எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, November 12, 2016

புதுவிதமான மோர்க்குழம்பு சாப்பிட வாங்க!

நமக்குத் தான் மண்டையிலே ஏதானும் ஓடிட்டே இருக்குமா! இன்னிக்கு என்ன சமைக்கிறதுனு ஒரே தலையாய பிரச்னை! நேத்திக்கு தோசைக்காகத் தக்காளித் தொக்கு அரைச்சிருந்தேன். அதிலேயே சாதம் கலக்கலாமானு ரங்க்ஸ் கேட்க சரி கலக்கலாம்னு சொல்லி இருந்தேன். அது முடிவாச்சு! அப்புறம் ரசம். அதை விட முடியாது! ரசம் இல்லைனா சாப்பிட்ட மாதிரியே இருக்காது! என்றாலும் மோர் கொஞ்சம் நிறைய மிஞ்சி இருந்தது. கலந்த சாதத்துக்குப் பச்சடிக்குப் பதிலா மோர்க்குழம்பு வைக்கலாமானு யோசனை. அப்போத் தான் திடீர்னு நினைவில் வந்தது ராஜஸ்தான், குஜராத்தில் வைக்கும் ghகட்டே கி khகடி செய்யலாமானு நினைச்சேன். இது கிட்டத்தட்ட நம்ம ஊர்ப் பருப்புருண்டைக் குழம்பு போலத் தான்! ஆனால் பருப்பு ஊற வைச்செல்லாம் அரைக்க மாட்டாங்க. கடலை மாவிலே செய்வாங்க. செய்முறையைப் பார்ப்போமா?

கடலை மாவு ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கு! மிளகாய்ப் பொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடலைமாவோடு உப்பு, பெருங்காயத் தூள், ஓமம், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தயிர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். அரைமணி நேரம் இருக்கட்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்துக் கொதிக்க விடவும். இந்தக் கடலைமாவு பிசைந்ததை உருளை வடிவில் உருட்டி வைக்கவும். உருட்டி வைத்ததை வெந்நீரில் போடவும். வெந்ததும் மேலே மிதந்து வரும். ஹிஹிஹி, பண்ணும்போது படம் எடுக்க மறந்து போச்சுங்க! திட்டாதீங்க! இன்னொரு தரம் பண்ணினால் படம் எடுத்துடறேன்.  மிதந்து வருபனவற்றைத் தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து இப்போக் கடி.


கடியில் போட்ட ghகட்டாக்கள்
மோரை நன்றாகக் கடைந்து கொள்ளவும். கடைந்த மோரில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வறுத்த சீரகப் பொடி, பெருங்காயப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப்பொடி) உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மோர்க் கரைசலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் வெந்து எடுத்திருக்கும் கட்டாக்களைப் போடவும். கட்டாக்கள் மிதந்து வரும்போது மோர்க்குழம்பைக் கீழே இறக்கவும். இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஒரு சின்னத் துண்டு லவங்கப் பட்டை, மிவத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். தாளிதத்தை மோர்க்குழம்பில் ஊற்றவும். பச்சைக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இந்த மோர்க்குழம்பு ஃபுல்கா ரோட்டி, சூடான சாதம் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


khகடி

தக்காளித் தொக்கு

பொதுவாய்த் தக்காளித் தொக்குக்கு மிவத்தல், தக்காளி இரண்டையும் நன்றாக எண்ணெயில் வதக்கிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் பச்சையாகவே பண்ணுகிறேன். மிவத்தல் ஒரு இருபது கால் கிலோ நல்ல சிவப்பான பழுத்த தக்காளி இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு பெருங்காயம் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கொட்டவும். உப்புச் சேர்க்கவும். நன்கு கிளறவும் சிறிது நேரம் நன்கு கொதித்ததும் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆறியதும் ஒரு காற்றுப் புகா டப்பாவில் போட்டு பத்திரப் படுத்தவும். தோசை, சப்பாத்தி, இட்லி, போன்ற எல்லாவற்றிற்கும் இது தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.


தக்காளித் தொக்கு சாதம்

சாதம் கலக்க! சாதத்தை உதிர் உதிராக வடிக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொள்ளவும். இந்தத் தாளிதத்தை எண்ணெயோடு சாதத்தில் கொட்டவும். நினைவாக சாதத்துக்கு ஒரு அரை டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும். ஹிஹிஹி, இன்னிக்குத் தொக்கிலே இருக்கும் உப்புப் போதும்னு சாதத்திலே போடலையா! உப்புப் போறலை! :) பின்னர் உங்கள் ருசிக்குத் தக்கவாறு தேவையான தொக்கைப் போட்டு நன்கு கிளறவும். அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டுப் பின் பரிமாறவும். அரைப் புளியோதரை மாதிரி இருக்கும். :) 

Monday, November 7, 2016

சிய்யம், சுகியம், சீயன், சுய்யம் எதுவேணா சரி!

