எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, March 22, 2016

உணவே மருந்து-- வாழை-- தொடர்ச்சி

வாழைப் பழமாக உண்டால் உணவு உண்ணுவதற்கு முன் உண்ணலாம். ஆனால் இப்போதைய ஆங்கில மருத்துவர்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்ணக் கூடாது என்கின்றனர். வாழைப்பழத்தில் சர்க்கரைச் சத்து  36.4 சதவீதம் உள்ளது.  கொழுப்புக் குறைவாக 0.2 சதவீதம் இருக்கிறது. புரதம் 1.3 சதவீதமும் சுண்ணாம்புச் சத்து 0.01 சதவீதமும் உள்ளது.
Image result for வாழைப் பழம்

படத்துக்கு நன்றி தமிழ் த இந்து கூகிளார் வாயிலாக

வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு நல்லது. பூவன் வாழைப்பழத்தைப் பொடியாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி வைத்துக் கொண்டு இரவு படுக்கும்போது தினம் நாலைந்து துண்டங்கள் சாப்பிட்டு வந்தால் காலை மலம் எளிதாகக் கழியும். பேயன் வாழை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் வல்லமை கொண்டது. ரஸ்தாளி வாழைப்பழம் மாரடைப்புக்கு நல்லது.  மஞ்சள் வாழை குடல் புண்ணை ஆற்றும். குழந்தைப் பேறு கிடைக்காத தம்பதிகள் தினமும் செவ்வாழைப் பழத்தை இரவு படுக்கும்போது பாலுடன் சேர்த்து உண்ணப் பிரச்னை தீரும்.உயிரணுக்களைப் பெருக்கும் வல்லமை உள்ளது செவ்வாழை! நேந்திரம் வாழையைத் தொடர்ந்து சாப்பிட்டால் தோல் மினுமினுக்கும். மொந்தன் வாழை உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். மலைவாழைப்பழம் மலச்சிக்கலைப்போக்கும். உலகில் உள்ள 600 வகை வாழைகளில் குறைந்தது எழுபது அல்லது எண்பது வகை இந்தியாவில் கிடைக்கின்றன. தினமும் ஏதேனும் இரு வகை வாழைப்பழங்களைத் தொடர்ந்து உண்ணலாம்.
Image result for வாழைப் பூ

படத்துக்கு நன்றி நக்கீரன்,கூகிளார் வாயிலாக!

வாழைப் பழத்தைப் போலவே பூவிலும் சத்து நிறைய இருக்கிறது. மாதவிலக்குக் காலங்களில் அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது மாதவிலக்கு நிற்கும் வயதுள்ள பெண்களின் அதீதமான ரத்தப்போக்கோ எதுவாக இருந்தாலும் வாழைப்பூவை இடித்துச் சாறு எடுத்துத் தொடர்ந்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இயலாத பெண்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். உடல் வெப்பம் நீங்கி, காச நோய், வெட்டை நோய், மூல நோய், கைகால்கள் எரிச்சல், மூலம், நீரிழிவு, வயிற்றுக் கடுப்பு, போன்றவைகள் நீங்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

Image result for வாழைக்காய்

படத்துக்கு நன்றி வெப் துனியா கூகிளார் வாயிலாக

வாழையின் பிஞ்சைக் கச்சல் என்பார்கள். அந்தக் கச்சல் வாழைக்காயைச் சமைத்து உண்டால் வயிற்றுப் புண், நீரிழிவு, மூலக்கடுப்பு போன்றவற்றிற்கு நல்லது. வாழைக்காயும் மேற்கண்டவற்றிற்கு நல்ல பலன் தரும். குடல் புண்ணிற்கு நல்லது என்றாலும் பலரும் வாயுத் தொந்திரவு என வாழைக்காயைச் சாப்பிட மாட்டார்கள். அவர்கள் வாழைக்காயைச் சாப்பிடாமல் கச்சல் வாழைக்காயைச் சாப்பிடலாம். அல்லது முற்றிய வாழைக்காயை வேக வைத்துப் பொடிமாஸாக உண்ணலாம்.


