கூட அந்த ஆவி வெளிவரும் துவாரத்தில் இருப்பது உண்டு.  நன்றாக நீர் விட்டுக் கழுவவேண்டும்.  அப்படியும் பல சமயங்களில் அடைபடும்.  குண்டை உடனே போட்டுவிட்டால் அந்தத் துவாரத்தின் வழியே வெளிவர வேண்டிய அதிக அழுத்தம் நிறைந்த ஆவி உள்ளேயே தங்கிக் குக்கர் வெடிக்கும் அபாயம் உண்டு. துவாரத்தின் வழியாக ஆவி வெளி வர நேரம் கொடுத்தால் அந்த ஆவி பட்டு அதிலுள்ள நீரானது உள்ளே இருக்கும் துணுக்குகளை ஆவியோடு சேர்த்து வெளிக்கொண்டுவரும்.  இது தான் ஆபத்து இல்லாத முறை.

இன்னொன்றும் குக்கர் குறித்தே.  ஆவி வெளியே வந்து குக்கருக்கு வெயிட் போட்டு விசில் வரும்போது வெயிட் தூக்கிக் கொள்ள வேண்டும்.  தூக்கிக் கொண்டு நீண்ட சப்தமாக வரவேண்டும்.  விட்டு விட்டு வரக் கூடாது.  ஆவி வரும் துவாரத்தில் அடைப்பு இருந்தால் தான் விட்டு விட்டு வரும்.  ஆனால் பெரும்பாலும் விட்டு விட்டு வருவது தான் நல்லது என நினைக்கின்றனர்.  உள்ளே இருக்கும் அதிக அழுத்தம் நீண்ட சப்தத்தோடு வெளியேற வேண்டும்.  இந்த அழுத்தம் உள்ளேயே தங்குவது ஆபத்து.  அம்மாதிரி நீண்ட சப்தம் வந்தால் அது ஏதோ தப்பு என்பது போல் வெயிட்டின் தலையில் ஒரு கரண்டியை அல்லது இடுக்கியைப் பிடித்துக் குக்கரோடு சேர்த்து அமுக்கிக் கொண்டு நிற்கின்றனர்.  அழுத்தம் தாங்காமல் வெயிட் தூக்கிக் கொண்டு குக்கரின் உள்ளே உள்ள உணவுப் பொருள் எல்லாமும் வெளியேறி மூடியே தூக்கிக் கொண்டு திறக்கும் அபாயம் இதில் உண்டு.  சொன்னாலும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.

அடுத்தது குக்கரின் சேஃப்டி வால்வ்.  முன்னெல்லாம் இதைச் சுற்றி ஈயப் பற்று வைத்திருந்தது.  அப்புறம் அதிக அழுத்தம், சூட்டில் அடிக்கடி ஈயம் உருகுவதால் முழுக்க முழுக்க ரப்பரினால் ஆன சேஃப்டி வால்வ் வந்தது.  அது கொஞ்சமாவது சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே உள்ள அதிகப்படி நீராவி அதன் மூலம் வெளியேற வேண்டும்.  அதை ஈயம் போட்டு முழுக்க முழுக்க அடைக்கின்றனர்.  இதுவும் மிகப் பெரிய ஆபத்து. குக்கர் வாங்கினதும், அவர்கள் கொடுக்கும் கையேடுகளைக் கவனமாகப் படித்துவிட வேண்டும். அப்போது தான் நாம் செய்வதில் என்னென்ன தவறு என்பது புரியவரும்.