எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 13, 2017

உணவே மருந்து! முருங்கை!

இன்னைக்கு முருங்கைக்காய்தான் சாம்பார். அதிலே போட்டும் இன்னும் 2 நாளைக்கு வரும் முருங்கைக்காய்கள்! :) அது போகட்டும். சாம்பாரில் எந்தத் தான் போடுவதாக இருந்தாலும் பூஷணி, பறங்கி, முள்ளங்கி தவிர மற்ற எந்தத் தானாக இருந்தாலும் கொஞ்சம் வதக்கிட்டுச் சேர்த்தால் நிறமும் மாறாது. சுவையும், வாசனையும் கூடும். வெண்டை, முருங்கை, கத்திரி, வெங்காயம், தக்காளி, குடமிளகாய் போன்ற எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வதக்கிட்டுச் சேர்ப்பேன். இனி முருங்கைக்காய் சாம்பார் செய்முறை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் ஒரு முறை!

துவரம்பருப்பு அரைக்கிண்ணம் நன்கு குழைய வேக வைத்தது. (நான் கல்சட்டியிலேயே வேகப் போட்டுவிடுவேன்)

புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொண்டது 3 கிண்ணம் அளவு.

உப்பு தேவையான அளவு

சாம்பார்ப் பொடி போடும் வழக்கம் எனில் சாம்பார்ப் பொடி. நான் அரைத்து விடுவேன். அரைத்து விட்டால் தான் எனக்கு அது சாம்பார்! ஆகவே கீழ்க்கண்ட சாமான்களை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்

சிவப்பு மிளகாய் வற்றல் 2 அல்லது 3

தனியா(கொத்துமல்லி விதை) ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

சாம்பாரில் போட முருங்கைக்காய்த் தான்கள். குறைந்த பட்சமாக ஒரு முருங்கைக்காயின் தான்கள் தேவைப்படும். அவரவர் வீட்டில் சாப்பிடும் அளவைப் பொறுத்து 2 அல்லது 3 வரை சேர்க்கலாம்.

தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை. கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்  பச்சை மிளகாய் தேவையான சின்னதாக ஒன்று

சாம்பாரே கெட்டியாக வந்துவிடுவதால் நான் எப்போவுமே மாவு கரைத்து ஊற்றுவதில்லை. மாவு ஊற்றினால் சாம்பாரின் உண்மையான சுவை தெரியாமல் போய்விடும் என்னும் கருத்து எனக்கு! ஆகையால் மாவே விடமாட்டேன். மாவு வேண்டும் என்கிறவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசிமாவை நீர் விட்டுக் கரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்போக் கடாய், உருளி அல்லது கல்சட்டியில் அடியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முருங்கைக்காய்களைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  இதனுடனேயே பச்சை மிளகாயையும் போட்டு வதக்கிக் கொள்ளலாம். கரைத்து வைத்த புளி ஜலத்தைச் சேர்த்து உப்பும் சேர்க்கவும். சாம்பார்ப் பொடி போடுவதெனில் சாம்பார்ப் பொடி 2 அல்லது 3 டீஸ்பூன் அவரவர் காரத்திற்கு ஏற்பச் சேர்க்கவும். பொடி வாசனை போகக் கொதித்த பின்னர் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். சாம்பார் கெட்டியாகவும் இல்லாமல் ரொம்பவே நீர்க்கவும் இல்லாமல் நிதானமாக இருக்கும். இந்நிலையில் அடுப்பில் இன்னொரு பக்கம் இரும்புக் கரண்டி அல்லது சின்ன வாணலியை வைத்துத் தாளிக்க எண்ணெய் ஊற்றவும். கடுகு, வெந்தயம், மிளகாய்வற்றல் சேர்த்துக் கருகப்பிலையைப் போட்டு வதக்கவும். அப்படியே எண்ணெயோடு சாம்பாரில் கொட்டவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். சாம்பார் நீர்க்க இருக்கும் எனத் தோன்றினால் கரைத்து வைத்துள்ள அரிசி மாவைச் சேர்த்து ஒரு கொதி விடவும். சாம்பார் பரிமாறத் தயார்.