Image result for வாழைத் தண்டு

படத்துக்கு நன்றி தினகரன் கூகிளார் வாயிலாக
வாழைத் தண்டை ஒரு நாள் விட்டு ஒரு நாளிலோ அல்லது வாரம் இரு முறையோ சேர்த்து வந்தால் சிறுநீரகக் கற்கள் தோன்றது. கற்களைக் கரைக்கும் வலிமை உள்ளது வாழைத் தண்டின் சாறு. இதைப் பொடியாக நறுக்கி நாரை எடுத்துவிட்டுச் சாறாக எடுத்துக் குடித்து வரலாம். நீர் அடைப்பு இருந்தாலும் வாழைத்தண்டின் மூலம் நீங்கும். உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை நீக்கும்.

வாழைக்காய்ப் பொடிமாஸ் செய்யும் முறை. நல்ல முற்றிய வாழைக்காயைச் சூடான வெந்நீரில் போட்டு ஐந்து நிமிஷம் போல் கொதிக்க விடவும். வாழைக்காயின் பச்சை நிறத் தோல் நிறம் மாறும் வரை இருந்தால் போதும். எல்லாப் பக்கங்களும் திருப்பி விட்டு இப்படி வேக விட்டு எடுத்ததும் ஆறவிட்டுத் தோலை உரித்தால் நன்கு உரிக்க வரும். பின்னர் காரட் துருவலில் வாழைக்காயையும் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து (தே.எண்ணெய் நல்லது. பிடிக்காதவர்கள் ஏதேனும் சமையல் எண்ணெய்) கடுகு, உ,பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளித்துக் கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்க்கவும். அதில் துருவிய வாழைக்காயைப்  போட்டு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கவும். இப்போது பொடிமாஸில் எலுமிச்சம்பழம் அரை மூடி பிழியவும்.  இதற்கு அளவெல்லாம் போடவில்லை. வாழைக்காய் பெரிதாக இருந்தால் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 2 வாழைக்காயே போதும். வாழைக்காய் நடுத்தரமாக இருந்தால் மூன்று தேவைப்படும். மற்றவை அவரவர் விருப்பம் போல் போட்டுக் கொள்ளலாம்.

பிசைந்து சாப்பிடும் வாழைக்காய்ப் பொடி! தொட்டுக்கவும் செய்யலாம்.

நன்கு முற்றிய வாழைக்காய் இரண்டு

மி.வத்தல் நான்கு(காரம் வேண்டுமெனில் ஒன்றிரண்டு கூடச் சேர்க்கலாம்)

உப்பு, பெருங்காயம்

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

இதற்கு வாழைக்காயைச் சுட்டால் நன்றாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யார் வீட்டிலும் கரி கிடையாது. ஆகவே க்ரில் இருப்பவர்கள் அதில் சுடலாம். இல்லாதவர்கள் சென்ற பொடிமாஸ் முறையில் சொன்னது போல் வாழைக்காயைத் தோல் நிறம் மாறும் வரை வேக வைக்கவும். தோலை உரித்துத் துருவிக்கொள்ளவும்.

நல்லெண்ணெயில் முதலில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொண்டு மிளகாய் வற்றலை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். கடுகு, உபருப்பு, கபருப்பு ஆகியவற்றையும் எண்ணெயில் போட்டுத் தாளிதம் செய்வது போல் வறுத்து எடுக்கவும். முன்னெல்லாம் இந்த மிவத்தல், கடுகு தாளிதத்தோடு உப்புச் சேர்த்து அம்மியில் வைத்து ஓட்டிக் கொண்டு பின்னர் சுட்ட வாழைக்காயைத் தோலுரித்துச் சேர்த்து அந்தக் காரத்தோடு வாழைக்காயையும் சேர்த்து நன்கு ஓட்டிப் பிரட்டி எடுப்பார்கள். இப்போதெல்லாம் சுட்ட வாழைக்காய் ஏது? அம்மியும் ஏது? சென்னை, அம்பத்தூரில் இருந்தவரை கரி அடுப்பும் இருந்தது. அம்மியும் இருந்தது. இங்கெல்லாம் அது இல்லை என்பதால் தாளிதத்தை மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாகப் பொடித்துக் கொண்டு ஒருவாணலில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கடுகு (மறுபடி) மட்டும் போட்டுக் கொண்டு வாழைக்காய்த் துருவலையும் உப்பு மற்றும் பொடி செய்த காரப்பொடியைப் போட்டுச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். விடாமல் இரண்டு நிமிஷமாவது கிளறணும். பின்னர்  சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பச்சடி ஏதேனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

தொடரும்!

Friday, March 18, 2016

உணவே மருந்து!--வாழை!

