எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, October 31, 2016

பொரிச்ச குழம்பா அல்லது மொளகூட்டலா? எது சரி? :)

உணவே மருந்து தொடர் தான் தொடரணும். ஆனால் இன்று நெல்லைத் தமிழன் எங்கள் ப்ளாகில் போட்டிருந்த புடலைப் பொரிச்ச குழம்பைப் பார்த்ததும் இங்கே கொஞ்சம் விளக்கம் எழுதலாம்னு கை துறு துறு! நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பது முழுக்க முழுக்கப் பொரிச்ச குழம்பு வகையே! ஏனெனில் மிளகூட்டல் அல்லது மொளகூட்டல் என்றால் அதுக்கு மிளகு வைக்கவே கூடாது. :) இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். பொரிச்ச குழம்புக்கும் மிளகூட்டல் அல்லது மொளகூட்டலுக்கும் வித்தியாசம் உண்டு.

அதோடு பொரிச்ச கூட்டையும் சிலர் இப்படித் தான் ஜீரகம் வைத்துத் தேங்காய் சேர்த்து அரைத்துட்டுப் பொரிச்ச கூட்டுனு சொல்றாங்க. உண்மையில் பொரிச்ச கூட்டுக்குப் பருப்பே போட வேண்டாம். காய்களை நறுக்கிக் கொண்டு அலம்பிப் போட்டு லேசாக நல்லெண்ணெயில் ஒரு வதக்கு வதக்கிக் கொண்டு நீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொண்டு வெறும் தேங்காயும்,கொஞ்சம் ஊற வைத்த அரிசி அல்லது அரிசி மாவு சேர்த்து அரைத்துக் காயில் கலந்து ஒரு கொதி விட்டுப் பின்னர் கடுகு, உபருப்பு, கருகப்பிலை, மி.வத்தல் தாளித்தால் பொரித்த கூட்டு!

அல்லது காய்கள் வேகும்போதே ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து உப்போடு வேக வைத்துப் பின் தேங்காய், அரிசி மாவு அரைத்துக் கலப்பதும் பொரித்த கூட்டு வகை தான். ஆனால் பொரித்த கூட்டுக்கு நாட்டுக் காய்கள் தான் நன்றாக இருக்கும். உதாரணம் புடலை, கத்திரி, அவரை, கொத்தவரை போன்றவை. அபூர்வமாகச் சில சமயம் சௌசௌவும் பொரித்த கூட்டுக்கு எடுபடும். இதில் கொத்தவரையில் பொரித்த கூட்டுச் செய்கையில் கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொத்தவரை வேகும்போது சேர்த்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் உப்போடு சேர்த்து வேக வைத்துக் கொண்டு, தேங்காயத்துருவலை அரைத்து விடாமல் தாளிதத்தில் போட்டு வறுத்துக் கொட்டுவதும் ஒரு முறை பொரிச்ச கூட்டு.

ஆனால் பொரிச்ச குழம்பு என்றால் மி.வத்தல், மிளகு, உபருப்பு, தேங்காய்த் துருவல் வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இதற்குப் பாசிப் பருப்பு மட்டும் போதும். மொளகூட்டல் எனில் துவரம்பருப்புச் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். அல்லது துவரம்பருப்பும் பாசிப்பருப்பும் கலந்தும் போடலாம்.  மொளகூட்டலுக்கு இரண்டு, மூன்று காய்கள் கலந்தும் போடலாம். நாட்டுக்காய்கள் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும். பூஷணி, பறங்கி, அவரை, கத்திரி, புடலை போன்றவற்றில் மொளகூட்டல் நன்றாக இருக்கும். முளைக்கீரையிலும் மொளகூட்டல் செய்வது உண்டு! அதுவும் நன்றாக இருக்கும்.