எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 1, 2016

உணவே மருந்து! பாகற்காய் தொடர்ச்சி

பொதுவாக இப்போதெல்லாம் கொம்புப் பாகல் எனப்படும் நீளப் பாகற்காயே கிடைக்கிறது. பாகற்காயில் என்னதான் மருத்துவ குணம் இருந்தாலும் கொம்புப் பாகலை விட மிதி பாகல் எனப்படும் சின்னப் பாகலே அதிகம் பயன்படுத்துமாறு சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். பித்த, வாத சம்பந்தமான தோஷங்களை இது போக்கும் என்கிறார்கள். முறைப்படி சமைத்து உண்டால் கட்டாயம் பலன் தெரியும் என்கின்றனர்.  பாகல் இலைச்சாறு உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலுக்கு நல்ல தீர்வு என்றும் சொல்கின்றனர். பாகல் கொடியோடு கருவாப்பட்டை, திப்பிலி, அரிசி, நீரடிமுத்து எண்ணெய் என்னும் ஒரு வகை எண்ணெய் ஓர் அளவு எடுத்துக் கொண்டு எண்ணெயில் இவற்றை அரைத்துப் பூசி வர சொறிசிரங்குகள், புண்கள் குணமாகும்.

மிதி பாகல் இலைச்சாறோடு பழுத்த பாகல் பழங்களின் சாறையும் சேர்த்து தினம் காலை உள்ளுக்குச் சாப்பிட்டால் காமாலை, மண்ணீரல், கல்லீரல் நோய்கள் குணமாகும்.  நீரிழிவு நோய்க்குப் பாகற்காய்ச் சாறு நல்லதொரு மருந்தாகும். கொம்புப் பாகலுக்கு மருந்தை முறிக்கும் சக்தி உண்டு. முன்னெல்லாம் ஒருவரை வசியப்படுத்த இடுமருந்து என்னும் மருந்து வைக்கும் வழக்கம் இருந்ததாகவும், அந்த இடு மருந்து வைத்திருப்பதைப் பாகற்காய்ச் சாறின் மூலம் கண்டுபிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். யாருக்கு இடுமருந்து வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோமோ அவர்கள் உள்ளங்கையில் பாகல் இலையைச் சாறாகப் பிழியவேண்டும். சற்று நேரத்தில் சாறு கட்டிவிட்டால் இடு மருந்து வைத்திருக்கிறது என்றும், கட்டவில்லை என்றால் பாதிப்பு இல்லை என்றும் பொருள். கீல் வாயு நோயுள்ளவர்க்கும் பாகற்காய் அருமருந்தாகும்.

பாகற்காயை வற்றல் போடவேண்டும் எனில் நன்கு கழுவிக் கொண்டு வில்லைகளாக நறுக்கிக் கொள்ல வேண்டும். அவற்றோடு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொஞ்சம் தயிர் விட்டுக் கலந்து வைக்கவேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு ஊறிய பாகற்காயைப்பிழிந்து போட்டுக் கொஞ்சம் மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து எடுக்கலாம்.

நீண்டநாட்கள் வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒரு இரவு பாகற்காயை தயிர், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி கலந்த கலவையில் ஊற வைத்து மறு நாள் அவற்றை நன்கு பிழிந்து ஒரு பெரிய தட்டில் அல்லது துணியில் பரத்தி வெயிலில் தொடர்ந்து 2,3 நாட்கள் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதைத் தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளலாம். 

6 comments:

  1. பாகற்காய் சிப்ஸ் கிடைக்கிறது.
    அடையார் ஆனந்த பவன் லே.
    மொரு மொரு என்று இருக்கிறது.
    சற்று உறைப்பு கூட இருக்கிறது.

    சின்ன பாகற்காயை நாங்கள் மெது பாகற்காய் என்று சொல்வது உண்டு.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. நாங்க வெளியே சிப்ஸ், வறுவல் போன்றவை வாங்குவதில்லை. என்ன எண்ணெயில் தயாரிப்பாங்களோனு யோசனை! எப்போவானும் யாரானும் வாங்கிட்டு வந்தால் தான். பொதுவாக வீட்டிலேயே பண்ணிடுவேன். சின்னப் பாகற்காயை மெது பாகல் என்று சொல்லியும் கேட்டிருக்கேன். இங்கே திருச்சியில் அதலக்காய் என்கிறார்கள். மேலே மொழுமொழுவென இருக்கு!

      Delete
  2. பாகற்காய் அவசியம் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் பாகற்காயைப் பற்றிய விளக்கமானப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நிறைய சாப்பிடுங்க, நல்லா இருக்கும், சப்பாத்திக்குக் கூடப் பண்ணலாம். இந்த வலைப்பக்கத்திலேயே செய்முறையும் கொடுத்தேன் முன்னர்! தேடிப் பார்த்துச் சுட்டியைத் தருகிறேன்.

      Delete
  3. மிக நன்றி கீதா. மிதிபாகல்னு பாட்டி வாங்கி வருவார். எல்லோருக்கும் மிகப் பிடிக்கும்.
    ராஜிசிவம் சொல்லி இருப்பது போல நல்லதும் கூட.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரேவதி, பாகல் உடலுக்கு நல்லது தான். :)

      Delete