Image result for வாழை

நன்றி விக்கிபீடியா!

அடுத்து நாம் பார்க்கப் போவது நாம் அனைவரும் நன்கு அறிந்த சமையலில் அதிகம் பயன்படுத்தும் வாழை! வாழையடி வாழையாக என்று வாழ்த்துவது உண்டு. ஏனெனில் வாழை தார் போட்டதும் பெரிய மரத்தை வெட்டினாலும் அதற்குள்ளாகப் பக்கத்தில் கன்றுகள் வந்திருக்கும். பெரிய மரத்தையும் தோண்டி வேறோர் இடத்தில் நட்டால் மீண்டும் வரும். சந்ததி தொடர்ந்து வரும் என்பதற்காக வாழையடி வாழையாக என வாழ்த்துவது வழக்கம். திருமணம் போன்ற முக்கிய விசேஷங்களில் வாழைக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணங்களில் குலை தள்ளி இருக்கும் வாழை மரத்தைப் பந்தலில் அலங்காரத்துக்காகக் கட்டுவார்கள். வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்குடன் வைத்துக் கொடுக்கப்படும். தாம்பூலம் மாற்றும்போதும் வாழைப்பழம் முக்கியப் பங்கு வகிக்கும்.  இப்படி வாழையின் பயன்பாடுகள் அதிகம்.

வாழை மரத்திலிருந்து இலையும் நமக்குக் கிடைக்கும். பூவும் காயும் கிடைக்கும். அந்தக் காய்கள் பழுத்தால் வாழைப்பழம் கிடைக்கும். குலை தள்ளிய மரத்தை வெட்டினால் தண்டு உணவாகப் பயன்படும். வாழைத்தண்டு சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாழைப்பட்டைகளைச் சேர்த்துத் தைத்து உணவு உண்ணப் பயன்படுத்துவது உண்டு. வாழை நாரில் பூக்கட்டலாம். நார் மற்றச் சிலப் பயன்பாட்டிலும் தேவைப்படுவது உண்டு.  தீப்புண் பட்டவர்களையும், பாம்பு கடித்தவர்களையும் முறையே வாழை இலை, வாழைப்பட்டையில் படுக்க வைப்பது உண்டு.  வாழை மரத்தைத் தோண்டி எடுத்ததும் அடியில் கிடைக்கும் கிழங்கும் பயன்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் நமக்கு அதிகப் பலன்களைக் கொடுக்கும் ஒரு மரம் வாழை மரம்.

வாழை இந்தியா முழுவதும் வளர்க்கப்படுகிறது. தனியார் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயிராக்கப்படுகிறது. வாழையில் பலவகை உண்டு. சிறுமலைப்பழம் என்னும் வாழைப்பழம் திண்டுக்கல், கொடைக்கானல் மலைப்பக்கம் இருக்கும் சிறுமலை என்னும் மலை ஊரில் பயிராகும். இதன் பழம் சிறியதாக இருந்தாலும் அதிகச் சுவையோடு இருக்கும். இவற்றிலேயே பெரிய பழம் இருந்தாலும் அது சிறுமலைப்பழத்தைப் போல் சுவையோடு இருக்காது. இதைத் தவிர பூவன், மொந்தன், பேயன், ரஸ்தாளி, செவ்வாழை, நாட்டு வாழை, நவரை வாழை, கொட்டை வாழை, பசும் வாழை, நேந்திரம் வாழை, கற்பூர வாழை, வெள் வாழைபோன்றவைகள் உண்டு. வட மாநிலங்களில் அதிகம் கிடைக்கும் புள்ளி கேலா எனப்படும் மஞ்சள் வாழைப்பழமும், பச்சைநாடான் பழம் எனப்படும் வாழைப்பழமும், பச்சை வாழைப்பழமும் கூட உடலுக்கு நன்மை தரும். 

Saturday, March 12, 2016

உணவே மருந்து!--தக்காளி--தொடர்ச்சி!

தக்காளியின் மருத்துவ குணங்களைப் பார்க்கும் முன்னர் அதை முன்னாட்களில் ஏதோ விஷக் கனி என்று எண்ணி சமையலில் சேர்க்கவே மாட்டார்களாம். என் மாமியார் வீட்டில் தோட்டத்தில் நிறையத் தக்காளி காய்த்தும் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் தூக்கி எறிவார்களாம். நான் புக்ககம் வந்த புதிதில் தக்காளித் துவையல், தக்காளி ஊத்தப்பம், தக்காளி போட்டு தால் எனச் செய்தால் அவங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். தக்காளி சாதம் பண்ணினால் புளிக்கும் என்று சொல்லி சாப்பிட மறுப்பார்கள். பின்னாட்களில் போகப் போகச் சரியானது. தக்காளியும் சாப்பிடும் பண்டம் தான் என்பது புரிந்தது.