அரைத்து விட்ட சாம்பார்

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் (தேங்காய் உட்பட) வறுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தானைப் போட்டு வதக்கிப் புளி ஜலம் சேர்த்த பின்னர் உப்புச் சேர்த்துக் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் அரைத்த விழுதையும் வெந்த பருப்பையும் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். சாம்பார் நிதானமான பக்குவத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயில் கடுகு, வெந்தயம், மி.வத்தல், பச்சை மிளகாய்(சேர்க்கவில்லை எனில்) கருகப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியைச் சேர்த்துப் பரிமாறவும். இதுக்குப் பொடியே போட வேண்டாம். 

Monday, June 12, 2017

உணவே மருந்து! முருங்கை!

எல்லா வீட்டிலேயும் முருங்கைக்காயைச் சாதாரணமாக வாங்கிச் சமைக்கலாம். ஆனால் நம்ம வீட்டிலோ கதையே வேறே மாதிரி! முருங்கைக்காயால் எங்க ரெண்டு பேருக்கும் "கத்தி"  யுத்தம் நடக்கும்.  ஏற்கெனவே வாங்கின முருங்கைக்காய் இருக்கும்போதே போன வாரம் மேலும் இரண்டு முருங்கைக்காய்கள் வந்தன. அப்போவே சொல்லிட்டேன். ஏற்கெனவே முருங்கைக்காய்கள் இருக்கு! அதோட 7 ஆம்தேதி சென்னை போயிட்டு 8 ஆம் தேதி தான் திரும்பறோம். இரண்டு நாட்கள் சமையல் கிடையாது என! வந்து உபயோகம் செய்துக்கோனு சொன்னாரா! அப்படியே வைச்சால் கூடு விட்டுக்கும்னு துண்டங்களாக நறுக்கி வைச்சிருந்தேன். கிளம்பும் முதல் நாள் முருங்கைக்காய் போட்டு வெறும் குழம்பு வைத்தேன். பழைய துண்டங்களைத் தான் போட்டிருந்தேன். குழம்பில் தானும் அதிகம் போடக் கூடாது என்பார்! அப்புறமா எப்படிச் செலவு செய்யறது!

இப்போப் பாருங்க ஊரிலேருந்து வந்ததும் வெள்ளிக்கிழமை முருங்கைக்காயில் சாம்பார் செய்தேன், சனியன்று  மறுபடி ஒரு முருங்கைக்காய்! ஏற்கெனவே முருங்கைக்காய்கள் இருக்க, திங்களன்று வாங்கின இரண்டு காய்களின் துண்டங்கள் வேறே காத்திருக்க இன்னும் ஒரு முருங்கைக்காயா? கிட்டத்தட்ட மயக்கம் போடும் நிலைக்கு ஆயிட்டேன்னா பாருங்க! "கத்தி" சண்டை தான்!  அன்னிக்குப் பருப்புருண்டைக் குழம்பு வைச்சதாலே முருங்கைக்காயைப் போட முடியலை! நேற்று மறுபடி முருங்கைக்காய்க் குழம்பு! வேறே காயே மறந்துடுமோனு தோணுது! :))))

விடுங்க, நம்ம ராமாயணம் தீராத ஒன்று! முருங்கைக்காய் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து! அதைக் கேட்டதில்/படிச்சதில் இருந்து தான் நம்ம ரங்க்ஸ் முருங்கை மோகராக மாறி விட்டார்! இல்லைனா ஜாஸ்தி வாங்கினதில்லை. பாவம்! எப்படியானும் சர்க்கரை குறையணும்னு ஒரே எண்ணம்! அதோடு வலியையும் குறைக்கும்னு சொல்றாங்களா! அப்புறம் வேறே என்ன வேணும்? முருங்கைப் பூக்கள் கூட சத்து நிறைந்தது என்றும் ஆண்களின் விந்துப் பிரச்னையைச் சீராக்குவதாகவும் தெரிய வருகிறது.  நாக்கில் உணவு சுவைக்காமல் இருந்தால் முருங்கைப் பூவைச் சமைத்துச் சாப்பிடலாம்.

