எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, January 27, 2017

உணவே மருந்து! மாங்காய் இஞ்சி!

மாங்காய் இஞ்சியை எல்லோருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. இது மாங்காயின் மணத்தோடு இருந்தாலும் பார்க்க இஞ்சி மாதிரி இருக்கும். இஞ்சியைப் போல் அதிகம் நார் இருக்காது. சுவை நன்றாகவே இருக்கும். இதுவும் இஞ்சி, மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்தது தான். இதிலும் மருத்துவ குணம் நிறைய உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இந்தியாவில் இது விளையும் இடங்கள் குஜராத், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம் ஆகிய இடங்களில் அதிகம் விளைகிறது.

Image result for மாங்காய் இஞ்சி

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்.

முதலில் இதன் மருத்துவ குணங்கள் என்ன என்று பார்க்கலாம். இது ஆஸ்த்மா போன்ற நுரையீரல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது. விக்கலுக்குச் சிறந்த மருந்து. ஜுரம், காதுவலி, இருமல் போன்றவற்றிற்கும் நல்லது. வயிறு சம்பந்தமான பிரச்னைகளான வாயுத் தொல்லை, ஜீரண சக்தி, பசியை அதிகரிக்கப் பயன்படுகிறது. மஞ்சளைப் போல் இதுவும் ஓர் ஆன்டி ஆக்சிடென்ட் ஆகப் பயன்படுத்தப்படுவதால் புற்று நோய்க்கும் சிறந்த மருந்து என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. பூஞ்சை நோய், சருமத்தில் ஏற்படும் காயங்கள், தசை வலி, சருமத்தில் அரிப்பு போன்றவற்றிற்கும் மாங்காய் இஞ்சி சிறந்த மருந்தாகும்.

மாங்காய் இஞ்சி, காரட், பீட்ரூட், புதினா கலந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். அல்லது தேநீரில் இஞ்சியோடு சேர்த்து மாங்காய் இஞ்சியையும் போட்டுத் தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதய நோய்க் காரர்களும் மாங்காய் இஞ்சியை எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொஞ்சம் போல் உப்புப் போட்டு ஊறுகாயாகச் சாப்பிடலாம். இப்போது நான் நேற்றுப் போட்ட மாங்காய் இஞ்சித் தொக்கு செய்முறை. நான் வெறும் மாங்காய் இஞ்சி மட்டும் போடலை. பச்சை மஞ்சள் (இங்கே நிறையக் கிடைக்கிறது.) இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன்.
தேவையான பொருட்கள்:

மாங்காய் இஞ்சி 100 கிராம்

இஞ்சி சுமார் 50 கிராம்

பச்சை மஞ்சள் 100 கிராம்

பச்சை மிளகாய் 50 கிராம்

பெருங்காயம் கட்டி எனில் ஒரு துண்டு

உப்பு தேவைக்கு

புளி ஒரு எலுமிச்சை அளவுக்குக் கொஞ்சம் போல் நீரில் ஊற வைக்கவும். அப்போத் தான் அரைக்கச் சௌகரியமாக இருக்கும்.

தாளிக்க நல்லெண்ணெய் 100 கிராம்

கடுகு

ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள் (தேவையானால்)

நல்லெண்ணெயைக் கடாயில் ஊற்றிக்கொண்டு முதலில் இஞ்சி, மாங்காய் இஞ்சி, மஞ்சளை வதக்கிக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாயை வதக்கவும்.எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.

கீழே வதக்கிய பச்சைமிளகாய், புளி, உப்புச் சேர்த்துப் பெருங்காயத்துடன் மிக்சி ஜாரில்! இதைக் கொஞ்சம் அரைத்துக் கொண்டு பின்னர் மாங்காய் இஞ்சி, இஞ்சி, மஞ்சள் கலவையைப் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.


மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி வதக்கிக் கொண்டிருக்கையில்



எல்லாவற்றையும் அரைத்த விழுது


அரைத்த பின்னர் மீண்டும் கடாயில் நூறு கிராமுக்குக்குறையாமல் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக்கொண்டு அரைத்த விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்க வேண்டும். இறக்கும் முன்னர் அதில் வெல்லத் தூளைச் சேர்த்துக்கொண்டு சற்று வதக்கிய பின்னர் கீழே இறக்கி ஆறியதும் கண்ணாடி பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.  இதையே பச்சை மிளகாய் போடாமல் மிளகாய் வற்றல் வறுத்துக் கொண்டு அரைத்துச் சேர்க்கலாம். அல்லது எல்லாவற்றையும் வதக்காமல் புளி சேர்த்துப் பச்சையாக அரைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு தாளித்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டு மிளகாய்ப் பொடி, உப்புச் சேர்த்தும் அரைக்கலாம். ஆனால் இதை நீண்ட நாட்கள் வைக்க முடியாது. சீக்கிரம் செலவு செய்ய வேண்டும். 



இது செய்யும்போது நினைவாகப் படம் எடுத்தேனா, ரங்க்ஸ் பார்த்துட்டுச் சிரிச்சார். இதை எல்லாம் யாரு பார்ப்பாங்கனு கிண்டல்! எல்லோரும் வந்து பார்த்துட்டுக் கருத்துச் சொல்லுங்கப்பா!