தக்காளியில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைடமின் ஏ எல்லாமும் இருக்கிறது. தக்காளி ஒன்றை எடுத்து நன்கு கழுவி அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து அதில் நீர் கலந்து வடிகட்டினால் விதைகள் தனியாகப் பிரியும். அந்த விதைகளை எடுத்துக் காய வைத்துக் கொண்டால், தக்காளிச் செடி போடும்போது பயனாகும். விதைகளைப் போட்டுத் தக்காளிக் கன்றுகள் சுமார் ஓர் அடிக்குள் உயரம் இருக்கையிலேயே அதைப் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும். விரைவில் பலனளிக்கும் காய்களில் இதுவும் ஒன்று. சிறு நீர் எரிச்சலைப் போக்கும். கண்கள் ஒளியுடன் திகழவும் தக்காளியைப் பயன்படுத்தலாம். ரத்தத்தைச் சுத்தமாக்கி, எலும்புகளைப் பலமாக்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தக்காளிச் சாறைக் குடிக்கலாம்.  ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் தோல் மென்மையாகவும் , பளபளப்பாகவும் இருக்கும். களைப்பைப் போக்கி மலச்சிக்கலை நீக்கும். பற்களுக்கும் நன்மை தரும். குடல் புண்கள் ஆறும். உடலின் எடை குறையவும் தக்காளியைச் சாப்பிடலாம். கண்பார்வைக் குறைவைக் கூடத் தக்காளியை உண்பதால் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். பொதுவாகத் தக்காளியை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவென்று சொன்னாலும் சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ணும்போது விதைகளைச் சுத்தமாக அகற்றிவிட்டு உண்பது நல்லது.

பெங்களூர்த் தக்காளி என்னும் தக்காளியில் விதைகள் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இருக்கும் விதைகளையும் நீக்கிவிட்டு உண்பதே நல்லது. பெங்களூர்த் தக்காளி என்பது நாட்டுத் தக்காளியும்+உருளைக்கிழங்கும் சேர்ந்த ஒன்று என்று சிலர் சொல்கின்றனர். எப்படியாயினும் மரபணு மாற்றப்பட்ட தக்காளியை மட்டுமின்றி எந்தக் காய்களையும் உண்ணாமல் இருப்பதே நல்லது. தக்காளித் தொக்கு, தக்காளி ஜாம் போன்ற பல உணவு வகைகளைத் தக்காளியை வைத்துச் செய்யலாம். அவற்றில் ஒன்று தக்காளி சாஸ் அல்லது கெட்சப் என்பது ஆகும்.

இதற்குக் குறைந்தது இரண்டு கிலோ தக்காளியாவது தேவை. வெங்காயம் அரைகிலோ, பூண்டு கால் கிலோ தேவைப் படும்.

மிளகாய்த் தூள் குறைந்தது நூறு கிராம், சர்க்கரை அதே அளவு. மசாலாப் பொருட்கள் அனைத்தும் சிறியதாக ஒன்றிரண்டாக உடைத்து அதை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவேண்டும். தேவையான உப்பு!

தக்காளியைக் கொதிக்கும் வெந்நீரில் ஊற வைத்துப் பின் தோலுரித்து நன்கு மிக்சியில் அரைத்துச் சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் மிக்சியில் வெங்காயத்தையும் , பூண்டையும் தனித்தனியே அரைத்துச் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று சாறையும் ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தேவையான உப்பு, மிளகாய்த் தூள், சர்க்கரை சேர்க்க வேண்டும். மசாலாப் பொருட்களைக் கட்டி வைத்த துணியை அதில் உள்ளே போட வேண்டும். ஒரு சிலர் மசாலாப் பொருட்களையும் அரைத்துச் சாறாக்கி இதில் சேர்ப்பார்கள். இவை நன்கு கொதித்துக் கெட்டிப்படும்வரை அடுப்பி வைத்துப் பின்னர் கீழே இறக்கி ஆற வைத்துக் காற்றுப் புகாத கண்ணாடி பாட்டில்களில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம்.