முருங்கை ஈர்க்கு, கருகப்பிலை ஈர்க்கு இரண்டையும் சம அளவில் போட்டு சுமார் பத்துகிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாதியாகச் சுண்ட விட்டுக் குடித்து வர வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி உணவு உண்ணும் முன்னர் ஒரு பிடி சாப்பிட்டு வரக் கண் பார்வை தெளிவடையும். கீரையை வேக வைத்தும் சாப்பிடலாம். நெய்யில் வெங்காயம், முருங்கைக்கீரையை வதக்கி மிளகு, ஜீரகம், உப்புச் சேர்த்து சாதத்தோடு சேர்த்தும் சாப்பிடலாம்.  தலைவலிக்கு முருங்கை இலையோடு மிளகைச் சேர்த்து நசுக்கிச் சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை மரத்தின் பிசினை எடுத்து உலர வைத்துக் கொண்டு தூளாக்கி அரைத்தேக்கரண்டி பிசினோடு காய்ச்சிய பசும்பாலைக் கலந்து சாப்பிட்டு வர உடலில் தெம்பு ஊறும். உடல் நல்ல பலம் பெறும். வைடமின் ஏ மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். ரத்த விருத்திக்கும் நல்லது.  பத்திய உணவிலே கூட முருங்கைக்கீரை, காய்கள், பூக்கள் முக்கியமான இடம் பெறுகின்றன. 

Sunday, June 11, 2017

உணவே மருந்து! முருங்கை!

அநேகமாக முருங்கைக்காய் பிடிக்காதவங்க இருக்கமாட்டாங்க. ஆனால் எனக்குப் பிடிக்காது. அதைச் சாப்பிடவே அலுப்பாக இருக்கும். என்றாலும் முருங்கைக்கீரையைச் சமைப்பேன். முருங்கைப் பூவையும் சமைப்பேன். முருங்கைப்பூவைப் பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டுச் செய்யலாம்.முருங்கைக்கீரையையும் நெய் சேர்த்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கலாம். அல்லது பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டு, கறி செய்யலாம். எளிதில் ஒடிக்கக் கூடிய கிளைகள் இருப்பதால் இதற்கு முருங்கை என்று பெயர் என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பிரச்னை என்னவெனில் முருங்கை மரத்துக்குக் கம்பளிப் பூச்சி வரும் என்பதால் இந்த மரத்தை வளர்க்கையில் அக்கம்பக்கத்தவர் ஆக்ஷேபணை கிளப்புவார்கள். கிளப்பி இருக்கிறார்கள். மரத்தை வெட்டிட்டோம். :)

Image result for முருங்கை


படத்துக்கு நன்றி கூகிளார்

முருங்கை மரம் 30 அடி வரை வளரும். பெரும்பாலும் தென்னிந்தியர்களே இதை அதிகம் சாப்பிட்டு வந்தாலும் இதன் பூர்விகம் இமயமலை அடிவாரம் என்கிறார்கள். வடக்கே ராஜஸ்தானில் நாங்க இருந்தப்போ முருங்கைப் போத்துத் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சென்று நட்டு வளர்த்தோம். :) பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், ஃபிலிப்பைன்ஸ், ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. இது அதிகம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில்காணப்பட்டாலும், இலங்கையிலும் உள்ளது.  தாய்லாந்து, தாய்வானிலும் காணப்படுவதாகச் சொல்கின்றனர்.

எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடிய முருங்கை வறண்ட, நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள, வெப்பம் அதிகமான பகுதியிலும் கூட நன்கு வளரக் கூடிய இயல்பு உள்ளது.  இது ஓராண்டுப் பயிர் என்கின்றனர். நட்டு வளர்ந்து ஆறு மாதத்தில் பயன் கொடுக்கும். ஒரு மரத்திற்கு 200 முதல் 300 வரை காய்கள் கிடைக்கலாம்.  மூலிகை மருத்துவத்தில் முருங்கை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இதன் இலை சத்து அதிகம் உள்ளது. நஞ்சு எதிர்ப்பு மற்றும்நீர் சுத்திகரிப்புக்குப் பயன்படும்.  இதன் இலைகளில் வைடமின் பி, சி, கே, புரோவிடமின் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின், மங்கனீசு மற்றும் புரதம் ஆகியவை அடங்கியுள்ளதால் உடல் தெம்புக்கும் சத்தான உணவுக்காகவும் இதைப் பரிந்துரை செய்கின்றனர்.  ரத்தத்தை சுத்திகரித்துக் கிருமிநாசினியாகச் செயல்படுவதால் தோலைப் பளபளப்பாக வைப்பதோடு அல்லாமல் முகப்பருக்கள் வராமல் தடுப்பதாகவும் சொல்கின்றனர்.