எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, August 19, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்

சிறுநீரகக் கல் கரைய நெல்லிக்காய்ச் சாறு எடுத்துக் குடிக்கலாம். இத்துடன் இஞ்சி சேர்க்கவேண்டும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிக் கொண்டு அத்துடன் இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் துண்டுகளாக்கிச் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். அப்படியே நீர் சேர்த்துக் கொண்டு தேன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது வடிகட்டிக் கொண்டு சர்க்கரை, தேன், உப்பு ஒரு சிட்டிகை, ஜீரகத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கலந்தும் குடித்து வரலாம். இரண்டுமே பயன் தரக் கூடியது!  ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு அதிகம். தலை மயிர் நன்கு செழித்து வளரவும் நெல்லிக்காயைக் காயவைத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துத் தைலம் காய்ச்சித் தேய்த்து வரலாம்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் தினம் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் மற்றும் பாகல்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்துத் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் தரும். இது அனுபவத்தில் கண்டது. இதன் மூலம் நாள்பட்ட அல்சரும் குணமாகும். தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான வைடமின் சி கிடைப்பதோடு, மலச்சிக்கல் இல்லாமலும், கட்டுப்பாடான உயர் ரத்த அழுத்தத்துடனும் இருக்கும் என்பதோடு குண்டானவர்களுக்கு உடல் எடையும் குறையும். நெல்லிக்காயை எப்படிச் சமைத்து உண்டாலும் அதன் சத்துகள் வீணாவதில்லை. நெல்லிக்காயை ஊறுகாயாகவும் செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய்: தேவையானன் பொருட்கள்

அரைக்கிலோ நாட்டு நெல்லிக்காய் அல்லது மலை நெல்லிக்காய்

உப்பு தேவையான அளவு

மிளகாய்த் தூள் கால் கிண்ணம் (அவரவருக்குத் தேவையான காரத்துக்கு ஏற்ப)

நல்லெண்ணெய் அரைக்கிண்ணம்

கடுகு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்தது ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்

நெல்லிக்காயைக் குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். வெந்த நெல்லிக்காயிலிருந்து கொட்டைகளைப் பிரிக்கவும். கொட்டைகளும் பயன்படும். பிடிக்குமெனில் அவற்றையும் காய வைத்துப் பயன்படுத்தலாம். இப்போது வெந்த நெல்லிக்காயைத் தனியே வைக்கவும். ஓர் வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய வைத்துக் கடுகு சேர்க்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். வெந்து எடுத்திருக்கும் நெல்லிக்காயை அதில் சேர்க்கவும். மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து நன்கு கிளறவும். பத்து நிமிடம் போல் கிளறிய பின்னர் கடுகு, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கவும். ஆறிய பின்னர் பயன்படுத்தவும். இது விரைவில் வீணாகிவிடும் என்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

நெல்லிக்காய்த் தொக்கு

நெல்லிக்காய்களைத் துருவிக் கொள்ளவும். துருவல் இரண்டு கிண்ணம்

புளி ஒரு எலுமிச்சை அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்

தேவையான உப்பு

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கடுகு, வெந்தயப் பொடி தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய்

கடுகு, பெருங்காயம்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடு செய்யவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு மஞ்சள் தூளும் போட்டபின்னர் புளிச்சாறை விட்டுக் கொஞ்சம் கொதிக்கவிடவும். பின்னர் துருவி வைத்திருக்கும் நெல்லிக்காயைச் சேர்த்து மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது கடுகு, வெந்தயப் பொடி சேர்க்கவும். ஒரு கிளறு கிளறிவிட்டுக் கீழே இறக்கவும். ஆறிய பின்னர் பயன்படுத்தவும். புளி சேர்ப்பதால் சிலருக்குப் பிடிக்காது.