தக்காளி ஜாம் செய்யவும் மேலே சொன்னமாதிரிச் சாறை எடுத்துக் கொண்டு கொஞ்சம் உப்புச் சேர்த்துப் பின்னர் சர்க்கரையும் தேவையான அளவுக்கு ஊற்றிக் கொதிக்கவைத்துப் பின்னர் ஏலக்காய் அல்லது ஏலக்காய் சிரப் (Food Flavour) சேர்த்துப் பின்னர் கெட்டிப் பட்டதும். ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.

Image result for தக்காளி ஜாம்

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தமிழ்க்கடல் தளம்.

Friday, March 4, 2016

உணவே மருந்து--- தக்காளி!

தக்காளி ரசம்:---

இதிலே புளியே இல்லை. வெறும் தக்காளி மட்டும். கடைசியில் எலுமிச்சை பிழிஞ்சுக்கலாம். அதனால் இதை எலுமிச்சை ரசம்னும் சொல்லிக்கலாம். நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:--

நல்ல பழுத்த நடுத்தர அளவில் தக்காளி மூன்று. இதைக் கொதிக்கும் வெந்நீரில் ஊறப் போட்டுத்தோலை உரித்துக் கொண்டு மிக்சியில் ஜூஸாக எடுத்துக்கவும்.

வெந்நீரில் ஊறப் போட்டுத் தோலை உரிப்பதை blanching என்பார்கள். தக்காளி சாதம் செய்கையிலும் தோலை இப்படி உரிச்சுக்கலாம்.

தக்காளி ஜூஸ் ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய் இரண்டு

கருகப்பிலை, கொத்துமல்லிப் பொடியாக நறுக்கியது ஒரு டீஸ்பூன்

ரசப்பொடி ஒரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு அல்லது கால் டீஸ்பூன் பவுடர்

துவரம்பருப்புக் குழைய வேகவைத்து நீர் விட்டுக் கரைத்தது ஒரு கிண்ணம்

எலுமிச்சம்பழம் பாதி மூடி

தாளிக்க நெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

தக்காளி ஜூஸை ஈயக்கிண்ணத்தில்/வேறு ஏதேனும் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு உப்பு, ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பச்சை மிளகாய் நறுக்கிச் சேர்க்கவும். கருகப்பிலை கொத்துமல்லியை ரசம் கொதிக்கையில் சேர்த்தால் அதன் சத்து ரசத்தில் இறங்குவதோடு வாசனையும் தூக்கலாக இருக்கும். நன்கு கொதிக்க விடவும்.  நன்கு கொதித்ததும் துவரம்பருப்புக் கரைத்த நீர் விட்டு விளாவவும். விளாவியதும் அதிகம் கொதிக்க வேண்டாம். மேலே நுரை வரும்வரை கொதித்தால் போதும். பின்னர் கீழே இறக்கி ஒரு இரும்புக்கரண்டி அல்லது வாணலியில் நெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளிக்கவும். பொடித்து வைத்துள்ள மிளகு, ஜீரகப் பொடியைப் போட்டு கருகப்பிலை சேர்த்து ரசத்தில் ஊற்றவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

தக்காளியே இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. வெளிநாட்டைச் சேர்ந்தது. என்றாலும் நம் நாட்டில் தக்காளி விதைகளிலிருந்து விளைவிக்கப்பட்ட தக்காளியை நாம் நாட்டுத் தக்காளி என அழைப்போம். இது புளிப்புச் சுவையும், சாறும் அதிகம் கொண்டது. மாறாக பெங்களூர்த் தக்காளி என அழைக்கப்படும் தக்காளியில் சுவையும் இருக்காது. சாறும் இருக்காது. விதைகளும் இருக்காது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தத் தக்காளியை உண்பது அவ்வளவு நல்லதல்ல. பின்னர் சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ண முடியாதே என்று கேட்பவர்களுக்காக நாட்டுத் தக்காளியை இரண்டாக நறுக்கி விதைகளை மட்டும் தனியாக எடுத்துவிட்டுப் பயன்படுத்தலாம்.