இது ஒரு பாரம்பரிய பட்சணம் என்றே சொல்லலாம். ஏனெனில் இது சிராத்தங்களில் பரிமாறப்படும் ஓர் பட்சணமாகவும் இருக்கிறது. திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருக்கிறாப்போல் எங்க வீட்டிலும் கிருஷ்ண ஜயந்தி, சரஸ்வதி பூஜை, சில சமயங்களில் ஆவணி அவிட்டம், மற்றும் சிராத்தங்களில் சிய்யம், அல்லது சீயன் செய்யப் படுவது உண்டு. அநேகமா இது தென் மாநில பட்சணங்களில் ஒன்று என்றே நினைக்கிறேன். எனெனில் என் மாமியார் வீட்டில் இதைச் செய்தே பார்த்தது இல்லை. என் ஓரகத்தில் சரஸ்வதி பூஜைக்குச் செய்வதாகச் சொல்லி இருக்கிறாள். ஆனாலும் நான் அதிகம் செய்ததில்லை. ரங்க்ஸுக்கு இது அவ்வளவாப் பிடிக்கலை என்பதே முக்கியக் காரணம். ஆனாலும் இது எனக்குப்பிடிக்கும்.

அம்மா வீட்டில் சிராத்ததில் தேங்காய் சேர்ப்பதில்லை என்பதால் சீயனுக்குப் பருப்புப் பூரணம். அதுவும் பாசிப்பருப்புப் பூரணம் வைத்திருப்பார்கள். மற்ற நாட்களில் பண்டிகை தினங்களில் திரு நெ.த. சொல்லி இருப்பது போல் தேங்காய்ப் பூரணம் தான். ஆனால் மேல் மாவுக்கான செய்முறை முற்றிலும் வேறு. இதுக்கு மைதா மாவே பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. பொதுவா சிராத்தம் அன்னிக்கு மைதாவுக்குத் தடா இருக்குமே! அதோடு இதற்கான மாவைத் தயாரிப்பதில் தான் சீயனின் ருசியும் அடங்கி இருக்கிறது. இதற்கு அரிசியை ஊற வைத்துப் பின் நீரை வடிகட்டிப் பின்னர் மிக்சியில் அல்லது மிஷினில் பொடியாக்கிய அரிசி மாவு வேண்டும். சிராத்தம் அன்று எல்லா மாவுகளும் அப்போதே தயாரிக்கப்படும். மற்ற நாட்களில் அரிசி மாவை மட்டும் முன்னாடியே தயாரிச்சு வைப்பாங்க. என் அம்மா அந்தக் காலத்தில் கையால் திரிக்கும் இயந்திரத்தினால் மாவு திரிச்சு வைப்பாங்க. இல்லைனா கல் உரலில் போட்டு இடித்துச் சலித்து எடுத்துக்கணும். இப்போதெல்லாம் ஈர அரிசியே மிஷினில் அரைத்துக் கொடுப்பதால் அப்படி அரைச்சு வாங்கி வைச்சுக்கலாம்.

இப்போ அடுத்துச் செய்ய வேண்டியது, சீயன் தயாரிக்கத் தேவையான பொருட்கள்.

ஒரு அரைக்கிண்ணம் அரிசி மாவு

உளுந்து ஒரு கிண்ணம் குவியலாக

உப்பு தேவைக்கு

சீயனுக்கான பூரணம் தயாரிக்க

தேங்காய் நடுத்தரமாக ஒன்று

வெல்லம் பாகு வெல்லம் சுத்தமானதும் தூளாக்கியதும் இரண்டு கிண்ணம்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

உளுந்தை ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்கு தளதளவென்று அரைத்துக்கொள்ளவும். அரைத்து எடுத்த உளுந்து மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்துக் கலக்கவும். கலந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
தேங்காயைத் துருவி எல்லாத் துருவலையும் எடுத்துக் கொள்ளவும். வெல்லம் சுத்தமானதாக இருந்தால் தேங்காய்த் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்தே ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டுக் கிளறிப் பூரணம் தயாரிக்கலாம். வெல்லம் அழுக்காக இருந்தால் வெல்லத் தூளை நீரில் கரைத்து வடிகட்டி அழுக்குகளை எடுத்து விட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். பின்னர் அந்தப் பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளற வேண்டும். கிளறிய பூரணத்தில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து ஆற விட வேண்டும். ஆறிய பின்னர் ஒரு சின்ன எலுமிச்சை அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு கலந்து வைத்திருக்கும் மாவில் போட்டு முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.உங்கள் சீயன்கள் மேலே மொறு மொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும், தித்திப்பாகவும் வரும்.
Image result for சுகியம்

படத்துக்கு நன்றி தினமணி.காம். வலைப்பக்கம் கூகிளார் வாயிலாக

இந்த மாவையே காலையில் அரைத்துக் கலந்து வைத்து விட்டு அப்படியே வைத்திருந்து மாலையில் மாவில் கடுகு, உபருப்பு, கபருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் தாளித்துக் கரண்டியால் எண்ணெயில் எடுத்து ஊற்றி வெள்ளை அப்பம் தயாரிக்கலாம். அல்லது குழிச் சட்டியில் ஊற்றிக் குழி ஆப்பமாகவும் தயாரிக்கலாம்.

    

இது நான் முன்னர் பண்ணினப்போ எடுத்த படங்கள். மேல் மாவு தயாரிக்கும் முறை சீயனுக்கும் இதுக்கும் ஒண்ணு தான். மேல்மாவு