எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 30, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாத் துவையல்: ஒரு கட்டுப் புதினா! நிறையப் பேர்ன்னா ஒரு கட்டு பத்தாது. ஆய்ந்து வதக்கினால் கொஞ்சமா ஆகி விடும். ஆகவே அதற்குத் தகுந்தாற்போல் எடுத்துக்கவும். இங்கே இரண்டே பேர்களுக்கான அளவைச் சொல்லி இருக்கேன்.

புதினா ஒரு கட்டு

மிளகாய் வற்றல் நான்கு(காரம் அதிகம்னால் இரண்டே போதும்.)

புளி ஒரு சின்ன அரிநெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

கடுகு, உ.பருப்பு, ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

வதக்க நல்லெண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெயில் எல்லாம் வதக்கினால் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் மி.வற்றலைப் போட்டுக் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். புதினாக்கட்டை நன்கு பிரித்து ஆய்ந்து கழுவி நீரை வடிய விட்டு எண்ணெயில் போட்டு நன்கு சுருள வதக்கவும். எல்லாம் ஆறினதும் மிக்சி ஜாரில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், புளி போட்டு முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் வதக்கிய புதினாவைப் போட்டு அரைக்கவும். எடுக்கும்போது வறுத்த கடுகு, உபருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுத்துவிடவும். கரகரவென இருக்கட்டும். சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

புதினா சட்னி

புதினா ஒரு கட்டு

பச்சை மிளகாய் நான்கு அல்லது ஆறு காரத்திற்கு ஏற்றாற்போல்

இஞ்சி ஒரு துண்டு

உப்பு

எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். இதற்குப் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். விருப்பம் எனில் சேர்க்கலாம். இதைக் கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டு சாட் செய்யும் நாட்களில், பானி பூரி சாப்பிடும் நாட்களில், பேல்பூரி கலந்தால் அப்போது இரண்டு ஸ்பூன் சட்னிக்குக் கால் கப் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதன் மேல் ஊற்றிக் கொண்டு இனிப்புச் சட்னியும் சேர்த்துச் சாப்பிடலாம். தயிர் வடை வட இந்திய முறையில் பண்ணுவதற்கும் இதை விட்டுக் கொள்ளலாம்.

புதினாவோடு காய்களையும் சேர்த்து வதக்கிக் கொண்டு சப்பாத்திக்கு சைட் டிஷ் பண்ணலாம்.

புதினா ரைஸுக்குப் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினாவை உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்/ சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதற்குத் தக்காளி வேண்டாம். வெங்காயம் பாதி வதங்குகையில் அரைத்த விழுதைப்போட்டுக் கிளறவும். நன்கு எண்ணெய் பிரிந்ததும் சாதத்தை அதில் சேர்த்து மெதுவாகக் கிளறிக் கொண்டே நன்கு கலக்கவும்.  உப்புப் பார்த்துக் கொண்டு தேவை எனில் கொஞ்சமாய் உப்புச் சேர்க்கவும். இதற்குப் பச்சைப் பட்டாணியாகக் கிடைத்தால் வாங்கித் தோலுரித்துச் சுத்தம் செய்து வெங்காயம் வதக்குகையில் கூடப் போட்டு வதக்கிச் சேர்க்கலாம். காய்ந்த பச்சைப்பட்டாணியைச் சேர்ப்பது எனில் முதல் நாளே ஊற வைத்துவிட்டு மறுநாள் சாதம் வடிக்கையில் அதோடு சேர்த்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு பிடிக்காதவர்கள் புதினா அரைக்கையில் பூண்டு சேர்க்காமல் இஞ்சி மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 

Tuesday, December 26, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாவின் வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. புதினாவே சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். நான் கல்யாணமாகி வந்ததும் மாமியார் வீட்டில் புதினாத் துகையல், சட்னி பற்றிச் சொன்னப்போ அவங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு! அதென்ன கீரை? அதைச் சாப்பிடுவாங்களானு கேட்டாங்க! நம்ம ரங்க்ஸும் எட்டு வருடத்துக்குப் புனேயில் குடித்தனம் பண்ணினாலும் புதினா ஜாஸ்தி சாப்பிட மாட்டார்! அப்புறமாச் சாப்பிட ஆரம்பிச்சதும் ஒத்துக்காமல் நெஞ்செரிச்சல் வர ஆரம்பிச்சது! ஆகவே இப்போவும் புதினா வாங்கினால் நான் மட்டும் தான்!

ஊட்டியில் தோட்டத்தில் புதினா படர்ந்து இருக்கும். அவ்வப்போது பறித்துக் கொள்வேன். வடமாநிலத்தவர் செய்யும் பஜியாவுக்குப் புதினா சேர்த்தால் மணம்! சப்பாத்திக்குச் செய்யும் உ.கி. குடைமிளகாய்க் கறியில் புதினா சேர்க்கலாம்.பச்சைப்பயறு சாதத்துக்கு வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களோடு வதக்குகையில் புதினாவையும், பச்சைக்கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் சாதம் மணமாக இருக்கும்.

வயிறு உப்புசமாக இருந்தால் புதினாவைக் கஷாயம் போட்டுக் குடிக்கலாம். நான் தனியா(கொத்துமல்லி விதை), இஞ்சி, சோம்பு ஆகியவற்றோடு புதினாவையும் சேர்த்து அரைத்துச் சாறெடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைப்படும்போது அளவான சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் நீர் சேர்த்துக் குடிப்பேன். இது ஜீரணத்துக்கு நல்லது! பச்சைப் புதினவைப் பறித்து வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம், பல் கூச்சம் மறையும். வட மாநிலங்களில் செய்யும் சாட் வகையறாக்களுக்குப் புதினாச் சட்னி மிகச் சிறந்த ஜோடி!

புதினாச்சாறினால் உடல் பருமன் கூடக் குறையும் என்கின்றனர். ஆஸ்த்மா நோயாளிகளுக்குச் சளி, இருமல், மூக்கடைப்புப் போன்றவற்றிற்குப் புதினா மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.  நெஞ்செரிச்சல் தீரும் என்று சொன்னாலும் ஏற்கெனவே அசிடிடி உள்ளவர்களுக்குப் புதினா சாப்பிட்டால் ஒத்துக்கொள்வதில்லை என்றே தெரிகிறது.  வயிற்றுப் போக்கு, காலரா போன்றவற்றிற்கும் புதினா நல்ல மருந்து. தோல் பொலிவுறும்.
Image result for புதினா

தொடரும்!