எந்த ஒன்றில் விதைகள் குறைவாக இருக்கின்றதோ அவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அவற்றை மீண்டும் விளைவிக்கப் புதிதாகத் தான் விதைகளை மறுபடி வாங்கியாக வேண்டும். ஆகவே அவற்றை உண்ணாமல் இருப்பதே நல்லது. இந்த மரபணு மாற்றம் குறித்து விரைவில் விரிவாக எழுதுகிறேன். தக்காளி, கத்தரிக்காய் போன்றவை மரபணு மாற்றப் பயிர்களில் முக்கியத்துவம் பெற்றவை. பழங்களில் பப்பாளி, ஆப்பிள், மாதுளை, போன்றவை அதிகம் மரபணு மாற்றப்பட்டவை! 

Wednesday, March 2, 2016

உணவே மருந்து--தக்காளி!


Image result for தக்காளி

தக்காளி பலருக்குப் பிடித்தாலும் சிலருக்குப் பிடிக்காது. அந்த வகையில் நம்ம ரங்க்ஸுக்குத் தக்காளி அவ்வளவாப் பிடிக்காது! ஆனால் அதுக்காக ரசத்தில் போடாட்டியும் ரசம் பிடிக்காது. ஒரு நடுத்தரத் தக்காளியை நான்காக வெட்டி நான்கு நாட்கள் ரசத்துக்குப் பயன்படுத்துவேன். கொஞ்சம் அதிகம் ஆனாலும் புளிப்புனு சொல்லிடுவார். :)

மேலே உள்ளதைப் படிச்சதுமே புரிஞ்சிருக்குமே நான் நேர்மாறாக இருப்பேன் என! ஹிஹி! கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மா தக்காளியை வைத்து விதவிதமாக அங்கே இங்கே கேட்டு, சொந்தக் கற்பனையை வைத்துச் சமைப்பாங்க. அதிலே ஒன்று தான் தக்காளித் துவையல்! நான் பள்ளி மாணவியாக இருக்கும்போதிலிருந்தே அறிமுகம் ஆன இந்தத் தக்காளித் துவையலின் மேல் எனக்கிருக்கும் மோகம் இன்னமும் குறையவில்லை. தக்காளிப் பச்சடியும் செய்வாங்க. சாதமும் உண்டு. தக்காளி அல்வானு சர்க்கரை போட்டுக் கிளறித் தருவாங்க. இப்போக் கொஞ்ச நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கும் தக்காளி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு! ஏன்னா மருத்துவர் தக்காளி சேர்க்கக் கூடாதுனு சொல்லி இருக்கார்! :)

இந்தத் தக்காளியிலேயும் மருத்துவ குணம் இருக்கிறதாகவும் அதுவும் ஆஸ்த்மாவுக்குச் சிறந்த மருந்து என்றும் சன் தொலைக்காட்சியில் நாட்டு மருத்துவம் செய்யும் தாத்தா சொல்ல, அட! என்று அதிசயமாப் பார்த்தேன். அவர் சொன்னவற்றை முதலில் பார்ப்போமா?

ஒரு தக்காளியை எடுத்து நன்கு கூழாக அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட்டு ஒரு கால் டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் சுக்குத் தூள் சேர்த்துக் கொஞ்சம் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். சுண்ட ஆரம்பித்ததும் அதை எடுத்து வடிகட்டிவிட்டுச் சூடு ஆறுவதற்குள்ளாக வெறும் வயிற்றில் குடித்து வரவும். இது இருமல், சளி போன்றவற்றிற்கு நிவாரணி என்கிறார்.

அடுத்துத் தயிரில் தக்காளியைத் துண்டுகளாகப்போட்டு அப்படியே சாப்பிடணுமாம். அதிலேயும் எடை குறையுமாம். எடை குறைய மேலும் ஒரு தக்காளி சாப்பிடும் முறையில் தக்காளியை வட்டமாக வெட்டிக் கொண்டு ஒரு தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றித் தடவிக் கொண்டு தக்காளித் துண்டங்களை அதில் போட்டு சுவைக்கு மிளகுப் பொடியும், சிறிதளவு உப்பும் சேர்த்து இரு பக்கமும் வேகவிட்டு எடுத்துக் காலை உணவோடு சேர்த்துச் சாப்பிடணுமாம். காலை உணவு நாலு இட்லி எனில் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு இந்தத் தக்காளி ரோஸ்டை ஒரு தட்டுச் சாப்பிட்டால் போதும். உடல் இளைக்கும் என உறுதியாகச் சொல்கிறார். செய்து பார்க்கணும். இனி தக்காளியின் மற்றச் சமையல்கள் பத்திப் பார்ப்போம்.